அமெரிக்கா-கனடா எல்லையில் பெரும் பதற்றம்! திடீரென வெடித்து சிதறிய கார்.. 2 பேர் பலி தீவிரவாத சதியா?
வாஷிங்டன்: அமெரிக்கா-கனடா எல்லை பகுதியில் நயாகரா நீர்வீழ்ச்சி அருகே உள்ள சோதனை சாவடியில் தடுப்பு சுவரில் மோதி கார் பயங்கரமாக வெடித்து சிதறியது. இதில் காரில் பயணித்த 2 பேர் பலியான நிலையில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் பின்னணியில் தீவிரவாதிகளின் சதி செயல் உள்ளதா? என்ற கோணத்தில் விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.
அமெரிக்கா-கனடா எல்லையில் ரெயின்போ மேம்பாலம் அமைந்துள்ளது. இந்த மேம்பாலம் என்பது கனடாவின் நயாகரா நீர்வீழ்ச்சியின் அருகே அமைந்துள்ளது. இருநாடுகளின் எல்லை பகுதியான இந்த இடத்தில் சோதனை சாவடி ஒன்று உள்ளது.

இந்நிலையில் தான் அமெரிக்காவில் இருந்து கார் ஒன்று வேகமாக சோதனைச்சாவடி நோக்கி சென்றது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் திடீரென்று தடுப்பு சுவரில் மோதி பயங்கரமாக வெடித்து சிதறியது. கார் மொத்தமாக தீப்பிடித்து எரிந்தது.
இதையடுத்து சோதனைச்சாவடி ஊழியர்கள் உடனடியாக தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து காரில் பிடித்த தீயை அணைத்தனர். அப்போது காரில் பயணித்த 2 பேர் உடல் கருகி இறந்தது தெரியவந்தது. மேலும் இது தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என்ற தகவல் பரவியது. இதனால் அமெரிக்கா, கனடா இடையே பதற்றம் ஏற்பட்டது.
மேலும் விபத்து நடந்த இடம் அமெரிக்காவுக்கு சொந்தமானது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு உயரதிகாரிகள், அரசியல் தலைவர்கள் விரைந்தனர். நியூயார்க் ஆளுநர் கேத்தி ஹோச்சுல் இதுபற்றி விபரங்களை கேட்டறிந்தார். அதன்பிறகு அவர் கூறுகையில், ‛‛இந்த கார் வெடிப்பு என்பது தீவிரவாத செயல் என்பதற்கான ஆதாரங்கள் தற்போது வரை எதுவும் கிடைக்கவில்லை. இருப்பினும் இது ஒரு பயங்கரமான சம்பவம். கார் விபத்தில் சிக்கி வெடித்து இருப்பது பற்றி விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. இறந்த 2 பேர் குறித்த அடையாளங்கள் இன்னும் தெரியவில்லை'' என்றார்.
இதற்கிடையே போலீசார் நடத்திய விசாரணையில் அந்த கார் மேற்கு நியூயார்க்கில் இருந்து வந்து புறப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் இந்த சம்பவம் நடந்த இடம் அமெரிக்கா-கனடா எல்லையாக உள்ளது. இதனால் இருநாடுகள் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் எல்லை மூடப்பட்டு பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
அதாவது அமெரிக்கா மற்றும் கனடா எல்லைகளில் இருநாடுகளின் அதிகாரிகள் கண்காணிப்பை தீவிரமாக்கி உள்ளனர். இந்த விவகாரத்தை அமெரிக்க வெள்ளை மாளிகை தீவிரமாக கண்காணித்து வருகிறது. அதேபோல் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் இந்த விஷயத்தை சாதாரணமாக எடுத்து கொள்ளாமல் தீவிரமாக கருதுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.












Click it and Unblock the Notifications