விருதுநகர் அருகே வீட்டு வாசலில் சென்ற அரசு கல்லூரி மாணவி.. எமனாக அங்கேயே காத்திருந்த பாம்பு
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே சித்தலக்குண்டு கிராமத்தை சேர்ந்த அழகுபாப்பா என்ற கல்லூரி மாணவி, தன் வீட்டின் அருகே காட்டுப்பகுதியில் நடந்து சென்றார். அவரை அங்கிருந்த பாம்பு ஒன்று கடித்தது. அவரை மருத்துவமனைக்கு பெற்றோர் உடனடியாக அழைத்து சென்றனர். ஆனால் அந்த பாம்புக்கடி அந்த பெண்ணுக்கு எமனாக மாறியது.
தமிழ்நாட்டில் உள்ள பாம்புகளில் நாகப்பாம்பு, கண்ணாடி விரியன், கட்டுவிரியன் இந்த மூன்று தான் அதிக விஷம் நிறைந்த பாம்புகள் ஆகும்.இந்த மூன்று பாம்புகள் தான் தமிழ்நாட்டில் பாம்புக்கடியால் ஏற்படும் இறப்புகளுக்கு காரணமாக உள்ளன. பாம்புகள் எந்த அளவிற்கு விஷத்தை கக்குகின்றனவோ, அதனை பொருத்து அவர்கள் உயிர் பிழைக்கும் வாய்ப்பு குறைகிறது.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே சித்தலக்குண்டு கிராமத்தை சேர்ந்த மார்க்கண்டன் என்பவருடைய மகள் அழகுபாப்பாவுக்கு 19 வயது ஆகிறது. இவர் செட்டிக்குறிச்சியில் உள்ள அரசு கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். அழகுபாப்பா, தன் வீட்டு அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு சென்றபோது அங்கு அவரை பாம்பு கடித்து விட்டது. இதனால் வலியால் அலறி துடித்த அழகுபாப்பா சிறிது நேரத்திலேயே மயக்கம் அடைந்துவிட்டார்.
உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதற்கிடையில் கல்லூரி மாணவி கண் பார்வையை இழந்ததாக கூறப்பட்ட நிலையில் சிறிது நேரத்திலேயே சிகிச்சை பலனின்றி அழகுபாப்பா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருச்சுழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாம்பு கடித்தால் கண் பார்வை பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம் ஆகும். விஷப் பாம்பு கடித்தால், நச்சுத்தன்மை கண் தசைகளை பாதித்து, பார்வை மங்கலாகும். சில சமயங்களில், கண் பார்வை முழுமையாக இழக்கும் வாய்ப்பும் ஏற்படுகிறது. அப்படித்தான் அழகுபாப்பா பாதிக்கப்பட்டுள்ளார். விஷத்தின் தீவிரம் அதிகமாக இருந்ததால் சிகிச்சை பலன் இன்றி அழகுபாப்பா உயிரிழந்துள்ளார்.
ஒரே இடத்தில் 100 பாம்புகள்
உத்தரபிரதேச மாநிலம் மீரட் பகுதியில் நேற்று சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ பரவியது. அதில் கிராம மக்கள் ஏராளமான பாம்புகளை ஒட்டுமொத்தமாக கொன்று புதைக்கும் காட்சிகள் இருந்தது. இதுகுறித்து வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதன்படி, மீரட் அருகே உள்ள சிமாவுலி கிராமத்தில் இந்த சம்பவம் என்பது தெரியவந்தது.
வனத்துறையினர் நேரில் சென்று விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது வனத்துறையினருக்கு தெரிய வந்த தகவலின்படி, மீரட் அருகே உள்ள சிமாவுலி கிராமத்தில் வசிக்கும் மஹ்பூஸ் சைபி என்ற விவசாயி, நேற்று முன்தினம் இரவில் தூங்குவதற்கு தயாரான போது தனது முற்றத்தில் ஒரு பாம்பைக் கண்டார். அதை அவர் அடித்துக் கொன்றுவிட்டு தூங்கச் சென்றுள்ளாராம். ஆனால் அடுத்த சில நிமிடங்களில் ஒன்றன் பின் ஒன்றாக அங்கு பாம்புகள் படையெடுப்பதை கண்டு அவர் பதற்றமடைந்துள்ளார்.
இந்த தகவல் அக்கம்பக்கத்தில் பரவி, ஏராளமான கிராம மக்கள் அங்கு கூடிவிட்டனர். அப்போது விவசாயி வீட்டின் கதவின் அருகே உள்ள சாய்தள பகுதிக்கு அடியில் இருந்து பாம்புகள் வெளிவருவதை கண்டனர். உடனே பாம்புகள் வெளிப்பட, வெளிப்பட கிராம மக்கள் அவற்றை அடிக்கத் தொடங்கினர். சுமார் 50-க்கும் மேற்பட்ட பாம்புகளை அவர்கள் அடித்துக் கொன்றுவிட்டார்களாம்.
மேலும் பல பாம்புகள் தப்பித்து அங்குமிங்குமாக ஓடி மறைந்தன. மொத்தம் நுற்றுக்கணக்கான பாம்புகள் விவசாயின் வீட்டின் முற்றத்தில் குடியிருந்ததை கண்டு கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் இதில் கொடுமை என்னவென்றால், வனத்துறையினர் விசாரணையில் கொல்லப்பட்டவை விஷமற்ற தண்ணீர் பாம்புகள் என்று தெரியவந்தது. அவை கால்வாய்கள், சாக்கடை வடிகால் என நீரோட்டம் காணப்படும் பகுதியில் கூட்டமாக வசிக்கும் இயல்பு கொண்டவை ஆகும்.அவற்றை தான் விவசாயிகள் விஷப்பாம்பு என்று நினைத்து அடித்துக் கொன்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications