"காதில் வெள்ளை கட்டு.." ஆனா சிரிப்பு மாறல.. துப்பாக்கி சூட்டிற்கு பின் எப்படி இருக்கிறார் டிரம்ப்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த டிரம்ப் மீது கடந்த சில நாட்களுக்கு முன்பு துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடைபெற்றது. நல்வாய்ப்பாக இதில் டிரம்ப் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். இதற்கிடையே துப்பாக்கிச் சூடு தாக்குதலுக்குப் பிறகு முதல்முறையாக டிரம்ப் பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். காதில் வெள்ளை கட்டுடன் நிகழ்ச்சியில் பங்கேற்ற டிரம்பிற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடக்கிறது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் பைடன், குடியரசு கட்சி சார்பில் டிரம்ப் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

அமெரிக்காவின் மில்வாக்கியில் இப்போது குடியரசுக் கட்சியின் தேசிய மாநாடு நடந்து வருகிறது. இந்த மாநாட்டின் இறுதியில் தான் குடியரசு கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக டிரம்ப் அறிவிக்கப்பட உள்ளார். அமெரிக்க நேரப்படி திங்கள் மாலை நடந்த இந்தக் கூட்டத்தில் டிரம்ப் கலந்து கொண்டார்.
துப்பாக்கிச் சூடு: கடந்த சில நாட்களுக்கு முன்பு பென்சில்வேனியாவில் பிரச்சாரம் செய்த டிரம்பை படுகொலை செய்ய அவர் மீது துப்பாக்கிச் சூடு நடந்தது. இருப்பினும், அதில் லேசான காயத்துடன் டிரம்ப் உயிர் தப்பினார். பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்ட டிரம்பை நோக்கி 20 வயதான இளைஞர் துப்பாக்கிச் சூடு நடத்தினார்.
இருப்பினும், நல்வாய்ப்பாக அந்த குண்டு டிரம்பின் தலையில் படாமல் அவரது காதை மட்டும் உரசிச் சென்றது. இதையடுத்து அவர் உடனடியாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். அதன் பிறகு சில மணி நேரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
முதல்முறை: இந்தக் கொலை முயற்சி சம்பவத்திற்குப் பிறகு டிரம்ப் பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்வது இதுவே முதல்முறையாகும். தேசிய மாநாட்டிற்கு வந்த டிரம்பிற்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. காதில் வெள்ளை பேண்டேஜ் அணிந்தபடி, டிரம்ப் மாநாடு நடந்த அரங்கில் நுழைய அங்குத் திரண்டிருந்தவர்கள் உற்சாக கரகோஷம் எழுப்பினர்.
டிரம்ப் தனது துணை அதிபர் வேட்பாளரான வான்ஸுடன் இதில் கலந்து கொண்டார். 78 வயதான டிரம்ப் இந்த மாநாட்டில் உரையாற்றவில்லை.. அங்கிருந்தவர்கள் "அமெரிக்கா! அமெரிக்கா!" என்ற கோஷமிட அவர்களுடன் இணைந்து டிரம்பும் கோஷமிட்டார்.
உற்சாக வரவேற்பு: இந்த மாநாட்டில் 2,400க்கும் மேற்பட்ட குடியரசு கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் டிரம்ப், நீல நிற உடையும் தனது ஐக்கானிக் சிவப்பு டை அணிந்திருந்தார்.. இந்த மாநாட்டில் பேசிய பலரும் டிரம்ப் எவ்வளவு மோசமான தாக்குதலில் இருந்து தப்பியுள்ளார் என்பதை விளக்கிப் பேசினார். 4 நாட்கள் இந்த மாநாடு நடக்கும் நிலையில், கடைசி நாளான வியாழக்கிழமை தான் டிரம்ப் குடியரசு கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட உள்ளார்.
டிரம்ப்: அமெரிக்காவைப் பொறுத்தவரை ஒருவரால் அதிகபட்சம் இரண்டு முறை மட்டுமே அதிபராக இருக்க முடியும். அதேநேரம் அதிபர் தேர்தலில் எத்தனை முறை வேண்டுமானாலும் போட்டியிடலாம். டிரம்ப் முதலில் கடந்த 2016ல் அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இருப்பினும், 2020இல் நடந்த அதிபர் தேர்தலில் பைடனிடம் டிரம்ப் தோல்வி அடைந்தார்.
இந்தச் சூழலில் தான் டிரம்ப் இந்தாண்டு நடக்கும் அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுகிறார். குடியரசு கட்சி சார்பில் தொடர்ந்து மூன்று முறை அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஒரே நபர் டிரம்ப் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications