ஏஐ தொழில்நுட்பத்தால் பறிபோகும் வங்கிப் பணி.. 2 லட்சம் பணியிடங்களுக்கு சிக்கல் - அதிர்ச்சி ரிப்போர்ட்
வாஷிங்டன்: ஏஐ தொழில்நுட்பம் இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த மற்றும் தவிர்க்க முடியாத தொழில்நுட்பமாக உள்ளது. ஏஐ வளர்ச்சி என்பது அங்கு சுற்றி இங்கு சுற்றி மனிதர்களின் வேலைக்கே ஆப்பு வைக்குமளவுக்கு வளர்ந்துவிட்டது. அந்த வகையில் வங்கிகளில் அடுத்த 3 ஆண்டுகளில் 2 லட்சம் பணியிடங்கள் நீக்கப்படவுள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிய வந்துள்ளது.
உலகம் முழுவதும் ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. தவிர்க்க முடியாத தொழில்நுட்பமாக ஏஐ மாறி வருகிறது. ஏஐ தொழில் நுட்பத்தால் ஏராளமான முன்னேற்றங்கள் இருக்கின்றன. அதே நேரம் இந்த தொழில் நுட்பத்தால் மனிதர்களுக்கு ஆபத்தும் இருக்கத்தான் செய்கின்றன.

ஏஐ தொழில்நுட்பத்தால் மனித உழைப்புகள் பெருமளவு குறைவதால், பல இடங்களில் மனிதர்களின் வேலை வாய்ப்பு கேள்வி குறியாகியுள்ளது. இந்நிலையில் ஏஐ தாக்கத்தால் உலகளவில் உள்ள வங்கிகள் தங்களிடம் உள்ள 2 லட்சம் பணியிடங்களை நிறுத்துவதற்கான வாய்ப்பு உள்ளதாக அதிர்ச்சிகர ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து ப்ளூம்பெர்க் இன்டலிஜென்ஸ் அமைப்பு நடத்திய ஆய்வில் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது. அடுத்த 3-5 ஆண்டுகளில் ஏஐ தொழில்நுட்பம் காரணமாக வங்கிகளில் 2 லட்சம் பணியிடங்கள் அல்லது தங்களது மொத்த பணியிடங்களில் 3 சதவீதம் நிறுத்தப்படுவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக தெரியவந்துள்ளது. மனிதர்கள் செய்து வந்த அந்தப் பணியிடங்களை ஏஐ ஆக்கிரமிக்க போகிறது.
அந்த ஆய்வின்படி ஏஐ காரணமாக 2027 ஆம் ஆண்டு வங்களின் லாபம் 12-17 சதவீதம் உயர்ந்து 290 பில்லியன் டாலராக இருக்கும் என கூறப்படுகிறது. இதனால் பேக் ஆபிஸ், மிடில் ஆபிஸ், ஆபரேஷனல் சம்பந்தப்பட்ட பணியிடங்கள் ஆபத்தில் உள்ளன. வாடிக்கையாளர்களுடனான தகவல் தொடர்பில் ஆட்டோமெடிக் பாட்கள் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துவதால் வாடிக்கையாளர் சேவை பணியில் இருப்பவர்களுக்கும் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.
எந்தெந்தப் பணிகள் எல்லாம் வழக்கமான, ஒரே மாதிரி மீண்டும் மீண்டும் செய்யப்படுகிறதோ அந்தப் பணிகளுக்கு அதிக ஆபத்து இருக்கிறது. ஆனாலும் ஏஐ காரணமாக அவற்றை முழுவதுமாகவும் மாற்றிவிட முடியாது என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது. அடுத்த 3-5 ஆண்டுகளில் ஏஐ தொழில்நுட்பம் காரணமாக உற்பத்தி அதிகரித்து ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 5 சதவீதம் லாபம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
எனவே வங்கிகள் பொருளாதார நெருக்கடிகளில் இருந்து பாதுகாத்து கொள்வதற்காக தொழில்நுட்பத்தை மேம்படுத்த அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். மற்ற துறைகளை விட வங்கி மற்றும் நிதி சார்ந்த துறைகளில் தான் ஏஐ தொழில்நுட்பம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த போகிறது. வங்கிகளில் சுமார் 54 வகை பணிகள் ஆட்டோமெடிக் தொழில்நுட்பத்தால் கையாளப்படக் கூடியவையாக உள்ளன.
இந்தப் பணிகளை மனிதர்களை விட ஏஐ தொழில்நுட்பம் நேர்த்தியாகவும், விரைவாகவும், சிறு தவறுக்கு கூட இடம் கொடுக்காமல் செய்யும் என்பதால் அது வங்கிகளில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த போகிறது. இந்த ஆய்வு முடிவுகள் காரணமாக வங்கி ஊழியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். பணி குறித்த கவலைகள் அதிகம் தென்படுகின்றன.
"ஏஐ தொழில்நுட்பம் மனிதர்களுக்கான பணியை எளிமையாக்கி அதை இன்னும் மேம்படுத்தும். எனவே பணியை நினைத்து பெரிதாக கவலை கொள்ள தேவையில்லை. மனிதர்களின் கிரியேட்டிவிட்டி திறனை எந்த தொழில்நுட்பமும் நிரப்ப முடியாது. அதனால் திறன் மேம்பாட்டில் அதிக கவனம் செலுத்த வேண்டும்." என்று வல்லுநர்கள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications