"பொறுமையை சோதிக்கும் சீனா!" கண்கள் சிவந்த பைடன்! மைக் ஆன் ஆகி இருந்தது தெரியாமல் பேசியதால் பரபரப்பு
வாஷிங்டன்: மைக் ஆப் ஆகிவிட்டதாக நினைத்து அமெரிக்க அதிபர் பைடன் குவாட் தலைவர்களுடன் பேசிய சில கருத்துகள் இப்போது வெளியாகியுள்ளது. சீனா தங்கள் பொறுமையை ரொம்பவே சோதிப்பதாகக் கூறிய பைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங் குறித்தும் சில முக்கிய கருத்துகளைக் கூறியிருக்கிறார். அவை அனைத்தும் மைக்கில் பதிவாகிவிட்டது பேசுபொருள் ஆகியுள்ளது.
சர்வதேச அளவில் உள்ள முக்கிய கூட்டமைப்புகளில் ஒன்று குவாட். இதில் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகியவை உறுப்பு நாடுகளாக உள்ளன.

குவாட் மாநாடு: இந்த குவாட் அமைப்பின் மாநாடு அமெரிக்காவின் டெலாவேரில் நடந்த நிலையில், இதில் பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் மற்றும் ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் பல்வேறு விஷயங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதற்கிடையே மாநாட்டின் போது குவாட் தலைவர்களிடம் அமெரிக்க அதிபர் பைடன் சீனா குறித்துப் பேசியது இப்போது வெளியாகியுள்ளது.
தெற்கு சீனா கடல் பகுதி முழுவதும் தனக்குச் சொந்தம் எனச் சொல்லும் சீனா, தங்கள் பொறுமையை ரொம்பவே சோதிப்பதாக பைடன் கூறியது மைக்கில் பதிவாகிவிட்டது. அதாவது மாநாட்டின் முடிவில் இந்த செய்தியாளர் சந்திப்பு நடந்தது. பிரஸ் மீட் முடிந்த உடன் செய்தியாளர்கள் கிளம்பிக் கொண்டு இருந்தனர். அப்போது மைக் ஆனில் இருப்பது தெரியாமல் பைடன் இந்தக் கருத்துகளைக் கூறியிருக்கிறார்.
அதிபர் பைடன்: குவாட் தலைவர்களிடம் அதிபர் பைடன், " சீனா தொடர்ந்து ஆக்ரோஷமாக நடந்து கொள்கிறது.. பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப பிரச்சினைகள் எனப் பல துறைகளில் நம்மைச் சோதிக்கிறது. என்னைப் பொறுத்தவரைச் சீனாவின் நலன்களை மட்டும் ஆக்ரோஷமாக முன்னிறுத்தி சீன அதிபர் ஜி ஜின்பிங் சர்வதேச அரங்கில் ஏதோ ஒரு ஆதாயத்தை அடையப் பார்க்கிறார் என்றே தெரிகிறது" என்று பேசியிருக்கிறார்.
பிரஸ் மீட் முடிந்ததால் மைக் ஆப் ஆகிவிட்டது என நினைத்து பைடன் இந்த கருத்துகளைக் கூறியுள்ளார். ஆனலா், அப்போது மைக் ஆனில் தான் இருந்ததால் அவரது பேச்சு பதிவாகிவிட்டது. இது இப்போது உலகெங்கும் பேசுபொருள் ஆகிவிட்டது.
உரிமை கோறல்: தென் சீனக் கடல் மற்றும் கிழக்கு சீனக் கடல் ஆகியவை தன்னுடையது என்று சீனா உரிமை கோருகிறது. இதற்கு எந்தவொரு அடிப்படை முகாந்தரமும் இல்லை என்று சர்வதேச தீர்ப்பாயம் தெளிவாகக் கூறிவிட்டது. இருப்பினும், சீனா தனது அத்துமீறலை விடுவதாக இல்லை. ஒட்டுமொத்த தென் சீன கடலும் தனக்குச் சொந்தம் எனச் சொல்லும் சீனா, அண்டை நாடுகளான வியட்நாம், மலேசியா, புருனே மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு அதில் உரிமை இல்லை எனச் சொல்கிறது. இதுவே பிரச்சினைக்குக் காரணம்.
விளக்கம்: மைக் ஆனில் இருந்த போது பைடன் அது தெரியாமல் சொன்ன இந்த கருத்துகளைப் பேசுபொருள் ஆன நிலையில், இது தொடர்பாக வெள்ளை மாளிகை அதிகாரி விளக்கம் ஒன்றைக் கொடுத்தார். அதில் அவர், "இது குறித்து நான் அதிகம் விவரிக்க வேண்டியதில்லை. இதை நாங்கள் பல காலமாக வெளிப்படையாகச் சொல்லி வருகிறோம். அதிபரின் பேச்சும் அதைத் தான் காட்டுகிறது.
இது ஒரு இந்தோ-பசிபிக் மாநாடு. இந்தோ-பசிபிக் பகுதியில் சீனா ஒரு முக்கிய நாடு. எனவே, அது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. ஆனால், இந்த மாநாட்டில் சீனாவைத் தாண்டி பல விஷயங்கள் குறித்தும் ஆலோசனைகள் நடந்தது" என்றார்.












Click it and Unblock the Notifications