H1-B ரூல்ஸை மொத்தமாக மாற்றும் டிரம்ப்.. இனி அமெரிக்கா போவதே கஷ்டம் தான்! இந்தியர்களுக்கு சிக்கல்?
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் தான் H-1B விசா விண்ணப்பக் கட்டணத்தை $100,000 டாலராக உயர்த்தி இருந்தார். ஆனால், ஹெச்-1பி விசா திட்டத்தில் அத்தோடு சேர்த்து மேலும் பல மாற்றங்களையும் அமெரிக்கா கொண்டு வர உள்ளதாம்.. முன்மொழியப்பட்டுள்ள மாற்றங்கள் எல்லாம் நடைமுறைக்கு வந்தால் விசா பயன்பாடு.. யார் தகுதி பெறுவார்கள் என அனைத்துமே கடுமையாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றது முதலே அவர் ஏகப்பட்ட மாற்றங்களைச் செய்து வருகிறார். குறிப்பாக அமெரிக்காவில் தங்கி இருக்கும் வெளிநாட்டினரைக் குறிவைத்தே பல மாற்றங்களைச் செய்து வருகிறார். இதனால் அமெரிக்காவில் இருக்கும் வெளிநாட்டினர் பல்வேறு பிரச்சினைகளைச் சந்தித்து வருகிறார்கள்.

ரூல்ஸை மாற்றும் டிரம்ப்
சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியவர்கள் மட்டுமில்லாமல் சட்டப்பூர்வமாகக் குடியேறியவர்களுக்கும் கூட இது சிக்கலைத் தருகிறது. இதற்கிடையே H-1B விசா பிரிவை மாற்றுவதற்கான புதிய விதிமுறைகளை அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (Department of Homeland Security) முன்மொழிந்துள்ளது. "H-1B விசா திட்டத்தைச் சீர்திருத்துதல்" என்ற தலைப்பில் இந்த முன்மொழிவு வழங்கப்பட்டுள்ளது.
இதில் குறிப்பிட்ட வேலை செய்வோருக்கு விசா வரம்புகளில் விதிவிலக்கு தரப்பட்டுள்ள நிலையில், அதை மறுபரிசீலனை செய்யத் திட்டமிட்டுள்ளனர். மேலும், ஹெச்-1பி விசா விதிகளை மீறும் நிறுவனங்களைக் கண்காணிப்பிற்கு உட்படுத்துவது உள்ளிட்ட முக்கிய மாற்றங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. அதேநேரம் இதில் என்ன மாற்றங்களைச் செய்யவுள்ளனர் என்பது குறித்து உரிய விளக்கம் தரப்படவில்லை.
யாருக்கு சிக்கல்
ஆனால், விலக்கு அளிக்கப்படும் துறைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டால் அது பல தரப்பையும் பாதிக்கும். குறிப்பாக இப்போது லாப நோக்கற்ற ஆராய்ச்சி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் சுகாதார அமைப்புகளுக்கு விலக்கு தரப்பட்டுள்ள நிலையில், அவர்களை இந்த ரூல்ஸ் மாற்றம் கடுமையாகப் பாதிக்கும் எனத் தெரிகிறது. ஹெச்-1பி விசா திட்டம் நேர்மையாகப் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்யவும் அமெரிக்கத் தொழிலாளர்களின் வேலைவாய்ப்புகளைப் பாதுகாப்பதுமே இதன் நோக்கம் என்றும் அந்த முன்மொழிவில் கூறப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறைகள் இந்தாண்டு டிசம்பர் மாதமே வெளியிடப்படும் என்றும் தெரிகிறது..
என்ன மாற்றம்
முன்னதாக, டிரம்ப் நிர்வாகம் வழக்கமாகப் பின்பற்றப்படும் H-1B விசா லாட்டரி முறையையும் கூட மாற்றி, ஊதியம் அடிப்படையிலான தேர்வு முறையைக் கொண்டுவர உள்ளதாக வருவதாகத் தகவல்கள் வெளியாகின. அதாவது ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே H-1B விசா வழங்கப்படும். அந்த எண்ணிக்கையைத் தாண்டி H-1B விசா விண்ணப்பங்கள் வரும்போது லாட்டரி அடிப்படையில் விசா ஒதுக்கப்படும். இந்த லாட்டரி முறையை டிரம்ப் கடுமையாக விமர்சித்து வரும் சூழலில் தான், அதை நீக்கிவிட்டு அதிகச் சம்பளம் பெறுவோருக்கு மட்டுமே விசா கொடுக்கும் திட்டத்தைக் கொண்டுவர உள்ளனர்.
இந்தியர்களுக்குப் பிரச்சினை?
H-1B விசா திட்டத்தைப் பொறுத்தவரை இந்தியர்களே அதில் அதிகம் பலனடைகிறார்கள். 2012 முதலே ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்ட ஹெச்-1பி விசா திட்டத்தில் கிட்டத்தட்ட 60% இந்தியர்களுக்கே கிடைத்து. 2023ல் அது மேலும் கூட அதிகரித்தது. இந்தச் சூழலில் டிரம்ப் நிர்வாகம் இதை மாற்றி அமைப்புடைய இந்தியர்களுக்கே சிக்கலைக் கொடுக்கும். இந்தியர்கள் ஹெச்-1பி விசா எளிதாகப் பெற முடியாத சூழலை இது உருவாக்கும் என்றே பல்வேறு தரப்பினரும் கூறுகிறார்கள்.
H-1B என்பது ஒரு தற்காலிக விசா வகை. இதன் மூலம் இந்தியர்கள் உட்பட உயர் திறன்கொண்ட வெளிநாட்டினருக்கு அமெரிக்காவில் நீண்டகாலம் பணிபுரியும் விசாவை பெறலாம்.. பின்னர் அவர்கள் குறிப்பிட்ட நிபந்தனைகளைப் பின்பற்றினால் நிரந்தரக் குடியுரிமை (கிரீன் கார்டு) பெறலாம். ஒவ்வொரு ஆண்டும் அதிகபட்சம் 65,000 ஹெச்-1பி விசா வழங்கப்படும். அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் படித்தவர்களுக்குக் கூடுதலாக 20,000 விசாக்கள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது..












Click it and Unblock the Notifications