குறையும் வேக்சின் தடுப்பாற்றல்.. தடுப்பூசி போட்டவர்களையும் தாக்கும் கொரோனா.. திணறும் வல்லரசு நாடுகள்
வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா 4ஆம் அலை தொடங்கிவிட்டது. அங்குள்ள பெரும்பாலான பகுதிகளில் தினசரி வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேபோல அதிக பேருக்கு வேக்சின் செலுத்திய இஸ்ரேல் நாட்டிலும் 4ஆம் அலை பரவ தொடங்குவதற்கான அறிகுறிகள் ஏற்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
Recommended Video
தற்போதைய சூழலில் கொரோனா வைரஸ் தான் உலக நாடுகளில் முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. வல்லரசு நாடுகள் முதல் பின்தங்கிய நாடுகள் வரை அனைத்தும் இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது.
அதிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருப்பதால், அடுத்த அடுத்த அலைகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது. இது தான் அனைத்து நாடுகளுக்கும் பெரிய சிக்கலாக உள்ளது,

அமெரிக்கா
குறிப்பாக, இந்த கொரோனா பாதிப்பால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட ஒரு நாடாக அமெரிக்கா உள்ளது. அமெரிக்காவில் இதுவரை 3.7 கோடி பேருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல 6.40 லட்சம் பேர் அமெரிக்காவில் உயிரிழந்துள்ளனர். உலகிலேயே கொரோனாவால் அதிக மக்களை இழந்த ஒரு நாடாக அமெரிக்காவே உள்ளது. கொரோனா முதல் அலையிலேயே அமெரிக்கா மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது. இது அந்நாட்டின் அதிபர் தேர்தலிலும் கூட எதிரொலித்தது.

அதிபர்
அமெரிக்க அதிபர் தேர்தல் சமயத்திலேயே கூட வைரஸ் பாதிப்பு அதிகரிக்க அப்போதைய அதிபர் டிரம்பின் மோசமான நடவடிக்கைகளே காரணம் எனக் குற்றஞ்சாட்டிய பைடன், தான் அதிபரான பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வேக்சின் மையங்கள் அதிகரிக்கப்படும் என்றும் பைடன் உறுதி அளித்தார். அதேபோல அதிபராகப் பொறுப்பேற்ற பிறகு வேக்சின் பணிகளை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுத்தார். இதன் மூலம் குறைந்த காலத்தில் அதிகப்படியான மக்களுக்கு வேக்சின் போட முடிந்தது.

வேக்சின் பணிகள்
அமெரிக்காவில் இப்போது குறைந்தது 60% பேருக்கு குறைந்தது ஒரு டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது. ஆனால், கடந்த ஏப்ரல் மே மாதம் முதலே அமெரிக்காவில் வேக்சின் பணிகள் மெல்லக் குறைந்து வருகிறது. மக்களிடையே வேக்சின் பற்றிய தயக்கம் அதிகரித்துள்ளதே இதற்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. பொதுவாக அமெரிக்காவில் மாகாண அரசுகளுக்கு அதிகாரம் அதிகம். அப்படி பிற்போக்குத்தனமாக அரசைக் கொண்டிருக்கும் சில மாகாண அரசுகள் எடுக்கும் சில சர்ச்சை முடிவுகளும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க முக்கிய காரணமாக அமைகிறது.

டெக்சாஸ் மாகாண ஆளுநர்
அப்படி அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாண ஆளுநராக உள்ளவர் கிரெக் அபோட். குடியரசு கட்சியைச் சேர்ந்த இவர், கட்டாய மாஸ்க் மற்றும் வேக்சின்களுக்கு எதிரான கருத்துகளைத் தொடர்ந்து தெரிவித்து வந்தார். இந்தச் சூழலில் கிரெக் அபோட்டுக்கு இப்போது கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து தனிமையில் உள்ள கிரெக் அபோட், ஆன்டிபாடி சிகிச்சை பெற்று வருகிறார்.

என்ன காரணம்
டெக்ஸாஸ் மாகாணத்தில் கடந்த வாரம் தினசரி வைரஸ் பாதிப்பு 15,000ஆக உள்ளது. இது கடந்த வார வைரஸ் பாதிப்புடன் ஒப்பிடுகையில் 8% அதிகமாகும். டெக்ஸாஸ் மட்டுமின்றி அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களிலும் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. டெல்டா கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதே இதற்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. இது மற்றொரு அலையை ஏற்படுத்தும் என்றும் அஞ்சப்படுகிறது.

இஸ்ரேல்
இஸ்ரேல் நாட்டிலும் இப்போது இதே பிரச்சினை தான் ஏற்பட்டுள்ளது. இத்தனைக்கும் இஸ்ரேல் நாட்டில் உள்ள 70% பேருக்கு ஏற்கனவே 2 டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது. உலகிலேயே தனது மக்கள்தொகையில் அதிக சதவிகிதம் பேருக்கு வேக்சின் போட்ட இஸ்ரேல் நாட்டிலும்கூட இப்போது வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது.வேக்சின் போட்டவர்கள் மத்தியிலும்கூட கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.

குறையும் தடுப்பாற்றல்
வேக்சின் தடுப்பாற்றல் பற்றிய தரவுகள் இன்னும் தெளிவாகக் கிடைக்கவில்லை. இருப்பினும், வேக்சின் செலுத்திக் கொண்ட பிறகு 6 முதல் 8 மாதங்களில் தடுப்பாற்றல் குறையத் தொடங்குவது தெளிவாகத் தெரிகிறது. அதேநேரம் தீவிர கொரோனா பாதிப்பு ஏற்படுவதையும் மருத்துவமனைகளில் அனுமதியாக வேண்டிய சூழலை ஏற்படுவதையும் கொரோனா வேக்சின் மிகச் சிறப்பாகவே தடுக்கிறது. அதிலும் குறிப்பாக வேக்சின் போட்டவர்களில் 50 வயதுக்கு மேல் உள்ளவர்களிடையே கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. மக்களுக்கு 3ஆவது டோஸாக பூஸ்டர் டோஸ் போடுவது குறித்து இஸ்ரேல் இதுவரை எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை.

பைசர் வேக்சின்
இஸ்ரேல் நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் பைசர் வேக்சின் மட்டும் 3 வாரக் கால இடைவெளியில் அளிக்கப்பட்டுள்ளது. மற்ற அனைத்து நாடுகளிலும் பல வேக்சின்கள் பல்வேறு கால இடைவெளியில் அளிக்கப்படுகிறது. அதிலும் குறிப்பாகப் பிரிட்டன், கனடா போன்ற நாடுகளில் 2 வேக்சின் இடைவெளி 12 வாரங்களாக உள்ளது. வேக்சின் டோஸ்களுக்கு இடையேயான கால இடைவெளியை அதிகரிப்பதன் மூலம் வேக்சின் தடுப்பாற்றலை அதிகரிக்க முடிவதாக சில ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. அதன் அடிப்படையிலேயே சில நாடுகள் முடிவை எடுத்துள்ளன. வேக்சின் தடுப்பாற்றல் குறைந்தாலும் கூட தீவிர கொரோனா பாதிப்பையும் உயிரிழப்புகளையும் அனைத்து கொரோனா வேக்சின்களுமே குறைப்பதால், பொதுமக்கள் அனைவரும் விரைவில் தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும் என ஆய்வாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications