அமெரிக்க அதிபர் தேர்தல்.. டிரம்பை முந்தும் ஜோ பிடன்... கருத்துக் கணிப்புகள் கூறுவது என்ன..?
வாஷிங்டன்: அமெரிக்கா அதிபர் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், பல மாகாணங்களில் டிரம்பை ஜோ பிடன் முந்தியுள்ளதாக கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
உலகமே உற்றுநோக்கிக் கொண்டிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. கடந்த இரண்டு மாதங்களாக அனல் பறக்க நடைபெற்ற பிரச்சாரங்கள் முடிவுக்கு வரவுள்ளன.

இந்நிலையில் சி.என்.என். தொலைக்காட்சி அமெரிக்காவில் நடத்திய சர்வேயில், மிச்சிகன் மற்றும் விஸ்கான்ஸின் போன்ற முக்கிய மாநிலங்களில் ஜோ பிடனுக்கு ஆதரவு பெருகியிருப்பது தெரியவந்துள்ளது. கடந்த முறை குடியரசுக் கட்சி வெற்றி பெற்ற இரு மாகாணங்களிலும் இந்த முறை ஜனநாயக கட்சியின் கொடி பறப்பதை கருத்துக்கணிப்புகள் மூலம் அறிய முடிந்துள்ளது.
இதேபோல் வடக்கு கரோலினா மற்றும் அரிஜோனா உள்ளிட்ட மாகாணங்களில் ஜனநாயக கட்சிக்கும், குடியரசுக் கட்சிக்கும் மிக கடுமையான போட்டி நிலவி வருவது கருத்துக் கணிப்பு முடிவில் வெளியாகியுள்ளது. சம பலத்துடன் இரண்டு கட்சிகளும் திகழ்வதால் அந்த இரு மாகாணங்களிலும் மக்களின் ஆதரவு யாருக்கு என்பதை துல்லியமாக கணக்கிட முடியாத சூழல் உருவாகியுள்ளது.
அரிஜோனா, வடக்கு கரோலினா, விஸ்கான்சின், மிச்சிகன் ஆகிய நான்கு மாகாணங்களிலும் கடந்த 2016-ல் டிரம்ப் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த முறை அந்த மாகாணங்களில் டிரம்புக்கான ஆதரவு குறைந்திருப்பதை அறிய முடிவதாக சி.என்.என். கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரிஜோனா மாகாணத்தில் ஜோ பிடனுக்கு 50% ஆதரவு உள்ளதாகவும் டிரம்புக்கு 46% ஆதரவு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், விஸ்கான்சினை பொறுத்தவரை ஜோ பிடனுக்கு 52% ஆதரவு நிலையில் டிரம்புக்கு 44% மட்டுமே ஆதரவு நிலை இருப்பதாகவும் சி என் என் கூறியுள்ளது.
பொருளாதார நிலை மற்றும் கொரோனா கால நிர்வாக முறை ஆகிய இரண்டின் அடிப்படையில் இந்த முறை வாக்காளர்கள் தங்கள் ஆதரவு யாருக்கு என்பதை முடிவு செய்வதாகவும் சி.என்.என். தொலைக்காட்சி நடத்திய சர்வேயில் தெரியவருகிறது. மொத்தத்தில் டிரம்புக்கான ஆதரவு சற்று குறைந்திருப்பதும் பிடனுக்கான ஆதரவு பெருகியிருப்பதும் அந்த கருத்துக் கணிப்பு மூலம் தெரிய வருகிறது.












Click it and Unblock the Notifications