நேரில் தான் வரணும்னு அவசியம் இல்லை.. போன்ல கூட பேசலாம்! ஈரானுக்கு புது ஆஃபர் கொடுத்த டிரம்ப்
வாஷிங்டன்: ஈரான் அமெரிக்கா இடையே அமைதிக்கான இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை தடைபட்டுள்ள நிலையில், மேலும் இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. பேச்சுவார்த்தையை தொடர நினைத்தால் ஈரான் எப்போது வேண்டுமானாலும் எங்களிடம் பேசலாம் என தற்போது அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். மேலும், தொலைபேசி வாயிலாக கூட பேசலாம் எனவும், எங்களிடம் மிகவும் பாதுகாப்பான டெலிபோனிக் லைன்கள் உள்ளன என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.
ஈரான் மீது கடந்த பிப்ரவரி மாதம் 28 ஆம் தேதி அமெரிக்கா போர் தொடுத்தது. இஸ்ரேலும் - அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது கடுமையான தாக்குதலை நடத்தின. அமெரிக்காவின் தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயேதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். ஈரானின் முக்கிய கட்டமைப்புகள் நொறுக்கப்பட்டன.

ஈரான் அமெரிக்கா அமைதி பேச்சுவார்த்தை
இதனால், அமெரிக்காவின் ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் பதில் தாக்குதல் நடத்தியது. இதன் காரணமாக வளைகுடா நாடுகளில் பதற்றம் ஏற்பட்டது. ஹார்முஸ் ஜலசந்தியையும் ஈரான் மூடியதால் எண்ணெய் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஈரான் - அமெரிக்கா போரின் தீவிரம் எல்லை மீறி சென்ற நிலையில், பாகிஸ்தான் தலையிட்டு பிறகு இருநாடுகளுக்கும் இடையே தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது.
இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற முதல் கட்ட அமைதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அமெரிக்காவின் நிபந்தனைகளை எற்றுக்கொள்ள முடியாது எனவும் போரினால் சாதிக்க முடியாததை பேச்சுவார்த்தை மூலம் சாதிக்க நினைப்பதாக குற்றம் சாட்டியது ஈரான். முதல் கட்ட அமைதி பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில் இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டது. இதற்கான முயற்சிகளில் பாகிஸ்தானும் முழுவீச்சில் ஈடுபட்டது.
எப்போது வேண்டுமானாலும் பேசலாம் - டிரம்ப்
இந்த நிலையில், இரண்டாவது சுற்று பேச்சும் தடைபட்டுள்ளது. அமெரிக்காவுடன் நாங்கள் நேரடியாக பேசமாட்டோம். பாகிஸ்தான் வழியாகவே பேசுவோம் என்று ஈரான் கூறி வருகிறது. இன்னொரு பக்கம், பாகிஸ்தானுக்கு பேச்சுவார்த்தை குழு இனி செல்லாது என்று டிரம்ப் நேற்று கூறியிருந்தார். இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை தடைபட்டுள்ள நிலையில், ஈரான் - அமெரிக்கா இடையே பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.
இதற்கிடையே, பேச்சுவார்த்தையை தொடர நினைத்தால் ஈரான் எப்போது வேண்டுமானாலும் எங்களிடம் பேசலாம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். மேலும், தொலைபேசி வாயிலாக கூட பேசலாம் எனவும், எங்களிடம் மிகவும் பாதுகாப்பான டெலிபோனிக் லைன்கள் உள்ளன என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.
மேலும், ஈரான் - அமெரிக்கா போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று கூறியுள்ள டிரம்ப், இந்த மோதலில் அமெரிக்காவே வெற்றி பெறும். ஈரான் விவகாரத்தில் நாங்கள் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருபவர்களில் சிலர் மிகவும் நியாயமானவர்கள்; மற்றவர்கள் அவ்வாறு அல்ல. ஈரான் புத்திசாலித்தனமாக நடந்துகொள்ளும் என்று நான் நம்புகிறேன்," என்று டிரம்ப் கூறினார்.












Click it and Unblock the Notifications