"உக்ரைன் போர் தொடர இந்தியா தான் காரணம்.." ஐநா சபையில் வைத்து சீண்டிய டிரம்ப்! பரபர குற்றச்சாட்டு
வாஷிங்டன்: ஐநா சபையில் உரையாற்றிய அதிபர் டிரம்ப், உக்ரைன் போர் தொடர இந்தியாவும் சீனாவும் தான் காரணம் என குற்றஞ்சாட்டினார். ரஷ்யாவுக்கு நிதி அளிக்கும் முக்கிய நாடுகளாக இந்தியாவும், சீனாவும் இருப்பதாகவும் அவர் சாடினார். ரஷ்ய எண்ணெய்யையும், எரிவாயுவையும் இவ்விரு நாடுகளும் தொடர்ந்து வாங்குவதன் மூலம் ரஷ்யாவுக்கு உதவுவதாகக் குறிப்பிட்டார்.
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் 80வது அமர்வு நடந்து வருகிறது. இதில் இன்றைய தினம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உரையாற்றினார். அப்போது பல்வேறு விஷயங்கள் குறித்தும் டிரம்ப் பேசினார். இந்தியா பாகிஸ்தான் மோதல் உட்பட முடிவுக்கே வராத 7 போர்களைத் தான் நிறுத்தியதாக அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

டிரம்ப் பேச்சு
மேலும், உக்ரைன் போரை மிக எளிதாக முடிவுக்குக் கொண்டு வர முடியும் என்று தெரிவித்த டிரம்ப், எரிசக்தி விற்பனை மூலம் கிடைக்கும் வருவாய் தான் ரஷ்யா தாக்குதலைத் தொடர காரணமாக இருப்பதாகவும் தெரிவித்தார். ரஷ்யா போரைத் தொடர இந்தியா மற்றும் சீனா நிதி அளிப்பதாகவும் அவர் நேரடியாகக் குற்றம் சாட்டினார்.
ஐநா உரை
டிரம்ப் மேலும் பேசுகையில், "உக்ரைன் போரில் ரஷ்யா நல்ல நிலையில் இல்லை. உலக வல்லரசுகள் ரஷ்யாவுக்குப் போரைத் தொடர வளங்களை வழங்கக்கூடாது. ஐரோப்பிய நாடுகளும், நேட்டோ நாடுகளும் தொடர்ந்து ரஷ்ய எண்ணெய்யை வாங்குவது சரியான போக்கு இல்லை. ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டுவர ஐரோப்பிய நாடுகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் அமெரிக்காவே இந்த விவகாரத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கத் தயாராக இருக்கிறது.
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர ரஷ்யா தயாராக இல்லை என்றால் வரிகளை விதிக்கும். ஆனால், இந்த வரிகள் பயனுள்ளதாக இருக்க வேண்டுமானால், ஐரோப்பிய நாடுகளும் இதே போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நியூயார்க்கில் ஐரோப்பிய தலைவர்களுடன் நடைபெறும் பேச்சுவார்த்தையில் இது குறித்து நிச்சயம் பேசுவேன்" என்றும் டிரம்ப் கூறினார்.
மறுக்கும் டிரம்ப்
உக்ரைன் போரை விரைவாக முடிவுக்குக் கொண்டு வருவேன் என்று டிரம்ப் பலமுறை கூறிய போதிலும், அது முடிவுக்கு வருவது போலத் தெரியவில்லை. ரஷ்யா தொடர்ச்சியாகத் தனது தாக்குதலை நடத்தியே வருகிறது. இந்தப் போர் தொடர அமெரிக்காவின் ராஜதந்திரத் தோல்விகள் காரணம் என்பதை ஒப்புக்கொள்ள மறுக்கும் டிரம்ப், தொடர்ச்சியாக மற்ற நாடுகளைக் குற்றஞ்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
உக்ரைன் விவகாரம் தவிர, பயோ ஆயுதங்களுக்குச் சர்வதேச அளவில் தடை விதிக்கவும் டிரம்ப் வலியுறுத்தினார். அது தொடர்பாக டிரம்ப் பேசுகையில், "நாம் ஆபத்தான ஆயுதங்களின் அச்சுறுத்தலைக் குறைக்க முயல்கிறோம். அதன்படி நாம் பயோ ஆயுதங்களை அழிக்க வேண்டும். பயோ ஆயுதங்களின் வளர்ச்சியை முற்றிலுமாக முடிவுக்குக் கொண்டுவர அனைத்து நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கிறேன்" என்றார்.
இந்தியா பாகிஸ்தான் மோதல்
மேலும், தான் பதவிக்கு வந்த பிறகு ஏழே மாதங்களில் முடிவுக்கே வராத ஏழு போர்களை நிறுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்தியா பாகிஸ்தான் மோதல் உட்பட ஏழு போர்களை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், "சில போர்கள் 31 ஆண்டுகள், 36 ஆண்டுகள் கூட நீடித்தது. அவற்றை முடிவுக்குக் கொண்டு வரவே முடியாது எனப் பலரும் சொன்னார்கள். ஆனால், இந்த ஏழு போர்களையும் நான் முடிவுக்குக் கொண்டு வந்தேன்" என்றும் அவர் தெரிவித்தார்












Click it and Unblock the Notifications