அமெரிக்காவில் இனி ஆண், பெண் என்ற இரண்டு பாலினங்கள்தான்! டிரம்ப் போடும் முதல் கையெழுத்து!
வாஷிங்டன்: அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்டு டிரம்ப் இன்று பதவியேற்றுள்ளார். இந்நிலையில், தான் போடும் முதல் கையெழுத்து ஆண், பெண் பாலினம் குறித்தாக இருக்கும் என்று டிரம்ப் கூறியுள்ளார்.
அதாவது இனி அமெரிக்காவில் ஆண், பெண் என்கிற இரண்டு பாலினங்கள் மட்டுமே இருக்கும் என்று டிரம்ப் உத்தரவு பிறப்பிப்பார் என்று சொல்லப்படுகிறது.

அமெரிக்க அதிபராக நான் வெற்றி பெற்றால், இனி ஆண், பெண் என்கிற இரண்டு பாலினங்கள்தான் இருக்கும் என்று தேர்தல் பிரசாரத்தின்போது டிரம்ப் கூறியிருந்தார். அதேபோல, தற்போது பதவியேற்பு முடித்து தனது முதல் உரையில் இதற்கான சட்டத்தில் கையெழுத்திட உள்ளதாக டிரம்ப் கூறியுள்ளார்.
வாஷிங்டன் டிசியில் வெள்ளை மாளிகையில் அதிபராக பதவியேற்றுக்கொண்ட டிரம்ப், தனது முதல் உரையை நிகழ்த்தினார். அதில், "அமெரிக்கா பொற்காலத்தை இனி சந்திக்கப்போகிறது. பைடன் அரசாங்கத்தை பற்றி சில வார்த்தைகளை நான் கூற விரும்புகிறேன். அவருடைய அரசு பல தோல்விகளை சந்தித்திருக்கிறது. அவரால் எதையும் கட்டுப்படுத்த முடியவில்லை. ஆனால் இனி அமெரிக்கா முன்பை விட பெரியதாகவும், வலிமையாகவும் இருக்கும்.
பெருமைமிக்க, வளமான, சுதந்திரமான ஒரு தேசத்தை உருவாக்குவதே எனது நோக்கம். அமெரிக்காவில் ஆயுதயமயமாக்கல் இருக்கிறது. இதனை முடிவுக்கு கொண்டுவர முயற்சிப்பேன். அமெரிக்கா புலம் பெயர் மக்களால் பாதிக்கப்பட்டு வருகிறது. இங்க ஊழலும், லஞ்சமும் அதிகரித்து காணப்படுகின்றன. நாட்டிற்குள் சட்டவிரோதமாக நுழைந்தவர்களுக்கு முந்தைய அரசாங்கம் அனுமதியையும், புகலிடத்தையும் வழங்கியிருந்தது. ஒருபுறம் அமெரிக்க எல்லையை பாதுகாக்க முடியவில்லை. மறுபுறம் மற்ற நாடுகளின் எல்லையை பாதுகாக்க அரசு தாராளமாக நிதியை வழங்கி வந்தது. இனி எங்களால் புலம்பெயர்ந்தோரின் நெருக்கடியை ஏற்றுக்கொள்ள முடியாது.
அமெரிக்காவின் பிரச்சனையை தீர்க்க சொர்கத்திலிருந்து என்னை அந்த கடவுள்தான் அனுப்பி வைத்திருக்கிறார். கடந்த 8 ஆண்டுகளில் நான் நிறைய சோதனையை அனுபவித்துவிட்டேன். அதையெல்லாம் விடுங்கள். இப்போது நான் சில முக்கிய உத்தரவுகளில் கையெழுத்திட இருக்கிறேன். மிக முக்கியமாக தெற்கு எல்லையில் இப்போது முதல் அவசர நிலையை அமல்படுத்துகிறேன். அங்கு சட்டவிரோதமாக நுழைபவர்களை மீண்டும் அதே மெக்சிகோவுக்கு அனுப்புவேன் என நான் உறுதி கூறுகிறேன்.
நமது நாட்டில் பணவீக்கம் உச்சத்தில் இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் எரிசக்தி விலை உயர்வுதான். எனவே இதனை கட்டுப்படுத்த தேசிய எரிசக்தி அவசரநிலையை அறிவிக்கிறேன். இதன் மூலம் உள்நாட்டிலேயே எரிசக்தியை அதிகம் உற்பத்தி செய்ய முடியும். மீண்டும் அமெரிக்கா உற்பத்தி சக்தியாக மாறும்.
இந்த தருணத்தில் நான் வேறு முக்கியமான அறிவிப்பையும் வெளியிட இருக்கிறேன். அதாவது இனி எல்லா வகையான வாகனங்களுக்கும் அனுமதி வழங்கப்படும். மின்சார வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி என்கிற விதியை மாற்றுகிறேன். ஆட்டோமொபைல் தொழில்துறையை காப்பாற்ற வேண்டும்.
மிக முக்கியாக அமெரிக்காவில் இனி ஆண், பெண் என்கிற இரண்டு பாலினங்கள் மட்டுமே உண்டு என்கிற உத்தரவையும் பிறப்பிக்கிறேன்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications