சூடானில் உச்சக்கட்ட அதிகார மோதல்.. விண்வெளியில் இருந்து பார்த்தாலும் தெரியும் சேதங்கள்
வாஷிங்டன்: சூடான் நாட்டில் ராணுவம் மற்றும் துணை ராணுவம் இடையே கடும் மோதல் நடைபெற்று வருகிறது. இந்த மோதலால் கடுமையான சேதங்கள் அந்த நாட்டில் ஏற்பட்டுள்ளது. விண்வெளியில் இருந்து பார்த்தாலும் கூட சேதமடைந்த பகுதிகள் தெரிகிறதாம்.
ஆப்பிரிக்காவின் வடகிழக்கில் இருக்கும் நாடு சூடான். இந்த நாட்டில் தற்போது அதிகார மோதல் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது.

ராணுவ தளபதியாக இருக்கும் அப்தல் ஃபத்தா அல் புர்ஹானுக்கும் துணை ராணுவப் படை தளபதி முகமது ஹம்தான் டக்ளோவுக்கும் இடையே யார் அதிகாரத்தை கைப்பற்றுவது என்பது தொடர்பாக வெடித்த மோதலே தற்போது நடைபெறும் இந்த சண்டைக்கு காரணம் ஆகும்.
சூடானில் நடைபெறும் இந்த மோதலால் அப்பாவி பொதுமக்கள் உயிரிழப்பு ஒரு பக்கம் ஏற்பட்டு வருகிறது. பெரும்பாலும் முஸ்லீம்கள் வசிக்கும் சூடானில் இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரம்ஜானின் போது வெடித்துள்ள மோதல் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த மோதலை முடிவுக்குக் கொண்டுவர உலக நாடுகள் வேண்டுகோள் கோரிக்கை வைத்துள்ளன. இருந்தாலும் தொடர்ந்து மோதல் நடைபெற்று வருகிறது.

ராணுவம் - துணை ராணுவம் இடையே நடைபெற்ற இந்த மோதலில் இதுவரை 270 பேர் பலியாகி இருக்கின்றனர். 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். சூடானில் ஏற்பட்டுள்ள இந்த உள்நாட்டு யுத்தத்தால் அங்கு வசிக்கும் இந்தியர்களும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, சூடானில் நடைபெற்று வரும் மோதலால் ஏற்பட்ட சேதங்கள் விண்வெளியில் இருந்து கூட பார்த்தாலும் தெரியும் அளவிற்கு உள்ளது. அந்த நாட்டின் உள்நாட்டு மோதல் எந்த அளவு சேதங்களை ஏற்படுத்தி வருகிறது என்பதற்கு சான்று போல இது அமைந்து இருக்கிறது.

மேக்சர் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனத்தின் செயற்கை கோள் வெளியிட்டுள்ள படத்தின் படி, கார்டூம் விமான நிலையத்தில் விமானங்கள் சேதம் அடைந்த நிலையில் நிற்கும் காட்சிகள் தெளிவாக தெரிகின்றன. அதேபோல், நாடு முழுவதும் பல இடங்களில் மோதல் நடைபெற்றுள்ளதை விவரிக்கும் வகையில் இந்த படங்கள் அமைந்துள்ளன.












Click it and Unblock the Notifications