விருதுநகர் மாவட்ட மக்களே நல்ல செய்தி.. பட்டாசு ஆலைகளை இயக்க மாவட்ட கலெக்டர் அனுமதி
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகள் இயங்க மாவட்ட கலெக்டர் கண்ணன் அனுமதி அளித்துள்ளார். வரும் ஏப்ரல் 20ம் தேதி முதல், 50 சதவீதம் ஊழியர்களுடன் இயங்கலாம் என அனுமதி அளித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தமிழகத்தில் வேகமாக பரவியதால் மார்ச் மாதம் 23 ம் தேதி மாலை 6மணி முதல் ஏப்ரல் 1ம் தேதி வரை தமிழக அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் மார்ச் 24ம் தேதி நாட்டு மக்களிடம் பேசிய பிரதமர் மோடி நாடு முழுவதும் மார்ச் 24ம் தேதி நள்ளிரவு முதல் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என்று அதிரடியாக அறிவித்தார்.

இதன் காரணமாக நாடு முழுவதும் பொதுபோக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. அத்தியாவசிய சேவைகள் தவிர அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக தமிழகத்தில் தொழிற்சாலைகள் எதுவும் இயங்கவில்லை. இந்நிலையில் ஏப்ரல் 14ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைந்த நிலையில் அதை மே 3ம் தேதி வரை நீட்டித்து பிரதமர் உத்தரவிட்டுள்ளார். இதனால் மேலும் 19 நாட்களுக்கு அனைத்தும் ஸ்தம்பிக்கும் நிலை உள்ளது.
எனினும் பிரதமர் மோடி நாட்டின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டும், ஏழைகளின் வாழ்வாதார நிலைகளை கருத்தில் கொண்டும், ஏப்ரல் 20ம் தேதி முதல் கொஞ்சம் கொஞ்சமாக ஊரடங்கு தளர்த்தப்படும் என்று அறிவித்தார். இதன்படி விவசாய கூலி தொழிலாளிகள், பிளம்பர், தச்சர் , கட்டிட பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு சிறுகுறு தொழில்முனைவோர்கள் தொழிலில் ஈடுபடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் பல தொழிற்சாலைகளுக்கும் நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, சாத்தூர் உள்ளிட்ட இடங்களில் 956 பட்டாசு ஆலைகள் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் மூடப்பட்டு இருந்தன. இந்நிலையில் பல்வேறு தொழிற்சாலைகளை இயங்க அரசு அனுமதித்து வரும் நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் வரும் ஏப்ரல் 20ம் தேதி முதல் இயக்கலாம் என்று அம்மாவட்ட ஆட்சியர் கண்ணன் அனுமதி அளித்துள்ளார். பட்டாசு ஆலைகளில் 50 சதவீத ஊழியர்களுடன் பணிகளை தொடர வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளார்.












Click it and Unblock the Notifications