ஆறுதல்.. உலக நாடுகளில் பரவலாக குறையும் கொரோனா - இந்தியா 'கலக்கம்'
வாஷிங்டன்: உலகளவில் கொரோனா காரணமாக 158,299,205 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களில் உலகளவில் வைரஸ் பரவல் சற்று குறைந்துள்ள நிலையில், இந்தியாவில் மட்டும் புயல் போன்று வீசி வருகிறது.
உலகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் தொடர்ந்து நீடித்து வருகிறது. அமெரிக்கா, ஜெர்மனி, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் பாதிப்பு சற்று குறைந்தாலும், ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரிக்கிறது.
அதேபோல், உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் 3,295,957 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால், மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் தான் தினசரி வைரஸ் பாதிப்பு மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை எகிறி வருகிறது.

அமெரிக்கா ஹேப்பி
உலகம் முழுவதும் ஒட்டுமொத்தமாக 158,299,205 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 135,710,727 பேர் சிகிச்சையில் இருந்து குணமடைந்துள்ளனர். அமெரிக்காவில் 34,092 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது கடந்த இரண்டு நாள் பாதிப்பை விட சற்று குறைவாகும். அதுமட்டுமின்றி, அங்கு ஒரேநாளில் 647 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இது நேற்றைய எண்ணிக்கையை விட அதிகமாகும்.

பிரான்ஸ் அபாரம்
அதேபோல், பிரேசிலில் ஒரே நாளில் 63,268 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதுவும் கடந்த இரண்டு நாள் பாதிப்பை விட குறைவாகும். அங்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2,091 பேர் உயிரிழந்துள்ளனர். இங்கிலாந்தில் 2,047 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு பாதிப்பு அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது. பிரான்சில் 20,745 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அங்கு 26,000 என்ற எண்ணிக்கையில் பாதிப்பு இருந்தது. இப்போது கணிசமாக குறைந்துள்ளது. அங்கு ஒரேநாளில் 176 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

அதிகரிக்கும் வைரஸ்
ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 8,329 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு வைரஸ் பாதப்பு சற்று அதிகரித்துள்ளது. அங்கு ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு 370 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், இத்தாலியில் 10,176 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக பதிவாகியுள்ளது. இங்கு வைரஸ் பாதிப்பு குறைந்துள்ளது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 224 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

கமலா ஹாரிஸ் உறுதி
உலகின் மற்ற நாடுகளில் 20,000 , 30,000 என்று தினசரி கொரோனா பாதிப்பு பதிவாக, இந்தியாவில் தமிழகத்தில் மட்டும் 27,000க்கும் அதிகமான பாதிப்புகள் பதிவாகியுள்ளது. இந்தியாவில் தினசரி நான்கு லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த இக்கட்டான சூழலில், இந்தியாவுக்கு இப்போது தேவையான நேரத்தில் உதவுவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம் என்று அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications