இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருந்திருக்கலாம்..மீண்டும் வேலைக்கு ஆள் எடுக்க தயராகும் எலான் மஸ்க்
வாஷிங்டன்: ட்விட்டரில் பாதிக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், மீண்டும் பணியிடங்களை நிரப்ப இருப்பதாக தனது ஊழியர்கள் மத்தியில் எலான் மஸ்க் கூறியதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
உலக பெரும் பணக்காரரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கினார்.
ட்விட்டரை வாங்கியதில் இருந்தே எலான் மஸ்க் எடுத்து வரும் ஒவ்வொரு நடவடிக்கைகளும் சர்வதேச அளவில் கவனம் பெற்று வருகிறது.
எனது முதல் குழந்தை என் கைகளிலேயே இறந்து போனது.. எலான் மஸ்க் வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா?
50 % ஊழியர்கள் நீக்கம்
ட்விட்டரை வாங்கிய கையோடு முதல் வேலையாக அதன் சி இ ஓவாக இருந்த பராக் அகர்வாலை வேலையை விட்டு அனுப்பினார். அவரோடு மேலும் சில உயர் அதிகாரிகளையும் எலான் மஸ்க் பணியில் இருந்து நீக்கினார். மேல்மட்ட நிர்வாகிகள் மட்டும் இன்றி ட்விட்டரில் பணியாற்றும் ஊழியர்களில் 50 சதவீதத்தினரை வீட்டுக்கு அனுப்ப எலான் மஸ்க் முடிவு செய்தார். இதன்படி மொத்தம் உள்ள 7,500 ஊழியர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பணியில் இருந்து நீக்கப்பட்டனர்.
80 மணி நேரம் பணி செய்ய தயாராக வேண்டும்
அதோடு, ட்விட்டர் நிறுவனம் வருவாயை பெருக்கி அதிக லாபத்தை பெறத்தொடங்கவில்லை என்றால் திவால் நிலையை சந்திக்கும் என்று எச்சரித்து இருந்த எலான் மஸ்க், பல்வேறு செலவீன குறைப்பு நடவடிக்கைகளையும் எடுத்து பரபரப்பாக்கினார். குறிப்பாக ஊழியர்கள் வாரம் 80 மணி நேரம் பணி செய்ய தயாராக வேண்டும் என்றும் ஊழியர்கள் கடினமாக உழைக்க தயாராக இருங்கள் அல்லது 3 மாத சம்பளத்துடன் ராஜினாமா செய்யலாம் என்று தனது ஊழியர்களுக்கு இமெயில் அனுப்பியிருந்தார்.
2,750 ஆக குறைந்த ஊழியர்கள் எண்ணிக்கை
இதன்படி நூற்றுக்கணக்கான ஊழியர்கள் கொத்தாக பணியில் இருந்து விலகி எலான் மஸ்க்கிற்கு அதிர்ச்சி கொடுத்தனர். ஆனாலும் இதற்கெல்லாம் நான் கவலைப்பட போவது இல்லை என்று எலான் மஸ்க் கூறியிருந்தார். தற்போது ட்விட்டர் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் எண்ணிக்கை 2,750 ஆக குறைந்துள்ளது. மேலும் சிலர் ராஜினாமா செய்து வருவதால் இந்த எண்ணிக்கை இன்னும் கூட குறையலாம் என்று சொல்லப்படுகிறது.
சேல்ஸ் பிரிவு ஊழியர்கள்
மிக கடினமாக உழைக்க தயாராக இல்லாத ஊழியர்கள் பணியில் இருந்து விலகலாம் என்ற எலான் மஸ்க் கூறியிருந்ததையடுத்து பலர் பணியில் இருந்து விலகி வருகின்றனர். பணியில் இருந்து விலகிய ஊழியர்கள் பலரும் டெக்னிகல் பிரிவை சேர்ந்தவர்கள்தான் என்று சொல்லப்படுகிறது. சேல்ஸ் பிரிவு ஊழியர்கள் எலான் மஸ்க்கின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு பணியில் நீடித்து வருகின்றனர்.
பணியிடங்களை தீவிரமாக நிரப்பி வருவதாக..
இதனால் தற்போது பணியில் இருக்கும் ஊழியர்களின் எண்ணிக்கையில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை சமன் செய்யும் வகையில் சில ஆட்குறைப்பு நடவடிக்கைகளையும் எலான் மஸ்க் எடுத்து வருவதாக தெரிகிறது. இதன்படி, சில ஊழியர்களுக்கு மின்னஞ்சல் கூட ட்விட்டர் நிர்வாகம் அனுப்பி வருவதாக புளூம்பெர்க் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கிடையே, திங்கள் கிழமை ட்விட்டர் ஊழியர்களை சந்தித்த எலான் மஸ்க், இன்ஜினியரிங் மற்றும் சேல்ஸ் பிரிவில் பணியிடங்களை தீவிரமாக நிரப்பி வருவதாக எலான் மஸ்க் பேசியிருக்கிறார்.
தகுதி வாய்ந்த நபர்களை பரிந்துரைக்குமாறு..
மேலும் தகுதி வாய்ந்த நபர்களை பரிந்துரைக்குமாறும் ஊழியர்களிடம் எலான் மஸ்க் கேட்டுக்கொண்டுள்ளாராம். எனினும், ட்விட்டரின் வலைத்தள பக்கத்தில் பணியிடங்கள் நிரப்புவது குறித்து எந்த அறிவிப்பும் இடம் பெறவில்லை. அதேபோல், இன்ஜினியரிங் மற்றும் சேல்ஸ் பிரிவில் எந்த வகையான போஸ்ட்கள் (பதவிகள்) நிரப்பட உள்ளன என்பது குறித்து எலான் மஸ்க் தெளிவாக குறிப்பிடவில்லை. ட்விட்டரில் தற்போது மேற்கொள்ளப்படும் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் பல தவறுகளை கொண்டிருக்க்கும் என்றும் எனினும், இவை காலப்போக்கில் சரியாகிவிடும் என்றும் எலான் மஸ்க் கூறியிருக்கிறார்.