'நீ எங்கிருந்தாலும் நன்றாக வாழ்'.. விருதுநகர் காதலிக்கு வீடியோ அனுப்பிய முத்துராஜ்.. அடுத்த நொடியே!
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மேலக்காந்திநகர் பகுதியை சேர்ந்த பாலமுருகன் என்பவருடைய மகன் முத்துராஜ் என்பவர் ஒரு பெண்ணை காதலித்துள்ளார். ஆனால் அந்த பெண்ணுக்கும், முத்துராஜின் நண்பருக்கும் திருமணம் நடந்துள்ளது. இதனை தாங்கி கொள்ள முடியாமல் பரிதவித்து வந்த முத்துராஜ், "உனக்கு என்னை பிடித்ததா? இல்லையா? என தெரியவில்லை. ஆனால் நீ எங்கிருந்தாலும் நன்றாக வாழ்"என்று காதலிக்கு வீடியோ அனுப்பிவிட்டு செய்த காரியம் பலரையும் பதற வைத்துள்ளது.
இன்றைய இளைஞர்கள் வாழ்க்கையில் தோல்விகளை தாங்கி கொள்ளும் பக்குவம் இல்லாமல் வளர்கிறார்கள். வாழ்க்கையில் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும்.. சகிப்புத்தன்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும்..பிரச்சனை வந்தால் எப்படி அணுக வேண்டும்.. எதிர்பாராத சூழல்களில் என்ன செய்ய வேண்டும்.. நம்மை யாராவது அவமானப்படுத்தினால் அதை எப்படி பக்குவமாக கையாள வேண்டும்.. தோல்விகளை எப்படி கையாள வேண்டும் என்பதை கற்றுக்கொள்வது இல்லை..

ஏன் இவர்களுக்கு பள்ளிகளிலோ, வீடுகளிலோ கூட இதனை கற்றுக்கொடுப்பது இல்லை என்பதே கசப்பான உண்மை. பாடம்,சிலபஸ், மார்க், படிப்பு மற்றும் விளையாட்டு என்றுதான் ஓடுகிறார்கள். இதன் காரணமாக பருவ வயதில் வரும் காதல், காமம், ஹார்மோன் மாற்றம் போன்றவற்றை பற்றி சரியான புரிந்து கொள்ளாமல் விட்டுவிடுகிறார்கள். எதிர்காலத்தை பற்றி போதிய புரிதல் இல்லாமல் தவறான முடிவுகளை எளிதாக எடுக்கிறார்கள். அந்த முடிவு பல வருடம் வளர்த்த பெற்றோருக்கு வாழ்நாள் முழுக்க தண்டனையாக மாறிவிடுகிறது. விருதுநகரில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மேலக்காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் என்பவருடைய மகன் முத்துராஜ். இவருக்கு 24 வயது ஆகிறது. முத்துராஜ் சாத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் பேனா நிப்பு கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். முத்துராஜ் கடந்த சில ஆண்டுகளாக சாத்தூர் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்தநிலையில் முத்துராஜின் நண்பருக்கும், அந்த பெண்ணுக்கும் சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்துள்ளது.. இதனால் முத்துராஜ் மனவருத்தத்தில் இருந்ததாக சொல்லப்படுகிறது.
இந்தநிலையில் இளைஞர் முத்துராஜ் திடீரென சாத்தூர் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார்.. அப்போது அவர் தனது செல்போனில் ஒரு வீடியோ பதிவு செய்துள்ளார். உனக்கு என்னை பிடித்ததா? இல்லையா? என தெரியவில்லை. ஆனால் நீ எங்கிருந்தாலும் நன்றாக வாழ் என அதில் வாழ்த்து தெரிவித்துள்ளார். பின்னர் கண் இமைக்கும் நேரத்தில் அந்த வழியாக வந்த வந்தே பாரத் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதை பார்த்த பொதுமக்கள் உடனடியாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து வந்த ரயில்வே போலீசார், முத்துராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தூத்துக்குடி ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரயிலில் விழுகும் முன்பு முத்துராஜ் பேசிய வீடியோ தற்போது வலைதளங்களில் பரவி வருகிறது.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)












Click it and Unblock the Notifications