2 உலக போர்களை பார்த்தாச்சு.. 141 ஆண்டுகள் உயிர் வாழ்ந்த அரிய ஆமைக்கு திடீரென நேர்ந்த சோகம்!
வாஷிங்டன்: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அமைந்திருக்கும், சான் டியாகோ உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த 141 வயது கொண்ட 'கிராம்மா' எனும் ஆமை உயிரிழந்திருக்கிறது. ஆனால் இது இயற்கை மரணம் அல்ல. இந்த ஆமை 2 உலகப்போர்களையும், 20 அமெரிக்க அதிபர்களையும் பார்த்திருக்கிறது. சுருக்கமாக சொல்வதெனில் இந்த ஆமைக்கு காங்கிரஸ் கட்சியை விட வயது அதிகம்.
சான் டியாகோ உயிரியல் பூங்கா கடந்த 1915ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த பூங்காவுக்கு கிராம்மா ஆமை வந்தது குறித்து பெரும்பாலானோருக்கு சரியாக தெரியவில்லை. 1928-1932 காலகட்டத்தில் பிராங்கஸ் உயிரியல் பூங்காவில் இருந்து இந்த ஆமை இங்கு கொண்டுவரப்பட்டது.

பூங்காவுக்கு வந்த ஆமை
அப்போது முதல் சான் டியாகோ பூங்காவின் ராணியாக இது பராமரிக்கப்பட்டு வந்தது. 'காலபகோஸ்' எனும் வகையை சேர்ந்த இந்த ஆமைகள் பொதுவாக 100 ஆண்டுகளுக்கு மேல் வாழும். இருப்பினும் மனிதர்களுடைய பராமரிப்பில் இருக்கும்போது, சுமார் 200 ஆண்டுகள் கூட வரை வாழ்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த ஆமை குறித்து பூங்காவின் பராமரிப்பாளர்கள் கூறுகையில்,
கருணை கொலை
"கூச்ச சுபாவமும், அமைதியான தன்மையும் கொண்ட ஆமையாக இது இருந்தது. சப்பாத்தி கள்ளி பழங்களை விரும்பி சாப்பிட்டது. ஆனால், வயது ஆக ஆக எலும்பு தொடர்பான நோய்கள் இந்த ஆமைக்கு அதிகரித்தன. குறிப்பாக மூட்டுகளில் பிரச்சனை ஏற்பட்டு ஆமையால் முன்பு இருந்ததைப் போல அடிக்கடி வெளியில் நடமாட முடியவில்லை. மட்டுமல்லாது அதனுடைய ஓடு பலவீனமடைந்து, எலும்பு முறிவு அபாயத்தை ஏற்படுத்தியது. உணவை எடுத்துக் கொள்வதில் கூட ஆமைக்கு பிரச்சனை இருந்தது. இதனையடுத்து கடந்த 20ம் தேதி ஆமையை, பூங்காவின் அதிகாரிகள் கருணை கொலை செய்தனர்" என்று கூறியுள்ளனர்.
மனிதாபிமான நடவடிக்கை
சான் டியாகோ பூங்கா நிர்வாகம், எப்படி கருணை கொலை செய்தார்கள் என்பது குறித்து பொது வெளியில் அறிவிக்கவில்லை. இருப்பினும் பொதுவாக ஊர்வன விலங்குகளை கருணை கொலை செய்ய பெண்டோபார்பிட்டல் எனும் மருந்து பயன்படுத்தப்படும். அதை பயன்படுத்தி கிராம்மா ஆமையை கொன்றிருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது இந்த ஆமைக்கு முதலில் அதிக டோஸ் கொண்ட மயக்க ஊசி போடப்படும். ஆமை கொஞ்சம் கொஞ்சமாக மயக்க நிலைக்கு செல்லும்.
அதன் பின்னர் பெண்டோபார்பிட்டல் ஊசியை போடுவார்கள். இது ஆமையின் இதய துடிப்பை நிறுத்தி வலியில்லாத மரணத்தை கொடுத்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. ஊர்வன உயிர்களை கொல்ல இந்த முறை பரவலாக பின்பற்றப்படுகிறது.
141 ஆண்டுகள் ஓர் ஒப்பீடு
இந்த ஆமை உயிர் வாழ்ந்த 141 ஆண்டுகள் என்பது மிகப்பெரிய காலகட்டம். இந்திய வரலாற்றில் இந்த ஆண்டுகளை ஒப்பிட்டு பார்த்தால்.. இந்திய தேசிய காங்கிரஸின் தோற்றம், வங்கதேச பிரிவினை, முதல் உலகப்போர், காந்தி இந்தியா வந்தது, ஜாலியன் வாலாபாக் படுகொலை, உப்பு சத்தியாகிரகம், இரண்டாம் உலகப் போர், இந்தியாவின் சுதந்திரம், நேருவின் சகாப்தம், இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையிலான போர் மற்றும் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான போர், எமர்ஜென்சி காலம், தாராளமயமாக்கல், அணுசக்தி சோதனை, கார்கில் போர் என பல்வேறு சம்பவங்கள் இந்த 141 ஆண்டுகளில் நடந்திருக்கின்றன.












Click it and Unblock the Notifications