2வது முறையாக அதிபராக பதவியேற்கும் டிரம்ப்! இந்தியாவுக்கு கிடைக்கும் பலன்கள் இதுதான்
வாஷிங்டன்: டொனால்ட் டிரம்ப் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற நிலையில், இன்று 2வது முறையாக அமெரிக்க அதிபராக பதவியேற்கிறார். டிரம்ப் அதிபராவதன் மூலம் இந்தியாவுக்கு குறிப்பிடத்தக்க பலன்கள் இருக்கின்றன.
இந்தியர்களுக்கு விசா வழங்குவது உள்ளிட்ட விஷயங்களை தாண்டி, சீனா விஷயத்தில் நிச்சயம் இந்தியாவுக்கு ஆதரவளிப்பது, தேசிய பாதுகாப்பு நெருக்கடிகளின் சமயங்களில் உதவுவது என டிரம்ப் அதிபராவதன் மூலம் இந்தியாவுக்கு மேலும் சில குறிப்பிட்ட பலன்கள் இருக்கின்றன.

இந்தியாவில் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் பாஜக, வலதுசாரி பழமைவாத கட்சியாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. மறுபுறம் டிரம்ப் மற்றும் அவர் சார்ந்திருக்கும் கட்சியும் பழமைவாத கட்சியாக இருக்கிறது. எனவே இரு அரசுகளுக்கும் இயல்பிலேயே சில ஒற்றுமைகள் இருக்கும். இது இந்திய நலன்களில் பிரதிபலிக்கும். குறிப்பாக 'குவாட்' அமைப்பில் இந்தியாவின் நீண்ட கால எதிர்பார்ப்புகள், டிரம்பின் 2வது ஆட்சிக்காலத்தில் சாத்தியமாவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன.
அமெரிக்காவை பொறுத்தவரை இந்தோ-பசிபிக் பிராந்தியம் மிக முக்கியமானது. இங்கு வர்த்தகம் உள்ளிட்டவற்றில் அமெரிக்கா கோலோச்ச வேண்டும் என்று விரும்புகிறது. ஆனால், சீனா பெரிய தலைவலி. அமெரிக்காவை விட சீனா அசுர வேகத்தில் முன்னேறி வருகிறது. எனவே சீனாவை சமாளிக்க இந்தியா பக்கம் அமெரிக்கா நிற்கிறது. டோக்லாம், பாலகோட் மற்றும் கால்வான் ஆகிய மூன்று முக்கியமான சம்பவங்களின்போது இந்தியா பக்கம்தான் அமெரிக்கா நின்றிருந்தது. இந்தியாவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அமெரிக்கா செய்திருந்தது.
இது உண்மையில் இந்தியாவுக்கு செய்யும் உதவி கிடையாது. சீனாவை சமாளிக்கவும், அதன் அதிகாரத்திற்கு சவாலை ஏற்படுத்தவும் இன்னொரு நாடு தேவை, அதற்காகத்தான் அமெரிக்கா இந்தியாவுடன் நெருங்கி வருகிறது. எது எப்படி இருந்தாலும் இது இந்தியாவுக்குதான் சாதகம்.
அதேபோல குவாட் அமைப்பில் இந்தியாவின் நீண்ட கால கோரிக்கைகள் டிரம்பின் 2வது ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட வாய்ப்பு இருக்கிறது. இதுவும் சீனா குறித்துதான். சீனாவின் வளர்ச்சிக்கு காரணம் அந்நாட்டில் குவிந்து கிடக்கும் சர்வதேச தொழில் நிறுவனங்கள்தான். இந்த நிறுவனங்களை கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்ற அமெரிக்கா எல்லா வேலைகளையும் பார்த்து வருகிறது. இப்படி வெளியேறும் எல்ல நிறுவனங்களும் இந்தியாவுக்குள் வராது என்றாலும், குறிப்பிட்ட சில முக்கியமான நிறுவனங்கள் இந்தியாவை நோக்கி வரும்.இது நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படும்.
அதேபோல மற்றொரு சாதகமான விஷயம், டிரம்பின் தேசிய பாதுகாப்பு துறையில் உள்ள இந்திய ஆதரவாளர்கள். அதாவது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் வால்ட்ஸ், மற்றொரு முதன்மை ஆலோசகர் அலெக்ஸ் வோங், தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் மூத்த இயக்குனர் ரிக்கி கில், வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, FBI இயக்குனர் காஷ் படேல், தேசிய உளவுத்துறை தலைவர் துளசி கபார்ட், கொள்கைக்கான பாதுகாப்பு துணை செயலாளர் எல்பிரிட்ஜ் கோல்பி உள்ளிட்டோர் இந்திய ஆதரவு நிலைப்பாட்டை கொண்டிருக்கின்றனர். இது இந்தியாவுக்கு பெரிய பிளஸ் பாயிண்ட்.
ஆக டிரம்ப் 2வது முறையாக அதிபராக பதவியேற்பதன் மூலம் இந்தியாவுக்கு இவ்வளவு நன்மைகள் ஏற்படும் என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications