பாகிஸ்தானை பாராட்டி தள்ளிய டிரம்ப்.. இந்தியாவுக்கு வார்னிங்.. அமெரிக்க நாடாளுமன்றத்தில் பரபர பேச்சு
வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக 2வது முறையாக பொறுப்பேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் நேற்று முதல் முறையாக அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் பேசினார். அப்போது அவர் பாகிஸ்தானை பாராட்டி தள்ளிய நிலையில் இந்தியாவுக்கு கடும் வார்னிங் விடுத்தார். ஏற்கனவே எஃப் 16 ரக போர் விமான பராமரிப்புக்கு பல ஆயிரம் கோடிகளை அள்ளிக்கொடுத்த அமெரிக்கா இப்போது அந்த நாட்டை பாராட்டி உள்ளதால் இந்தியாவின் விருப்பத்தை மீறி டிரம்ப் பாகிஸ்தானுடன் நெருக்கமாக செயல்பட விரும்புகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்ட் டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் 20ம் தேதி பொறுப்பேற்றார். இதையடுத்து அவர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். டொனால்ட் டிரம்பின் ஒவ்வொரு நடவடிக்கையும் பல்வேறு நாடுகளையும் கலங்க வைத்துள்ளது.

இந்நிலையில் தான் அமெரிக்க அதிபராக 2வது முறையாக பொறுப்பேற்ற பிறகு டொனால்ட் டிரம்ப் முதல் முறையாக அந்த நாட்டின் நாடாளுமன்ற கூட்டு குழுவில் நேற்று உரையாற்றினார். டொனால்ட் டிரம்பின் குடியரசு கட்சி மற்றும் மாஜி அதிபர் ஜோ பைடனின் ஜனநாயக கட்சியினர் மத்தியில் டிரம்ப் பேசினார்.
இந்த வேளையில் மாஜி அதிபர் ஜோ பைடனை அவர் கடுமையாக விமர்சனம் செய்தார். இதற்கு ஜனநாயக கட்சியின் எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கோஷமிட்டனர். இருப்பினும் டொனால்ட் டிரம்ப் தனது பேச்சை நிறுத்தவில்லை. எதிர்ப்புக்கு நடுவே அவர் தொடர்ந்து பேசினார். இந்த வேளையில் டொனால்ட் டிரம்ப் அண்டை நாடான பாகிஸ்தான் பாராட்டியதோடு, நம்நாட்டுக்கு வார்னிங் செய்துள்ளார். இதுதொடர்பாக டொனால்ட் டிரம்ப் பேசியதாவது:
‛‛அமெரிக்கா பயங்கரவாத அமைப்புகளை எதிர்த்து போராடுவதில் உறுதியாக உள்ளது. மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ஆப்கானிஸ்தான் காபூலில் அப்பய் கேட்டில் நடந்த பயங்கரவாத குண்டுவெடிப்பு தாக்குதலில் 13 அமெரிக்க படை வீரர்கள், 100க்கும் அதிகமான ஆப்கானிஸ்தான் பொதுமக்கள் பலியாகினர். இதில் தொடர்புடைய பயங்கரவாதியை இன்று பிடித்துள்ளோம். அவர் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டு வருகிறார். அமெரிக்கா நீதித்துறையின் கடும் தண்டனையை அவர் எதிர்கொள்ள உள்ளார். இது தாக்குதலில் இறந்த 13 வீரர்களின் குடும்பத்துக்கு நீதியை வழங்கும்'' என்றார்.
மறுபுறம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நம் நாட்டுக்கு டொனால்ட் டிரம்ப் வார்னிங் செய்துள்ளார். இதுபற்றி டொனால்ட் டிரம்ப் பேசுகையில், ‛‛அமெரிக்காவின் பொருட்களுக்கு பல நாடுகள் அதிக வரிகளை விதிக்கிறது. இதில் இந்தியாவும் ஒன்று. இந்தியா உள்பட பல நாடுகள் அமெரிக்கா பொருட்களுக்கு அதிக வரி விதிக்கிறது. வரும் ஏப்ரல் 2ம் தேதி முதல் அனைத்து நாடுகளுக்கும் பதிலுக்கு பதிலாக வரி என்பது விதிக்கப்படும்'' என்று கூறினார். இதன்மூலம் இந்தியாவுக்கு ஏப்ரல் 2ம் தேதி முதல் டொனால்ட் டிரம்ப் கூடுதல் வரியை விதிப்பேன் என்று வார்னிங் செய்துள்ளார்.
