இந்தியா கனடா மோதல்.. திடீரென உள்ளே வரும் அமெரிக்கா? அந்த 5 பேரும் சொல்லும் மேட்டரை நோட் பண்ணுங்க
வாஷிங்டன்: இந்தியா கனடா உறவு தொடர்ந்து மோசமடையும் நிலையில், இந்த விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே சமரசம் செய்யும் முயற்சியில் அமெரிக்கா இறங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா கனடா உறவு சில காலத்திற்கு முன்பு வரை நன்றாகவே இருந்தது. இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகத்தை எளிமையாக்கத் தீவிர பேச்சுவார்த்தைகளும் கூட முன்னெடுக்கப்பட்டது. இருப்பினும், அவை திடீரென நிறுத்தப்பட்டது.

காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் மாதம் கனடாவில் வைத்து கொலை செய்யப்பட்டார். அந்த விவகாரத்தில் இந்தியாவுக்குத் தொடர்பு இருக்கலாம் என தாங்கள் சந்தேகிப்பதாகக் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியதே இரு நாட்டு உறவு மோசமடைய காரணம்.
இந்தியா கனடா உறவு: ஏற்கனவே, கனடாவில் உள்ள காலிஸ்தான் பிரிவினைவாதிகள் அங்குள்ள இந்திய தூதரகங்களுக்கு மிரட்டல் விடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் மீது கனடா அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்திய போதிலும் கனடா அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இந்தச் சூழலில் ட்ரூடோவின் இந்த பேச்சு இரு நாட்டு உறவை மோசமாக்கியது.
இந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை விவகாரத்தில் இந்தியா கனடா உறவு நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டு வருகிறது. இதற்கிடையே இந்த விவகாரத்தில் அமெரிக்கா முதலில் எதுவும் சொல்லவில்லை. இருப்பினும், பின்னர் மெதுவாகவும் வெளிப்படையாகவும் இந்த விவகாரத்தில் அமெரிக்கா இறங்கியுள்ளது.
உள்ளே வரும் அமெரிக்கா: இரு நாடுகளுக்கு இடையே சமரசம் செய்யும் முயற்சியில் அமெரிக்கா இறங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா கனடா இடையே பேக் சேனல் பேச்சுக்கள் குறித்து அமெரிக்கா ஆய்வு செய்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
நிஜ்ஜார் கொலை குறித்து கனடா பொதுவெளியில் இந்தியாவைக் குற்றஞ்சாட்டிய பிறகு ஐந்து மூத்த அமெரிக்க அதிகாரிகள் இந்த விவகாரம் குறித்துப் பேசியுள்ளனர்.அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன், அந்நாட்டின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், அமெரிக்கத் தேசியப் பாதுகாப்பு கவுன்சில் ஒருங்கிணைப்பாளர் ஜான் கிர்பி, அமெரிக்கா இந்தியாவுக்கான தூதர் எரிக் கார்செட்டி மற்றும் கனடாவுக்கான அமெரிக்கத் தூதர் டேவிட் கோஹன் ஆகியோர் இந்த விவகாரம் குறித்துப் பேசியுள்ளனர்.
சொல்லும் மேட்டர் ஒன்று தான்: அவர்கள் 5 பேர் வெவ்வேறு இடங்களில் பேசியிருந்தாலும் அதன் சாரம்சம் ஒன்று தான்.. சுருக்கமாகச் சொன்னால், இந்தியா ஒத்துழைக்க வேண்டும் என்று அமெரிக்கா கேட்டுக் கொள்கிறது. அதேநேரம் கனடா உடனடியாக தீவிர நடவடிக்கையை எடுக்கக் கூடாது என்றும் கூறுகிறது. இதுதான் இப்போது அமெரிக்காவின் நிலைப்பாடாக இருக்கிறது. இந்தச் சூழலில் தான் இந்தியா கனடா இடையே பேக் சேனல் பேச்சுவார்த்தைக்கும் அமெரிக்கா முயன்று வருகிறது.
இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இப்போது நியூயார்க்கில் இருக்கிறார்.. அவர் அமெரிக்காவின் டாப் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களைச் சந்திக்க உள்ளார். அப்போது இது குறித்து ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது. மேலும், நமது நாட்டின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும் அமெரிக்கத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் உடன் இது குறித்து ஆலோசிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் வரும் காலத்தில் இந்தியா கனடா விவகாரத்தில் முக்கிய நடவடிக்கைகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications