குலுங்கிய வனுவாட்டு தீவுகள்.. 7.2 அளவில் நிலநடுக்கம்! சுனாமி வார்னிங் விடுப்பு.. மக்கள் அச்சம்
வாஷிங்டன்: பசிபிக் பெருங்கடலின் வனுவாட்டு தீவு அருகே இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை அடுத்து வனுவாட்டு தீவு பகுதி மற்றும் நியூசிலாந்துக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
பசிபிக் பெருங்கடலின் தெற்கே ஓசியானியாப் பகுதியில் அமைந்திருக்கும் தீவு நாடு தான் வனுவாட்டு நாடு. சுற்றிலும் எரிமலைகளைக் கொண்டுள்ள இந்த தீவுக்கூட்டம், ஆஸ்திரேலியாவுக்கு சுமார் 1,750 கிமீ தூரம் கிழக்கேவும், நியூ கலிடோனியாவுக்கு 500கிமீ வட-கிழக்கேயும், பீஜிக்கு மேற்கேயும், சொலமன் தீவுகளுக்கு தெற்கேயும் அமைந்துள்ளது.

இந்த நிலையில் இன்று வனுவாட்டு தீவுக்கு அருகே 54 கிமீ தொலைவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக பதிவாகியுள்ளது. எனினும் சேத விவரங்கள் உடனே வெளியாகவில்லை. நிலநடுக்கத்தால் அங்குள்ள மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இதற்கிடையே சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை அடுத்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. வனுவாட்டு தீவு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் நியூசிலாந்து நாட்டின் ஒரு பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். சுனாமி எச்சரிக்கையை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சுமார் 80 தீவுக்கூட்டங்களை உள்ளடக்கிய வனுவாட்டு தீவுகளில் 3,30,000 மக்கள் வசித்து வருகிறார்கள். நிலநடுக்கத்தால் அங்குள்ள சில கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. வனுவாட்டு அரசின் இணையதளமும் நிலநடுக்கத்திற்கு பிறகு செயல்பாடு இன்றி ஆஃப்லைனில் உள்ளது.












Click it and Unblock the Notifications