இதன்மூலம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் பாகிஸ்தானை மிரட்டி நம்நாட்டுக்கு டொனால்ட் டிரம்ப் வார்னிங் செய்துள்ளார். மேலும் பாகிஸ்தானை டொனால்ட் டிரம்ப் பாராட்ட முக்கிய காரணம் கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் நடந்த தற்கொலை படை தாக்குதல் சம்பவம் தான். அதாவது ஆப்கானிஸ்தானில் நடந்த உள்நாட்டு போர் காரணமாக அமெரிக்க படைகள் அங்கு முகாமிட்டு இருந்தன. அமெரிக்கா மாஜி அதிபர் ஜோ பைடன் உத்தரவை தொடர்ந்து 2021ல் ஒவ்வொரு கட்டங்களாக அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு நாடு திரும்பின. 2021 ஆகஸ்ட் 26ல் காபூலில் இருந்து கடைசி கட்டமாக அமெரிக்க படை வீரர்கள் புறப்பட்டனர்.
இதை சாதகமாக பயன்படுத்தி தாலிபான்கள் காபூலை நோக்கி விரைந்தனர். இந்த வேளையில் தாலிபான்கள் ஆட்சியை பிடித்து விடுவார்கள் என்ற அச்சத்தில் ஏராளமான பொதுமக்கள் காபூல் விமான நிலையத்தில் இருந்து விமானத்தில் தப்பிக்க முயன்றனர். அப்போது விமான நிலையத்தில் அப்பய் கேட் பகுதியில் தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் 13 அமெரிக்க படை வீரர்கள் பலியாகினர். 170 ஆப்கன் மக்கள் இறந்தனர். இந்த தாக்குதலுக்கு முக்கிய காரணம் ஐஎஸ்ஐஎஸ் - கே பயங்கரவாத அமைப்பாகும். இந்த அமைப்பை சேர்ந்தவரும், தாக்குதலுக்கு முக்கிய காரணமாக இருந்தவருமான முகமது ஷபியுல்லாவை அமெரிக்கா கைது செய்து நாடு கடத்தி உள்ளது. இவரை கைது செய்வதில் பாகிஸ்தான் அரசு அமெரிக்காவுக்கு உதவி செய்தது. இதற்கு தான் டொனால்ட் டிரம்ப் பாகிஸ்தானுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு பாகிஸ்தானுக்கு டொனால்ட் டிரம்ப் சுமார் 3,500 கோடியை அள்ளி வழங்கியிருந்தார். அதாவது அமெரிக்கா சார்பில் வெளிநாடுகளுக்கு வழங்கப்படும் நிதி உதவியை டொனால்ட் டிரம்ப் அதிபரானதும் நிறுத்தினார். தற்போது திடீரென்று டொனால்ட் டிரம்ப் தனது நிலைப்பாட்டை மாற்றி பாகிஸ்தானுக்கு கோடிகளை கொட்டி கொடுத்தார். அமெரிக்காவின் எஃப் 16 ரக போர் விமானங்களை பாகிஸ்தான் பயன்படுத்தி வருகிறது. இந்த போர் விமானங்களை பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைக்கு பயன்படுத்த அமெரிக்கா வழங்கி உள்ளது. இந்த விமானங்களை பராமரிக்க ரூ.3,461 கோடியை டொனால்ட் டிரம்ப் அள்ளி வழங்கி உள்ளார்.
நமக்கும், பாகிஸ்தானுக்கும் எல்லை பிரச்சனை உள்ளது. நீண்டகாலமாக மோதல் உள்ளது. இப்படியான சூழலில் தான் எஃப் 16 ரக போர் விமானங்களை பராமரிக்க அவர் ரூ.3,461 கோடியை அள்ளி கொடுத்துள்ளார். இந்த போர் விமானங்களை இந்தியா மீதான தாக்குதலுக்கு பயன்படுத்த கூடாது என்று அமெரிக்கா கண்டிஷன் போட்டே இந்த நிதியை வழங்கி உள்ளது. இருப்பினும் பாகிஸ்தானுக்கு எஃப் 16 ரக போர் விமானங்களின் பராமரிப்புக்கு டிரம்ப் வழங்கிய நிதி என்பது நம் நாட்டுக்கு பெரும் அச்சுறுத்தலாகவே பார்க்கப்படுகிறது. இப்படியான சூழலில் தான் தற்போது மீண்டும் பாகிஸ்தானை டிரம்ப் பாராட்டி உள்ளார்.
பொதுவாகவே நம் நாட்டுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே நீண்டகாலமாக நல்ல உறவு உள்ளது. அப்படி பாகிஸ்தானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே தான் நல்ல உறவு என்பது இருந்தது. கடந்த சில ஆண்டுகளாக இந்த உறவில் விரிசல் என்பது ஏற்பட்டது. இப்படியான சூழலில் தற்போது டொனால்ட் டிரம்ப் அதிபரானதும் அவர் பாகிஸ்தானை பாராட்டி, நிதியை அள்ளி வழங்கி அரவணைக்க தொடங்கி உள்ளார். இதனால் இந்தியா சுதாரிப்பாக இருக்க வேண்டும் என்கின்றனர் சர்வதேச அரசியல் வல்லுநர்கள்.












Click it and Unblock the Notifications