டிரம்ப் ஒரே போடு! "நாடுகடத்தல்.." அடுத்து சொன்ன வார்த்தை தான் முக்கியம்.. இந்தியர்களுக்கு ஆபத்தா?
வாஷிங்டன்: அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழைந்தவர்கள் நாடு கடத்தும் பணிகளை டிரம்ப் அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்குச் சர்வதேச அளவில் அதிருப்தி அதிகரிக்கும் போதிலும், டிரம்ப் தனது முடிவில் இருந்து பின்வாங்குவதாக இல்லை. அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படுவோர் அனைவரும் மோசடி செய்பவர்கள், ஏமாற்றுபவர்கள் எனக் கூறி பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப், பதவியேற்றது முதலே தனது நாட்டில் சட்டவிரோதமாக நுழைந்தோரை நாடு கடத்தும் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். இந்தியா உட்படப் பல நாடுகளுக்குச் சட்டவிரோதமாக நுழைந்தவர்களை அமெரிக்க அதிகாரிகள் நாடு கடத்தி வருகிறார்கள்.

நாடு கடத்தல்
அமெரிக்காவில் இது வழக்கமாக நடக்கும் நடவடிக்கை தான் என்றாலும், புலம்பெயர்ந்தோரை நாடு கடத்துவதை டிரம்ப் ஒரு முக்கிய கொள்கையாகவே ஆக்கியுள்ளார். இதனால் அமெரிக்க அதிகாரிகள் இதில் தீவிரம் காட்டி வருகிறார்கள். அதேநேரம் உலக நாடுகள் டிரம்பின் நடவடிக்கைக்கு அதிருப்தி தெரிவித்து வருகிறார்கள். ஏனென்றால் நாடு கடத்தப்படுவோர் கை, கால்களில் விலங்கிடப்பட்டு ராணுவ விமானத்தில் நாடு கடத்தப்படுகிறார்கள். இது பெரும் விமர்சனத்தைக் கிளப்புவதாக இருக்கிறது.
சர்வதேச அளவில் எதிர்ப்புகள் அதிகரிக்கும் சூழலில், டிரம்ப் நிர்வாகம் தனது போக்கை மாற்றிக்கொள்ளும் என்றே பலரும் நினைத்தனர். இருப்பினும், டிரம்ப் தனது நடவடிக்கைகளில் உறுதியாக இருக்கிறார். சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோரை மட்டுமே நாடு கடத்துவதாக டிரம்ப் கூறியிருக்கிறார்.

டிரம்ப் திட்டவட்டம்
அமெரிக்காவில் கன்சர்வேடிவ் மாநாட்டில் பேசிய டிரம்ப், "மோசடிக்காரர்கள், பொய்ச் சொல்லும் நபர்கள், ஏமாற்றுக்காரர்கள், அரசு ஆதிக்கத்தை ஆதரிப்போரை மட்டுமே நாங்கள் நாடு கடத்துகிறோம். சட்டவிரோத ஏலியன் குற்றவாளிகள் அவர்கள் வீட்டிற்கு அனுப்பப்படுகிறார்கள். நாங்கள் தேவையற்ற குப்பைகளை நீக்கி, மக்கள் அரசை மீட்டெடுக்கிறோம்" என்றார்.
கடந்த 2022ஆம் ஆண்டின் டேட்டாவின்படி, அமெரிக்காவின் மொத்த மக்கள்தொகையில் சுமார் 3.3 சதவீதம் பேர் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களாக உள்ள்ளனர். அவர்களையே நாடு கடத்தும் டிரம்ப் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்தியர்கள்
இந்தியர்களைப் பொறுத்தவரை சுமார் 7 லட்சம் பேர் ஆவணமில்லாமல் சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கி வருவதாகக் கூறப்படுகிறது. மத்திய அமெரிக்க நாடுகளான எல் சால்வடார் மற்றும் குவாட்டமாலா நாடுகளுக்கு இணையாக அங்கு இந்தியர்களும் சட்டவிரோதமாகக் குடியேறியுள்ளனர்.. டிரம்ப் நிர்வாகம் சுமார் 18,000 இந்தியர்கள் நாடுகடத்த உத்தரவிட்டுள்ள நிலையில், 3000 பேர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அதாவது ஒட்டுமொத்தமாக சுமார் 20,000 இந்தியர்கள் நாடு கடத்தப்படும் அபாயத்தில் உள்ளனர். அதேநேரம் மீதமுள்ள 95% பேர் நாடுகடத்தப்படும் அபாயம் குறைவு என்றே சொல்லலாம்.
எவ்வளவு காலம் ஆகும்?
ஒருவேளை டிரம்பின் உத்தரவைத் தொடர்ந்து நாடு கடத்தப்படும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டாலும் அனைவரையும் நாடுகடத்துவது எளிமையான வேலை இல்லை. தினசரி 3000 பேரை நாடு கடத்தப்பட்டாலும் கூட தற்போதுள்ள வெளிநாட்டினரை நாடு கடத்த ஆண்டுக்கணக்கில் ஆகும். மேலும், சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் பெரும்பாலும் குறைந்த வருமானம் தரும் வேலையில் தான் உள்ளனர்.
அவர்கள் மொத்தமாக நாடுகடத்தப்பட்டால் வேலைக்கு ஆட்கள் கிடைக்க மாட்டார்கள். இதனால் சம்பளமும் கூட உயரும் அபாயம் ஏற்படும் என்றும் இது அமெரிக்கப் பொருளாதாரத்தைப் பாதிக்கும் என்றும் அந்நாட்டின் பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications