வூஹான் மையம் - கொரோனா தோற்றம்.. அதிமுக்கிய ஆவணத்தை பைடன் அரசுக்கு கொடுத்த சீன அமைச்சர்..அடுத்து என்ன
வாஷிங்டன்: அமெரிக்காவில் தஞ்சம் புகுந்துள்ள சீன உள்நாட்டு பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் டோங் ஜிங்வே, வூஹான் மையத்திலிருந்து கொரோனா பரவியது குறித்த முக்கிய ஆவணங்களை பைடன் நிர்வாகத்திடம் கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
கொரோனா வைரஸ் பல நாடுகளையும் முற்றிலுமாக புரட்டிப் போட்டு வருகிறது. கொரோனா வைரசுக்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் சில மாதங்களில் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் கொரோனா தோற்றம் குறித்து இன்னும் உறுதியாகத் தெரியவில்லை. வரும் காலங்களில் இதுபோல் மீண்டும் ஒரு பெறுந்தொற்று ஏற்படாமல் இருக்க கொரோனா தோற்றம் குறித்துத் தெளிவான தகவல் தேவை எனப் பல நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன.

கொரோனா தோற்றம்
சீனாவின் வூஹான் நகரிலுள்ள வைராலஜி மையத்திலிருந்து கொரோனா பரவியிருக்கலாம் எனக் கூறப்பட்டது. அமெரிக்கா, கனடா, பிரிட்டன் என பல்வேறு நாடுகளும் இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது. அதாவது வூஹான் வைராலஜி மையத்திலிருந்து தவறுதலாக கொரோனா வைரஸ் வெளியுலகிற்குப் பரவியிருக்கலாம் என்பது இந்த நாடுகளின் கருத்து

சீன அமைச்சர்
இந்நிலையில், சீன உள்நாட்டு பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் டோங் ஜிங்வே அமெரிக்காவில் தஞ்சம் புகுந்துள்ளதாகவும் அவர் வூஹான் மையத்திலிருந்து கொரோனா பரவியது குறித்த முக்கிய ஆவணங்களை அதிபர் பைடனிடம் கொடுத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சர் டோங் ஜிங்வேவும் அவரது மகளும் கடந்த பிப்ரவரி மாதம் சீனாவிலிருந்து அமெரிக்காவுக்குத் தஞ்சம் புகுந்ததாக ஸ்பைடாக் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

முக்கிய ஆவணங்கள்
அமெரிக்க அரசிடம் இவர் அளித்த அதி முக்கிய தகவலின் அடிப்படையிலேயே பைடன் நிர்வாகம் வூஹான் மையத்தில் கொரோனாவின் தோற்றம் குறித்த ஆய்வுகளைத் தீவிரப்படுத்த உத்தரவிட்டுள்ளது. இம்மாத தொடக்கத்திலேயே டிரம்பிற்கு ஆதரவாக இருக்கும் தளங்களும் சீனாவின் முக்கிய அதிகாரி ஒருவர் அமெரிக்காவில் தஞ்சம் புகுந்துள்ளதாகச் செய்தி வெளியிட்டிருந்தது.

யார் இந்த டோங் ஜிங்வே
சீனாவில் உயர் பதவியில் இருக்கும் அமைச்சர் ஒருவர் இப்படி வெளிநாட்டில் தஞ்சம் புகுவது இதுவே முதல்முறையாகும். டோங் ஜிங்வே உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சகத்தில் நீண்டகாலம் பணிபுரிந்தவர். சீனாவில் உள்ள உளவாளிகளைப் பிடிப்பதே இவரது பணியாக இருந்தது. கடந்த ஏப்ரல் 2018இல் இவருக்குத் துணை அமைச்சராகப் பதவி உயர்வு வழங்கப்பட்டது.

இல்லை
டோங் ஜிங்வே அமெரிக்காவில் தஞ்சம் புகுந்தது குறித்து சீன வெளியுறவு அமைச்சக முன்னாள் அதிகாரி ஹான் லியான்சாவோ என்பவரே முதலில் கேள்வி எழுப்பியிருந்தார். சீன வெளியுறது துறையில் முக்கிய அதிகாரியாக பணிபுரிந்த ஹான் லியான்சாவோ கடந்த 1989ஆம் ஆண்டு சீனாவிலிருந்து அமெரிக்காவுக்குத் தஞ்சம் புகுந்தவர். இருப்பினும், இது குறித்த தகவல்கள் எதுவும் இப்போது வரை உறுதி செய்யப்படவில்லை.

வெளியாகும் தகவல்
அமைச்சர் டோங் ஜிங்வே கடந்த பிப்ரவரி மாதம் ஹாங்காங் வழியாக அமெரிக்கா சென்றதாகக் கூறப்படுகிறது. இவர் கடந்த செப்டம்பர் 2020க்கு பிறகு எந்தவொரு பொது நிகழ்ச்சியிலும் பங்கேற்கவில்லை என்றும் இவர் சார்ந்த புகைப்படங்களையும் இணையதளத்தில் இருந்து சீனா நீக்கி வருவதாகவும் அமெரிக்காவிலுள்ள சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சீனா விளக்கம்
ஆனால், இந்தத் தகவல்களைச் சீனா முற்றிலுமாக மறுத்துள்ளது. அமைச்சர் டோங் ஜிங்வே எந்த நாட்டிற்குத் தப்பிச் செல்லவில்லை என்றும் அவர் சீனாவிலேயே இருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், அவர் கடந்த ஜூன் 18ஆம் தேதி தான் சீனாவில் உளவாளிகளைக் கண்டறிவது குறித்த பயிற்சி நிகழ்வில் உரையாற்றியதாகவும் சீனா விளக்கமளித்துள்ளது.












Click it and Unblock the Notifications