அலறவிடும் அமெரிக்கா.. வரிசையாக உயிரிழக்கும் இந்திய மாணவர்கள்.. மர்மம் இருப்பதாக பெற்றோர் புகார்!
வாஷிங்டன்: அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் உயிரிழப்பது சமீப காலமாகத் தொடர்கதை ஆகியுள்ளது. இப்போது ஒரே மாதத்தில் நான்காவது முறையாக அமெரிக்காவில் உள்ள இந்திய மாணவர் உயிரிழந்துள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
வெளிநாடுகளுக்குச் சென்று படித்தால் அங்கேயே செட்டிலாகிவிட முடியும் என்று இந்தியர்கள் பலரும் நம்புகின்றனர். இதனால் படிப்பு மற்றும் வேலைக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.

அப்படி இந்தியர்கள் அதிகம் செல்லும் நாடுகளில் ஒன்றாக அமெரிக்கா இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவுக்குச் செல்லும் இந்தியர்கள் எண்ணிக்கை அதிகரித்தே வருகிறது.
அமெரிக்கா: அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாகவே இருக்கிறார்கள்.. ஆனால், சமீப காலமாக அங்கே சில மோசமான சம்பவங்கள் நடந்து வருகிறது. கடந்த ஒரே மாதத்தில் மட்டும் நான்காவது முறையாக இந்தியர் ஒருவர் அமெரிக்காவில் உயிரிழந்துள்ளார்.
இந்திய வம்சாவளி மாணவர் அமெரிக்காவில் நேற்று வியாழக்கிழமை உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். 19 வயதான அந்த மாணவர் ஷ்ரேயாஸ் ரெட்டி பெனிகர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர் ஓஹியோவில் உள்ள லிண்டர் ஸ்கூல் ஆஃப் பிசினஸில் படித்து வந்தார். ஷ்ரேயாஸின் பெற்றோர் ஹைதராபாத்தில் தங்கி இருந்தாலும் கூட ஷ்ரேயாஸ் அமெரிக்க பாஸ்போர்ட்டை வைத்துள்ள நபராக இருப்பதாக அதிகாரிகள் கூறினர்.
போலீஸ் சொல்வது என்ன: இது குறித்து ஓஹியோ போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், குற்றம் நடந்ததற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை என்றே அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்தச் சம்பவத்திற்கு நியூயார்க்கில் உள்ள இந்தியத் தூதரகம் இரங்கல் தெரிவித்துள்ளது. மேலும், பெனிகரின் மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடைபெற்று வருவதாகக் கூறியுள்ளது.
இது குறித்து இந்தியத் துணை தூதரகம் தனது எக்ஸ் பக்கத்தில், "ஓஹியோவில் உள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவர் ஷ்ரேயாஸ் ரெட்டி பெனிகேரியின் துரதிர்ஷ்டவசமான மறைவால் ஆழ்ந்த வருத்தம் அடைகிறோம். காவல்துறை விசாரணை நடந்து வருகிறது. இந்த கட்டத்தில் குற்றம் நடந்தது போலத் தெரியவில்லை. குடும்பத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். அவர்களுக்கு எங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்வோம்" என்று கூறியுள்ளனர்.
முதல்முறை இல்லை: அமெரிக்காவில் கடந்த ஒரு மாதத்தில் நடந்த 4ஆவது சம்பவம் இதுவாகும். மேலும், ஒரே வாரத்தில் அமெரிக்காவில் இந்திய மாணவர் உயிரிழப்பது இது மூன்றாவது முறையாகும். முன்னதாக கடந்த வாரம் நீல் ஆச்சார்யா என்ற மாணவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். ஆச்சார்யாவை காணவில்லை என அவரது தாயார் புகார் அளித்தார். சில மணி நேரத்திற்குப் பிறகு, பல்கலைக்கழக வளாகத்தில் அவர் சடலமாக மீட்கப்பட்டார்.
அதேபோல ஜார்ஜியாவை சேர்ந்த விவேக் சைனி என்பவர் அவர் பணிபுரிந்து வந்த கடையிலேயே கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். ஆதரவு இல்லாத நபர் ஒருவருக்குச் சாப்பாடு கொடுத்து வந்த நிலையில், அந்த ஆதரவற்ற நபரே இவரைச் சுத்தியலைக் கொண்டு சுமார் 50 முறை அடித்து கொலை செய்துள்ளார்.
பெற்றோர் சந்தேகம்: மற்றொரு இந்திய மாணவரான அகுல் தவான் என்பவர் கடந்த ஜனவரி மாதம் இல்லினாய்ஸ் அர்பானா- சாம்பெய்ன் பல்கலைக்கழகத்திற்கு வெளியே இறந்து கிடந்தார். 18 வயதான அவருக்குப் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டத்தில் அவர் அதீத குளிரால் உயிரிழந்ததாகக் கூறப்பட்டது. இருப்பினும், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக காவல்துறை புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications