ரூ.17 கோடி மாளிகை! சிதறிய தோட்டாக்கள்! குழந்தைகளுடன் மர்மமான முறையில் உயிரிழந்த இந்திய தம்பதி! பகீர்
வாஷிங்டன்: அமெரிக்காவில் வசித்து வந்த இந்தியத் தம்பதி தங்கள் இரண்டு குழந்தைகளுடன் சடலமாகக் கண்டறியப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐடி துறையில் இந்தியர்களின் தேவை அமெரிக்காவில் அதிகமாக இருக்கிறது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரம் இந்தியர்கள் அமெரிக்கா சென்று வருகின்றனர். அமெரிக்கா இதுவரை இந்தியர்களுக்காகப் பாதுகாப்பாகவே இருந்துள்ளது.

ஆனால், கடந்த சில காலமாக அமெரிக்காவில் இந்தியர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்தச் சம்பவங்களுக்கு இடையே எந்தவொரு தொடர்பும் இல்லை என்ற போதிலும், ஒரே மாதத்தில் பல இந்தியர்கள் உயிரிழந்துள்ளது பலருக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழப்பு: அப்படியொரு சம்பவம் மீண்டும் அமெரிக்காவில் நடந்துள்ளது. அமெரிக்காவில் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் மாகாணமாக கலிபோர்னியா இருக்கிறது. அங்கே தான் இந்த பகீர் சம்பவம் நடந்துள்ளது. அங்கு வசித்து வந்த கேரளாவைச் சேர்ந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த குடும்பத்தினர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் அங்குத் தொடரும் நிலையில், அமெரிக்க வாழ் இந்தியர்களிடையே இது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கலிபோர்னியாவில் வசித்து வந்த 42 வயதான ஆனந்த் சுஜித் ஹென்றி, 40 வயதான அவரது மனைவி அலைஸ் பிரியங்கா ஆகியோர் தங்கள் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டனர். அவர்களது 4 வயது இரட்டைக் குழந்தைகளான நோவா மற்றும் நெய்தன் ஆகியோரும் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர்.
என்ன நடந்தது: போன் செய்த போது யாரும் எடுக்காத நிலையில், எல்லாம் ஓகே தானா எனப் பார்க்க உறவினர்கள் நேரில் வந்துள்ளனர். நீண்ட நேரமாகக் கதவைத் தட்டியும் யாரும் கதவைத் திறக்காத நிலையில், அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் பின்னரே இந்த பகீர் தகவல் தெரிய வந்துள்ளது.
இதில் இந்திய-அமெரிக்கத் தம்பதியான ஆனந்த் மற்றும் ஆலிஸ் ஆகியோர் பாத்ரூமில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் இறந்து கிடந்தனர். இரட்டை குழந்தைகள் படுக்கையறையில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது, அவர்களின் இறப்புக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
போலீஸ் சொல்வது என்ன: இது குறித்து போலீசார் கூறுகையில், "அதிகாரிகள் உள்ளே சென்று பார்க்கும் போதே அனைவரும் சடலமாகவே இருந்துள்ளனர். வீட்டைச் சுற்றிலும் அதிகாரிகள் தேடினர். அதில் யாரும் வலுக்கட்டாயமாக நுழைந்ததற்கான அறிகுறிகள் இல்லை.. இதையடுத்து பூட்டப்படாத ஜன்னல் மூலம் அதிகாரிகள் வீட்டிற்குள் நுழைந்து பார்த்தனர். அங்கே நான்கு பேர் இறந்த நிலையில், கண்டெடுக்கப்பட்டனர். ஒரு தம்பதி மற்றும் இரு குழந்தைகளின் உடல்களை மீட்டுள்ளோம்" என்றார்.
ரூ. 17 கோடி மாளிகை: மேலும், பாத்ரூமில் இருந்து 9mm துப்பாக்கி மற்றும் குண்டுகளையும் போலீசார் கண்டுபிடித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணையைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இந்த ஜோடி கடந்த 2020 ஆண்டில் தான் $ 2.1 மில்லியன் டாலர், அதாவது 17 கோடி ரூபாய் மதிப்பிற்கு வீடு ஒன்றையும் வாங்கி இருந்தனர். முதற்கட்ட விசாரணையில் கணவன்- மனைவியில் யாராவது ஒருவர் மற்ற நபர்களைக் கொன்றுவிட்டு தற்கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
அதேநேரம் வேறு கோணங்களிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் மேலும் கூறுகையில், "தற்போதுள்ள தகவல்களை வைத்துப் பார்க்கும் போது இது குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு போலத் தான் தெரிகிறது. இது தொடர் கொலை அல்லது சீரியல் கில்லர் போல தெரியவில்லை. எனவே, மக்கள் அச்சப்பட வேண்டாம். வீட்டில் வசித்த ஒரு நபரே கொலைக்குக் காரணம் என நம்புகிறோம்" என்றார்.
கேரள குடும்பம்: கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட இந்த குடும்பம் கடந்த ஒன்பது ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வந்தது. இதில் ஆனந்த் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வந்தார். அதேபோல ஆலிஸ் மூத்த ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் இவர்கள் நியூ ஜெர்சியில் இருந்து சான் மேடியோ கவுண்டிக்கு குடிபெயர்ந்தனர்.
இருவரும் எப்போதும் நட்பாகவே பழகக்கூடியவர்கள் என்றும்... தங்கள் குழந்தைகளை அன்பாகப் பார்த்துக் கொள்பவர்கள் என்றும் அக்கம்பக்கத்தினர் இவர்கள் குறித்துக் கூறியுள்ளனர். மேலும், இந்த ஜோடி கடந்த 2016 டிசம்பரில் விவாகரத்து கோரி மனுத் தாக்கல் செய்து இருக்கிறார்கள். இருப்பினும், இந்த வழக்கை இருவரும் மேற்கொண்டு நடத்தவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications