4 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார்.. அமைச்சர் பகீர் தகவல்.. தொண்டர்களிடையே சலசலப்பு!
விருதுநகர்: தேர்தல் ஆணையம் புதிதாக அறிவித்துள்ள 4 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் யார் என்பது குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பரபரப்பு தகவலை அளித்துள்ளார்.
தமிழகத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாலும் உறுப்பினர்கள் மரணத்தாலும் 22 சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளன. இந்த நிலையில் 22 தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு வரும் 18-ஆம் தேதி லோக்சபா தேர்தலுடன் சேர்த்து தேர்தல் நடைபெறுகிறது.
இதில் ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் வழக்கு நிலுவையில் இருந்ததால் தேர்தல் நடத்தப்படாது என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து அந்த வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன.

மே 19-இல் தேர்தல்
இதனிடையே சூலூர் தொகுதி எம்எல்ஏ கனகராஜ் மரணமடைந்ததால் அந்த தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டது. எனவே மேற்கண்ட 3 தொகுதிகள் + சூலூர் தொகுதியுடன் சேர்த்து 4 தொகுதிகளுக்கு வரும் மே 19-ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என ஆணையம் உத்தரவிட்டது.

யார் வேட்பாளர்கள்
இதையடுத்து திமுக சார்பில் திருப்பரங்குன்றத்தில் டாக்டர் சரவணனும், அரவக்குறிச்சியில் செந்தில் பாலாஜியும், சூலூரில் பொங்கலூர் பழனிசாமியும், ஒட்டப்பிடாரத்தில் எம்.சி.சண்முகையாவும் போட்டியிடுகின்றனர்.

ஜெயிப்பது யார்
அதுபோல் அதிமுக தரப்பில் இருந்து வேட்பாளர்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதுகுறித்து மதுரையில் செல்லூர் ராஜூ கூறுகையில் திமுக வேட்பாளர் பட்டியலை அவர்கள் முதலில் அறிவித்தாலும் ஜெயிக்க போவது நாங்களாக்கும் என தெரிவித்தார்.

வேட்பாளர்கள்
விருதுநகரில் தேர்தல் பிரசாரத்தில் இருந்த அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரிடம் 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் யார் என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் கூறுகையில் எம்எல்ஏ இறப்பால் இடைத்தேர்தலை சந்திக்கும் தொகுதிகளில் அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வேட்பாளர்களாக நிறுத்த வாய்ப்பிருக்கிறது என்றார்.

உழைப்பு
இதனால் அதிமுக தொண்டர்கள் சலசலப்பில் ஈடுபட்டனர். மக்களவை தேர்தலில்தான் வாரிசுகளுக்கு சீட் கொடுத்தார்கள் என்றால் இடைத்தேர்தலிலும் வாரிசு அரசியலையே முன்னிறுத்துவதா என்றும் உண்மையாக உழைக்கும் தொண்டர்கள் உழைத்து கொண்டு மட்டுமே இருக்க வேண்டுமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.












Click it and Unblock the Notifications