"பைடன் விலகல் என்பதே மிக பெரிய சதி.." டிரம்ப் பரபர பேச்சு.. அமெரிக்காவில் இதுபோல நடந்ததே இல்லை
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ள டிரம்ப் இன்று எலான் மஸ்கிற்கு நேர்காணல் அளித்தார். அதில் அவர் பைடன் அதிபர் தேர்தல் ரேஸில் இருந்து விலகியது திட்டமிட்ட சதி என்று விமர்சித்தார். மேலும், அவர் தன் மீது நடந்த கொலை முயற்சி தாக்குதல் குறித்தும் விரிவாகப் பேசியிருந்தார்.
குடியரசு கட்சி சார்பில் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டிரம்ப் ட்விட்டர் தளத்தில் எலான் மஸ்கிற்கு பேட்டி அளித்தார். இந்த நேர்காணலின் போது டிரம்ப் பல முக்கிய விஷயங்களில் டிரம்ப் தனது நிலைப்பாட்டைப் பகிர்ந்து கொண்டிருந்தார்.

பெரிய சதி: அமெரிக்க அதிபர் தேர்தல் ரேஸில் இருந்து பைடன் கட்டாயப்படுத்தி வெளியேற்றப்பட்டதாகவும் இது கிட்டத்தட்ட ஆட்சி கவிழ்ப்பிற்கு இணையானது என்று டிரம்ப் தெரிவித்தார். இந்த சதி காரணமாகவே ஜோ பைடன் அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார்.
அமெரிக்காவில் இதுபோல நடந்ததே இல்லை: இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "பைடன் உடனான எனது விவாதம் அனைவருக்கும் நினைவில் இருக்கும். அதில் நான் டிரம்பை மிக மோசமாக வீழ்த்தினேன்.. அமெரிக்க வரலாற்றில் நடந்த மிகச் சிறப்பான விவாதங்களில் அதுவும் ஒன்று.. இதன் காரணமாகவே ஜனநாயக கட்சியினர் அவரை கார்னர் செய்து வெளியேற்றிவிட்டனர். அமெரிக்க அதிபர் தேர்தல் ரேஸில் இருந்து பைடன் வெளியேறி இருப்பது மிகப் பெரிய சதி" என்று அவர் தெரிவித்தார்.
கொலை முயற்சி சம்பவம்: டிரம்பின் இந்த கருத்தை முழுமையாக ஆதரிப்பதாகத் தெரிவித்த எலான் மஸ்க் மேலும் கூறுகையில், "சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் பைடனை அவர்கள் வலுக்கட்டாயமாக உள்ளே இழுத்துச் சென்று காலி செய்துவிட்டனர் என்று சொல்லலாம்" என்றார். இந்த நேர்காணலில் டிரம்ப் மீது கடந்த மாதம் நடந்த கொலை முயற்சி தாக்குதல் குறித்தும் விரிவாகப் பேசினார். இந்த கொடூர தாக்குதலுக்கு பிறகும் பின்வாங்காமல் இருக்கும் டிரம்பை பாராட்டுவதாக எலான் குறிப்பிட்டார்.
என்ன நடந்தது: அப்போது டிரம்ப் மேலும் கூறுகையில், "அது மோசமான ஒரு சம்பவம்.. அன்று என்ன நடந்தது என்பதை என்னால் நம்பவே முடியவில்லை. இதுபோன்ற அதிசய சம்பவங்கள் குறித்து மற்றவர்கள் சொல்லிக் கேள்விப்பட்டு இருக்கிறேன். ஆனால், எனக்கே நடந்ததை நம்பவே முடியவில்லை.. என் மீது அது பட்ட உடனேயே அது ஒரு தோட்டா தான் என்பது எனக்குத் தெளிவாகத் தெரிந்தது. எனது காதை உரசியதுமே என்னால் உணர முடிந்தது. இது எவ்வளவு பெரிய அதிசயம் என்பதை என்னால் உணர முடிகிறது. கடவுளை நம்பாதவர்களும் நம்பத் தொடங்கும் தருணமாக இருக்கிறது" என்று அவர் தெரிவித்தார்.
மேலும், இந்த நேர்காணலில் அவர் பல்வேறு விஷயங்கள் குறித்தும் விரிவாகப் பேசினார். குறிப்பாக வடகொரிய அதிபரைப் பாராட்டினார். மேலும், தான் அதிபராக இருந்து இருந்தால் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து இருக்காது என்றும் தெரிவித்தார். இவை அனைத்தையும் விட டிரம்ப் திடீரென சீனாவைப் பாராட்டி இந்த நேர்காணலில் பேசினார். இது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
தொழில்நுட்ப கோளாறு: முன்னதாக இந்த நேர்காணலைத் தொடங்க சில நொடிகள் மட்டுமே இருந்த போது திடீரென ட்விட்டர் தளத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் இந்த நேர்காணலில் தொடக்கத்தில் சில பேரால் மட்டுமே கேட்க முடிந்தது. இருப்பினும், கொஞ்ச நேரத்தில் அந்த தொழில்நுட்ப சிக்கல் சரி செய்யப்பட்டது. அதன் பிறகு சுமார் 13 லட்சம் பேர் இந்த நேர்காணலைக் கேட்டது குறிப்பிடத்தக்கது..












Click it and Unblock the Notifications