விருதுநகர் கூட்டு பாலியல் பலாத்கார கொடுமை.. சிக்கிய 4 சிறுவர்களிடம் சிபிசிஐடி தீவிர விசாரணை
விருதுநகர்: பட்டியலின இளம் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைதான 4 சிறுவர்களிடம் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணையை தொடங்கினர்.
Recommended Video
விருதுநகரில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த 22 வயது பட்டியலின இளம்பெண்ணை திமுக இளைஞரணி நிர்வாகிகள் இருவர், பள்ளி மாணவர்கள் உட்பட 8 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பாதிக்கப்பட்ட இளம்பெண்ணிடம் திமுக இளைஞரணியை சேர்ந்த ஹரிஹரன் காதலிப்பதுபோல் நடித்து தனிமையில் இருந்தபோது அதை செல்போனில் வீடியோ எடுத்து மிரட்டி, தனது நண்பர்கள் உட்பட மொத்தம் 8 பேருடன் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் புகாரளித்தார்.

8 பேர் அதிரடி கைது
தனக்கு உதவுவதாக கூறிய மாடசாமி என்பவரும் வீடியோவை பெற்றுக்கொண்டு மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தாக அந்த பெண் காவல்நிலையத்தில் அளித்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. விருதுநகர் ஊரக காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் திமுக நிர்வாகி ஹரிஹரன், ஜுனைத் அகமத், மாடசாமி, பிரவீன் மற்றும் பள்ளி மாணவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திமுகவிலிருந்து நீக்கம்
இளம் பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்ட ஜூனைத் அகமதை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கி திமுக தலைமை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி விருதுநகர் இளம்பெண் ஒருவரை திமுக பிரமுகர் உட்பட 8 பேர் சேர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி அவரது வாழ்க்கையை சீரழித்ததற்கு திமுக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றம்
இது குறித்து சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுநகர் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்று தரப்படும் எனவும் உறுதி அளித்தார்.

வழக்கு விசாரணை தீவிரம்
இதனை தொடர்ந்து வழக்கை கையில் எடுத்த சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணையில் இறங்கி இருக்கின்றனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் செல்போனை தொடக்கத்தில் ஆய்வு செய்த அதிகாரிகள், அவர் கடந்த மாதங்களில் யார் யாருடன் பேசியுள்ளார். அவரை செல்போனில் மிரட்டியவர்கள் யார் என்று விசாரித்தனர்.

கைதானவர்களின் செல்பொன்கள் ஆய்வு
இளம் பெண்ணிடம் பாலியல் வன்கொடுமை ஈடுபட்டதாக கைதானவர்களின் வீடுகளிலும் சிபிசிஐடி போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அத்துடன் அவர்களின் உறவினர்கள், நெருக்கமானவர்களிடம் விசாரணையை மேற்கொண்ட அதிகாரிகள் அவர்களின் செல்போன்களை பறிமுதல் செய்து சைபர் கிரைம் ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். அதில் 4 பேரின் கால் ரிஜிஸ்டர் தொடங்கி அவர்கள் பதிவு செய்த வீடியோவை யார் யாருக்கெல்லாம் பகிர்ந்திருக்கிறார்கள் என்ற தகவலை திரட்டினர்.

சிறுவர்களிடம் விசாரணை
இதனிடையே இந்த வழக்கில் கைதான பள்ளி மாணவர்கள் 4 பேரிடம் சிபிசிஐடி அதிகாரிகள் இன்று விசாரணையை தொடங்கி இருக்கின்றனர். சிறுவர்கள் அடைக்கப்பட்டு உள்ள மதுரை அரசு கூர்நோக்கு இல்லத்துக்கு சென்ற அதிகாரிகள், அவர்களுக்கும் கைதான திமுக முன்னாள் நிர்வாகிகளுக்கும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் இடையிலான தொடர்பு குறித்து விசாரித்து வருகின்றனர். மாணவர்களிடம் பெறப்படும் வாக்குமூலம் இவ்வழக்கில் முக்கியத்துவம் மிக்கதாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications