ராணுவ வெடிமருந்து ஆலை வெடித்து சிதறியது.. பலர் பலி.. அதிர்ச்சியில் அமெரிக்கா
வாஷிங்டன்: அமெரிக்காவின் டென்னசி பகுதியில் உள்ள ராணுவ வெடிமருந்து ஆலை இன்று திடீரென்று வெடித்தது. இதில் பலர் பலியாகி உள்ள நிலையில் பலரும் மாயமாகி உள்ளனர். இதனால் அமெரிக்காவில் பதற்றம் நிலவி வருகிறது.
அமெரிக்காவில் உள்ள முக்கிய மாகாணங்களில் ஒன்று டென்னசி. இந்த மாகாணத்தின் தலைநகராக நாஷ்வில் உள்ளது. நாஷ்வில்லில் இருந்து 97 கிலோமீட்டர் தூரத்தில் தென்மேற்கு பகுதியில் பக்ஸ்நார்ட் என்ற இடத்தில் மலை உள்ளது.

இங்கு அக்யூர்ட் எனர்ஜெடிக் சிஸ்டம்ஸ் என்ற பெயரில் வெடிமருந்து நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இது 8 கட்டடங்களுடன் செயல்பட்டு வருகிறது. அமெரிக்க ராணுவத்துக்கான வெடிமருந்து மற்றும் சோதனைகள் இங்கு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் இன்று திடீரென்று ராணுவ வெடிமருந்து ஆலை வெடித்து சிதறியது. இதில் அங்கு பணியாற்றிய அமெரிக்கர்கள் பலர் பலியாகி உள்ளனர். மேலும் பலரும் மாயமாகி உள்ளனர். வெடிமருந்து ஆலை என்பதால் அங்கு தீ அதிகமாக எரிந்து வருகிறது.
இதனால் மீட்பு பணி தாமதமாகி உள்ளது. இதனால் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இந்த ஆலை வெடித்து சிதறியபோது அதன் சத்தம் பல மைல் தொலைவுக்கு கேட்டதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அக்யூரேட் எனர்ஜெட்டிக் சிஸ்டம் நிறுவனம் எந்த பதிலையும் தெரிவிக்கவில்லை. இந்த வெடிவிபத்து காரணமாக அந்த பகுதியில் உள்ள வீடுகள் குலுங்கி உள்ளன. இதனை லோபில்வில்லி பகுதியில் வசிப்போர் உறுதி செய்துள்ளனர். இந்த லோபில்வில்லி ஆலை இருக்கும் இடத்தில் 20 நிமிட பயண தூரத்தில் அமைந்துள்ளது.
இதுபற்றி ஹம்ப்ரிஸ் கவுண்டி ஷெரிப் கிறிஸ் டேவிஸ் கூறுகையில், ‛‛பலரின் நிலை என்னவென்று தெரியவில்லை. முதற்கட்டமாக சிலர் இறந்துள்ளனர். இது உண்மை தான். அவர்களின் குடும்பங்கள் மற்றும் விபத்து நடந்த இடத்தில் உள்ள மீட்பு குழுவினருடன் தொடர்பில் இருந்து வருகிறோம்.
தற்போதைய நிகழ்வு பேரழிவாக பார்க்கப்படுகிறது. ஆலை வெடித்ததற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இதுபற்றி விசாரணை நடத்தப்படும். ஆனால் விசாரணை முடிவு வர பல நாட்கள் ஆகலாம்'' என்றார். இந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications