Donald Trump: ஈரானுடன் பேச பாகிஸ்தான் போக வேண்டாம்..அமெரிக்க குழுவின் பயணத்தை ரத்து செய்த டிரம்ப்! என்ன நடந்தது?
வாஷிங்டன்: ஈரானுடன் இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தைக்காக பாகிஸ்தானுக்கு செல்ல இருந்த அமெரிக்க பிரதிநிதி குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். இதனால் ஈரானுடன் நடைபெற இருந்த இரண்டாவது கட்ட அமைதி பேச்சுவார்த்தை பாதிக்கப்பட்டுள்ளது. ஈரானுக்கு எதிரான போரில் அனைத்து ஆதிக்கமும் அமெரிக்காவிடமே இருப்பதால், 18 மணி நேர பயணம் இனி அவசியமில்லை என்று டிரம்ப் கூறினார்.
இது தொடர்பாக டிரம்ப் கூறுகையில், "சில நேரம் முன்பு என் குழுவினர் புறப்படத் தயாராக இருந்தார்கள். அப்போது நான் 'இல்லை, நீங்கள் 18 மணி நேரம் பறந்து அங்கே செல்ல வேண்டாம். எல்லா ஆதிக்கமும் நம்மிடம் தான் உள்ளது. அவர்கள் எப்போது வேண்டுமானாலும் எங்களை தொடர்புகொள்ளலாம். ஆனால் பயனில்லாத பேச்சுகளுக்காக இனி 18 மணி நேர பயணங்கள் எதுவும் இருக்காது என்று கூறிவிட்டேன்" என்றார்.

இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை ரத்து?
பேச்சுவார்த்தைக்காக பாகிஸ்தான் வந்த ஈரானிய அதிகாரிகளும், ஈரான் திரும்பிவிட்டனர். இதனால் ஈரான் - அமெரிக்கா இடையே நடைபெறுவதாக இருந்த இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை தற்போதைக்கு நடைபெறாது எனத்தெரிகிறது. இதனால் மேற்காசியாவில் பதற்றம் அதிகரித்துள்ளது.
அமெரிக்கா - ஈரான் இடையே ஒரு மாதத்திற்கும் மேலாக போர் நீடித்து வந்த நிலையில், பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்து தற்காலிக போர் நிறுத்தத்தை கொண்டு வந்துள்ளது. போரை முடிவுக்கு கொண்டு வர பாகிஸ்தானில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
மீண்டும் தாக்குதல் தொடங்குகிறதா?
இதையடுத்து, இரண்டாவது கட்ட அமைதிப் பேச்சுவார்த்தையை நடத்த பாகிஸ்தான் தீவிர முயற்சி மேற்கொண்டது. இதன் பலனாக இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க அமெரிக்க அதிபர் டிரம்பின் பிரதிநிதிகளாக டிரம்பின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப், அமெரிக்க அதிபரின் மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோர் செல்ல இருந்தனர்.
ஆனால், ஈரானிய பிரதிநிதிகள் குழு, பாகிஸ்தான் பிரதமர் மற்றும் ராணுவ தளபதியை சந்தித்துவிட்டு ஈரான் திரும்பியது. இதையடுத்தே, டிரம்பும் தனது குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளார். இது தொடர்பாக பேசிய டிரம்ப், தனது தூதர்களின் பயணத்தை ரத்து செய்துவிட்டதால், ஈரான் மீதான தாக்குதல் மீண்டும் தொடங்கும் என்று அர்த்தம் இல்லை. இன்னும் அது பற்றி நாங்கள் சிந்திக்கவில்லை" என்றார்.
நாங்களே மேலோங்கி இருக்கிறோம்
மேலும் தனது ட்ரூத் சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட டிரம்ப் கூறியிருந்ததாவது:- "பாகிஸ்தானுக்கு சென்று ஈரானியர்களை சந்திக்க இருந்த என் பிரதிநிதிகளின் இஸ்லாமாபாத் பயணத்தை நான் இப்போது ரத்து செய்து விட்டேன். பயணத்தில் அதிக நேரம் வீணாகிறது, வேலைகளும் அதிகமாக உள்ளன.
எல்லாவற்றிற்கும் மேலாக ஈரானின் 'தலைமைத்துவத்தில்' பெரிய அளவில் குழப்பம் நிலவுகிறது. யார் பொறுப்பில் உள்ளார்கள் என்று அவர்களுக்கே தெரியவில்லை. மேலும், நாங்களே மேலோங்கி இருக்கிறோம். அவர்களிடம் எதுவும் இல்லை பேச வேண்டுமெனில், அவர்கள் செய்ய வேண்டியது ஒன்றே எங்களை அழைப்பது மட்டும்தான்" என்று அவர் சமூக ஊடகத்தில் பதிவிட்டார்.














Click it and Unblock the Notifications