வாவ்.. குட் நியூஸ்! இந்த ஆண்டில் 10 லட்சம் இந்தியர்களுக்கு விசா வழங்க அமெரிக்கா உறுதி!
வாஷிங்டன் : இந்தியர்களுக்கு இந்த ஆண்டில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட எச்-1பி மற்றும் எல் விசாக்கள் வழங்கப்படும் என அமெரிக்க வெளியுறவுத்துறை உயரதிகாரி டொனால்டு லூ தெரிவித்துள்ளார். இந்தியர்களுக்கு அதிகளவில் விசா வழங்கப்படுவதை உறுதி செய்ய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க வெளியுறவுத் துறையின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலர் டொனால்டு லுா அளித்துள்ள பேட்டியில், "இந்தியர்களுக்கு இந்த ஆண்டு 10 லட்சத்துக்கும் மேற்பட்ட விசாக்களை வழங்க உள்ளோம். குறிப்பாக மாணவர்கள் விசா மற்றும் குடியேற்ற விசாக்கள் இதுவரை இல்லாத எண்ணிக்கையில் இந்த ஆண்டு வழங்கப்பட உள்ளது.

அமெரிக்காவுக்கு படிக்க வரும் வெளிநாட்டு மாணவர்களில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. கோடைகாலம் முடிந்து பள்ளிகள் தொடங்கவுள்ள நிலையில், இந்திய மாணவர்களுக்கு அதிகளவில் விசாக்களை வழங்க அமெரிக்கா உறுதிபூண்டுள்ளது.
பி1, பி2 விசா பெற முதல்முறை விண்ணப்பிப்பவர்கள் நீண்டகாலம் காத்திருக்க வேண்டியுள்ளது. மேலும் அமெரிக்காவில் பணியாற்றுபவர்களுக்கு எச்-1பி, எல் விசாக்கள் வழங்குவதில் முன்னுரிமை அளித்து வருகிறோம். இந்த விசாக்களை பெறுவதற்கான காத்திருப்பு காலம் தற்போது 60 நாட்களுக்கு குறைவாக உள்ளது.
அமெரிக்காவில் குறிப்பிட்ட பணி விசாக்களின் கீழ் பணிபுரிந்து வரும் வெளிநாட்டவர்கள் உள்நாட்டிலேயே அவர்களின் விசாவை புதுப்பித்துக் கொள்வதற்கான நடைமுறையை மீண்டும் அறிமுகப்படுத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் விசா புதுப்பிப்புக்காக அவர்கள் சொந்த நாட்டுக்கு பயணம் செய்ய வேண்டியதில்லை.
இது அமெரிக்க மற்றும் இந்திய பொருளாதாரத்துக்கு மிக முக்கியமானது. தற்காலிக பணியாளர்கள் அமெரிக்காவில் விசாக்களை புதுப்பிதற்கான பணிகளை நாங்கள் மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் அவர்கள் விசாக்களை புதுப்பிப்பதற்காக வெளிநாடு செல்ல வேண்டியது குறையும்" என டொனால்டு லூ தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications