வர்த்தக போரை ஆரம்பித்த டிரம்ப்? "பதிலடி தருவோம்.." ரெசிப்ரோக்கல் வரியால் கொந்தளிக்கும் உலக நாடுகள்!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் ரெசிப்ரோக்கல் வரி குறித்த அறிவிப்பை வெளியிட்டார். உலக நாடுகள் மீது 10% முதல் 49% வரை இறக்குமதி வரி அறிவிக்கப்பட்டுள்ளது. இது சர்வதேச அளவில் பதற்றத்தை அதிகரிப்பதாகவே இருக்கிறது. இதற்கிடையே டிரம்பின் இந்த அறிவிப்புக்கு உலக நாடுகளின் தலைவர்கள் என்ன மாதிரி பதிலடி கொடுத்துள்ளனர் என்பதை நாம் பார்க்கலாம்.
அமெரிக்காவை மீண்டும் உலகின் தலைசிறந்த நாடாக மாற்றப்போவதாகக் கூறும் அதிபர் டிரம்ப், இதற்காக ரெசிப்ரோக்கல் வரியை அறிவித்தார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை டிரம்ப் வெள்ளை மாளிகையில் வைத்து வெளியிட்டார். அதன்படி உலக நாடுகளுக்கு 10% முதல் 49% வரை இறக்குமதி வரி அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக நாடுகள்
இந்த இறக்குமதி வரி வரும் ஏப்ரல் 9ம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே டிரம்பின் இந்த ரெசிப்ரோக்கல் வரி அறிவிப்பிற்கு உலக நாடுகளின் தலைவர்கள் என்ன மாதிரியான பதிலடியைக் கொடுத்துள்ளனர் என்பதை நாம் பார்க்கலாம்.
இந்த நியாயமற்ற நடவடிக்கைக்கு அமெரிக்க மக்கள் அதிக விலை கொடுக்க நேரிடும் என்று ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "இந்த நியாயமற்ற வரிகளுக்கு மிகப் பெரிய விலையை அமெரிக்க மக்கள் தான் செலுத்தப் போகிறார்கள். இதன் காரணமாகவே நாங்கள் பதிலடியாக எந்தவொரு வரியையும் விதிக்கப்போவது இல்லை. அப்படி நாங்களும் வரியை அறிவித்தால் எங்கள் நாட்டிலும் விலை அதிகரிக்கும். வளர்ச்சி குறையும்.. எனவே நாங்கள் அதைச் செய்யப்போவது இல்லை" என்று அவர் கூறினார்.
கொந்தளிக்கும் கனடா
டிரம்பின் வரிகள் சர்வதேச வணிகத்தையே பாதிக்கும் என குறிப்பிட்ட கனடா பிரதமர் மார்க் கார்னி, இதற்கு எதிராக நிச்சயம் போராடப் போவதாக அறிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "ஸ்டீல், அலுமினியம் மற்றும் ஆட்டோமொபைல்கள் மீதான அமெரிக்க வரிகள் பல லட்சம் கனடா மக்களைக் கடுமையாகப் பாதிக்கும். எனவே, இதற்குப் பதிலடி கொடுக்கும் நடவடிக்கைகளை நாங்கள் நிச்சயம் எடுப்போம்.. அதுவும் வெகு சீக்கிரமாக நடவடிக்கை இருக்கும்" என்றார்.
பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரும் இந்த வரி அறிவிப்பைக் கடுமையாக எதிர்த்துள்ளார். இந்த வர்த்தகப் போர் யாருக்கும் நன்மையைத் தராது என அவர் விமர்சித்தார். மேலும் அவர், "நாங்கள் அனைத்திற்கும் தயாராகவே இருக்கிறோம். எதுவாக இருந்தாலும் சமாளிப்போம். தேவை என்றால் பதிலடியும் தருவோம்" எனக் குறிப்பிட்டார்.
நடவடிக்கை எடுப்போம்
அமெரிக்காவின் இந்த வரி விதிப்பு இரு தரப்பையும் பாதிக்கும் என ஜெர்மனி கவலை தெரிவித்துள்ளது. அதேபோல ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், "நாங்கள் எங்கள் நிறுவனங்களையும் தொழிலாளர்களையும் பாதுகாப்போம். சர்வதேச வணிகத்திற்குப் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதே எங்கள் நிலைப்பாடு. அதேநேரம் எங்கள் தொழிலாளர்களைக் காக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுப்போம்" என்றார்.
ஸ்வீடன் பிரதமர் உல்ஃப் கிறிஸ்டர்சன், தனது நாடு வர்த்தக தடைகளை விரும்பவில்லை என்று குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், "நாங்கள் ஒரு வர்த்தகப் போரை விரும்பவில்லை ... அமெரிக்காவுடன் சேர்ந்து வர்த்தகம் செய்ய விரும்புகிறோம். அப்போது தான் எங்கள் நாட்டு மக்களின் நல்வாழ்வை உறுதி செய்ய முடியும்" என்றார்.
ஐரோப்பிய ஒன்றியம்
அதேநேரம் ஐரோப்பிய ஒன்றியம் டிரம்ப்பின் இந்த வரிகளுக்கு ஏப்ரல் மாத இறுதிக்குள் பதிலடி கொடுக்கும் என்று பிரான்ஸ் அரசின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார். டிரம்பின் இந்த வரி விதிப்பால் 27 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியமும் கணிசமாகப் பாதிக்கப்படும். ஐரோப்பாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஸ்டீல் மற்றும் அலுமினியம் அதிகம் ஏற்றுமதி செய்யப்படும் நிலையில், இந்த வரி அறிவிப்பை அந்த துறையைக் கடுமையாகப் பாதிக்கும்.












Click it and Unblock the Notifications