ஒப்பந்தம் ஏற்படாமல் போகட்டு, அப்புறம் இருக்கு.. பேச்சுவார்த்தைக்கு முன்பே ஈரானை மிரட்டும் அமெரிக்கா
வாஷிங்டன்: ஈரான் - அமெரிக்கா இடையே அமைதி பேச்சுவார்த்தை நாளை பாகிஸ்தானில் நடைபெறுகிறது. இந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் தலைமையிலான உயர் மட்ட குழு அமெரிக்கா சார்பில் பங்கேற்கிறது. லெபனான் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல் நிறுத்தப்பட்டால்தான், பேச்சுவார்த்தையில் பங்கேற்போம் என்று ஈரான் ஒருபக்கம் கூறி வரும் நிலையில், ஜேடி வான்ஸ் பாகிஸ்தான் புறப்பட்டுள்ளார்.
பேச்சுவார்த்தைக்கு அமெரிக்க பிரதிநிதிகள் கிளம்பியுள்ள நிலையில், ஈரான் ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளாவிட்டால் அந்த நாட்டின் மீது முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு கடுமையான தாக்குதல்கள் நடத்தப்படும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார்.

ஈரான் அமெரிக்கா போர்
ஈரான் - அமெரிக்கா இடையே இரண்டு வாரங்களுக்கு தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. ஒரு மாதத்திற்கும் மேலாக கடுமையான மோதல் இரண்டு நாடுகளுக்கும் இடையே நடைபெற்று வந்தது. ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து வான் வழி தாக்குதல் நடத்திய நிலையில், பதிலுக்கு வளைகுடாவில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரானும் தாக்குதல் நடத்தியது. ஈரானில் சுமார் 3 ஆயிரம் பேர் கொல்லபப்ட்ட நிலையில், அமெரிக்காவும் முக்கிய போர் தளவாடங்களை பறிகொடுத்தது.
பாகிஸ்தான் புறப்பட்ட ஜேடி வான்ஸ்
போரின் தீவிரம் அதிகரித்துக்கொண்டே சென்ற நிலையில், ஈரானுக்கு கெடு விதித்த டிரம்ப், ஈரான் ஒப்பந்தத்தை ஏற்று ஹார்முஸ் ஜலசந்தியை திறக்காவிட்டால் அந்த நாட்டின் மீது இதுவரை இல்லாத அளவிற்கு தாக்குதல் நடத்தப்படும் என்று டிரம்ப் மிரட்டினார். இந்தக் கெடு முடிவதற்கு சில மணி நேரங்களே இருந்த நிலையில், பாகிஸ்தான் தலையிட்டதில் இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டது.
ஈரான் 10 அம்ச திட்டத்தை வெளியிட்ட நிலையில், இது தொடர்பாக ஆலோசிக்கவும் போர் நிறுத்தம் மேற்கொண்டு ஒப்பந்தம் மேற்கொள்ளவும் நாளை பாகிஸ்தானில் அமெரிக்கா - ஈரான் இடையே பேச்சு வார்த்தை நடைபெறுகிறது. இந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்கா சார்பில் அந்த நாட்டின் துணை அதிபர் ஜேடி வான்ஸ் பங்கேற்கிறார். இதற்காக அமெரிக்காவில் இருந்து தனி விமானத்தில் பாகிஸ்தானுக்கு ஜேடி வான்ஸ் புறப்பட்டார்.
சித்து விளையாட்டை காட்ட நினைத்தால்
அவர் வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக அமெரிக்காவின் அதி நவீன போர் விமானம் ஒன்றும் பாகிஸ்தான் வான்பரப்பில் தென்பட்டது. பாகிஸ்தானுக்கு புறப்படும் முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஜேடி வான்ஸ் கூறியதாவது:- "பேச்சுவார்த்தையை எதிர்நோக்கி உள்ளோம். இது சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.
ஈரான் ஏதாவது சித்து விளையாட்டை காட்ட நினைத்தால் பேச்சுவார்த்தைக் குழு அதற்கு அவ்வளவு இணக்கமாக இருக்காது என்பதை அவர்கள் உணர்வார்கள். நல்ல நம்பிக்கையுடன் பேச்சுவார்த்தையை ஈரான் முன்னெடுக்க தயாராக இருந்தால் நாங்களும் நிச்சயமாக எங்கள் கையை நீட்டத் தயாராக உள்ளோம்" என்றார்.
ஈரானை தாக்க தயாராக இருக்கின்றன
இதற்கிடையே, பேச்சுவார்த்தை தொடங்கும் முன்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈரானை கடுமையாக எச்சரித்துள்ளார். இது தொடர்பாக டிரம்ப் கூறுகையில், "பாகிஸ்தானில் நடைபெறும் பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக இல்லையென்றால், அமெரிக்க கப்பல்கள் ஆயுதங்களை ரீலோடு செய்து கொண்டு ஈரானை தாக்க தயாராக இருக்கின்றன" என்று எச்சரித்துள்ளார்.
உடன்பாடு எட்டப்படுமா?
லெபனான் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல் நிறுத்தப்பட்டால்தான் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று ஈரான் கூறி வருகிறது. ஆனால், தற்காலிக போர் நிறுத்தத்திற்கான நிபந்தனைகளில் ஹிஸ்புல்லா விவகாரம் இடம் பெறவில்லை என்று கூறும் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்துவோம் என்று கூறியுள்ளது. இதனை அமெரிக்காவும் ஆமோதித்துள்ள நிலையில், நாளைய பேச்சுவார்த்தை திட்டமிட்டபடி நடைபெற்று உடன்பாடு எட்டப்படுமா? இல்லை மீண்டும் மோதலை நோக்கி செல்லுமா என்பதை உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.












Click it and Unblock the Notifications