'Statue of Equality' அமெரிக்காவில் திறக்கப்பட்ட உயரமான அம்பேத்கர் சிலை! 'ஜெய்பீம்' என மக்கள் கோஷம்
வாஷிங்டன்: சட்ட மேதை அம்பேத்கரின் 19 அடி உயர சிலை அமெரிக்காவில் அமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் 13 ஏக்கர் நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த சிலை திறந்து வைக்கப்பட்டது.
இந்திய அரசியல் சாசன சிற்பி என்று போற்றப்படும் சட்ட மேதை அம்பேத்கர் 1891-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி பிறந்தார். சட்ட வல்லுநராக, பொருளாதார நிபுணராக, அரசியல் மேதையாக தன்னை நிரூபித்தார். 1990-ல் அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. உலக அளவில் போற்றுதலுக்கு உரிய சிறந்த தலைவர்களில் ஒருவராக விளங்கும் அண்ணல் அம்பேத்கரின் பெருமையை பறைசாற்றும் விதமாக அமெரிக்காவில் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் அம்பேத்கருக்கு வைக்கப்பட்டு இருக்கும் மிக உயரமான சிலை இதுவாகும். அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் உள்ள அக்கோகீக் நகரத்தில் அம்பேத்கர் சர்வதேச மையத்துக்கு (ஏஐசி) சொந்தமான 13 ஏக்கர் நிலத்தில் இந்தச் சிலை அமைக்கப்பட்டு உள்ளது. . அம்பேத்கரின் போதனைகளை பரப்பவும், சமத்துவம் மற்றும் மனித உரிமைகளின் சின்னமாக நீடிக்கும் சிலை அமைக்கும் பணியை மேற்கொண்ட ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
குஜராத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலையை உருவாக்கிய சிற்பி ராம் சுடார் தான் இந்த அம்பேத்கர் சிலையையும் வடிவமைத்துள்ளார். இந்த சிலைக்கு Statue of Equality (சமத்துவத்தின் சிலை) என்று பெயரிடப்பட்டுள்ளது. நமது நாட்டிற்கு வெளியே அம்பத்கருக்கு அமைக்கப்பட்டுள்ள மிக உயரமான சிலை இதுவேயாகும்.
19 அடி உயரத்தில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள இந்த சிலை அக்.14 ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது. சிலை திறப்பு நிகழ்வில் அமெரிக்கா மற்றும் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் உள்பட பலரும் கலந்து கொண்டனர். சிலை திறக்கப்படும் போது ஜெய்பீம் என கோஷம் எழுப்பி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.












Click it and Unblock the Notifications