மனைவியை விட்டு பிரியும் ஒபாமா? விவாகரத்து தகவலுக்கு மனைவி மிச்செல் சொன்ன பதில்.. இது முக்கியம்
வாஷிங்டன்: அமெரிக்காவின் முன்னாள் அதிபரான ஒபாமாவுக்கும் அவரது மனைவி மிச்செல் ஒபாமாவுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் அவர்கள் பிரிய உள்ளதாகவும் தகவல் வெளியான சூழலில் இது குறித்து மிச்செல் ஒபாமாவே சில கருத்துக்களை வெளிப்படையாகக் கூறியிருக்கிறார்.
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா. இவர் 2008- 2016 வரை அமெரிக்காவின் அதிபராக இருந்தவர். இவர் அதிபராக இருந்தபோது பல பொது நிகழ்ச்சிகளில் ஒபாமா உடன் அவரது மனைவி மிச்செல் எப்போதும் இருப்பார். ஆனால், கடந்த சில மாதங்களாகவே மிச்செல் ஒபாமாவை பொது நிகழ்ச்சிகளில் பார்க்க முடியவில்லை.

விவாகரத்து என தகவல்
குறிப்பாக டொனால்ட் டிரம்பின் இரண்டாவது பதவியேற்பு விழாவில் முன்னாள் அதிபர்கள் அனைவரும் தங்கள் பார்ட்னர் உடன் பங்கேற்று இருந்தனர். இருப்பினும், மிச்செல் ஒபாமா அதில் பங்கேற்கவில்லை. அதேபோல முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டரின் இறுதிச் சடங்கு நிகழ்வில் கூட மிச்செல் பங்கேற்கவில்லை. இதனால் ஒபாமா மற்றும் மிச்செல் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிட்டதாகத் தகவல் வெளியானது. இதற்கிடையே சோபியா புஷ் என்பவர் உடன் ஒர்க் இன் ப்ரோக்ரஸ் பாட்காஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற மிச்செல் ஒபாமா பல முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.
எடுத்த எடுப்பிலேயே அவர் பராக் ஒபாமாவுடனான விவாகரத்து வதந்திகளைத் திட்டவட்டமாக நிராகரித்தார். மேலும் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறியதிலிருந்து தனது வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து மனம் திறந்து பேசினார். தனது இரு மகள்களும் வளர்த்துவிட்டதால் இப்போது தனக்கு எது பிடிக்கும் என்பதைக் கண்டறிந்து அதில் ஆர்வம் செலுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
மிச்செல் மறுப்பு
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "நான் இப்போது சுயமாக எனக்குப் பிடித்ததைச் செய்கிறேன் அவ்வளவு தான். ஒரு பெண் சுதந்திரமாக இருக்கக் கூடாது என்று நினைப்போர் தான் என்னைப் பற்றி இதுபோன்ற வதந்திகளைத் திட்டமிட்டுப் பரப்பி வருகிறார்கள். நான் பல ஆண்டுகளுக்கு முன்பு இதுபோன்ற (பிடித்ததைச் செய்யும்) முடிவுகளை எடுத்திருக்கலாம். ஆனால் அப்போது நானே எனக்கான அந்த சுதந்திரத்தை எடுத்துக் கொள்ளவில்லை. என் பிள்ளைகள் அப்போது குழந்தைகள். இதனால் என்னால் வேறு விஷயங்களில் கவனம் செலுத்த முடியாமல் இருந்து இருகாலம்.
இந்தாண்டு நான் சில நிகழ்வுகளில் பங்கேற்கவில்லை என்பதே இந்த வதந்திகளுக்குக் காரணமாக இருந்தது. இந்தாண்டு நான் எனக்கு முக்கியத்துவம் கொடுத்தேன். நான் செய்ய வேண்டியவற்றை எனக்குப் பிடித்ததைச் செய்தேன்.. மற்றவர்கள் நான் செய்ய வேண்டும் நினைத்ததைச் செய்யவில்லை. அது அவர்களுக்குக் கோபத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.
என்ன காரணம்
பல பெண்கள் எப்போதும் தங்களுக்குப் பிடித்ததைச் செய்யவும் அதற்கு முக்கியத்துவம் தரவும் தயங்குகிறார்கள். பெண்களாகிய நாம் நம்முடனேயே பெரிய மன போராட்டத்தை நடத்த வேண்டி இருக்கிறது. எனக்கும் அந்த சிக்கல் இருந்தது. அதைத் தாண்டி இந்த முறை நான் எனக்கு பிடித்த செய்தேன். எனக்காக நான் செய்யத் தேர்வுகளைக் கூட இங்குச் சிலரால் புரிந்து கொள்ளக்கூட முடியவில்லை. இதன் காரணமாகவே என் கணவரும் நானும் விவாகரத்து செய்கிறோம் என்று அவர்கள் நினைத்தனர்" என்றார்.
பிடித்ததைச் செய்கிறேன்
சில குறிப்பிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை என்ற போதிலும், தனக்குப் பிடித்த விஷயங்களைத் தொடர்ந்து செய்து வந்ததாக மிஷல் ஒபாமா கூறுகிறார். நாடு முழுக்க பல்வேறு இடங்களில் உரையாற்றி வருவதாகவும் பெண்கள் கல்வி சார்ந்து பல விஷயங்களைச் செய்து வருவதாகவும் மிஷல் ஒபாமா குறிப்பிட்டார். மேலும், அவர் கடந்தாண்டு நடந்த அதிபர் தேர்தலிலும் கூட கமலா ஹாரிஸுக்கு ஆதரவாகத் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications