உலக நாடுகளுக்கு டிரம்ப் வார்னிங்! "எல்லா நாடுகளுக்கும் வரி.." புது லிஸ்ட் போடும் அமெரிக்க அதிபர்
வாஷிங்டன்: உலகின் அனைத்து நாடுகளுக்கும் 15-20% வரை அடிப்படை வரியாக விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருக்கிறார். அவர் விதித்துள்ள ஆகஸ்ட் 1ம் தேதி காலக்கெடு நெருங்கி வரும் நிலையில், டிரம்ப் தடாலடியாக இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்ய விரும்பும் நாடுகளுக்கு வரிகளை விதிக்கப் போவதாக டிரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் உலக நாடுகள் மீது வரிகளை அள்ளி வீசி வருகிறார். முதலில் கடந்த ஏப்ரல் மாதம் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இடையில் சில காலம் இது தொடர்பாக டிரம்ப் எதுவும் பேசாமல் இருந்தார். இதற்கிடையே அதிபர் டிரம்ப் மீண்டும் வரி குறித்து பேசியிருக்கிறார்.

15-20% வரை வரி
அதாவது எந்தெந்த நாடுகள் எல்லாம் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்ளவில்லையோ அந்த நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 15 முதல் 20 சதவீதம் வரை வரி விதிக்கப்படலாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியிருக்கிறார்.
ஸ்காட்லாந்துக்கு சென்றுள்ள டிரம்ப் அங்குப் பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை சந்தித்துப் பேசினார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், "உலக நாடுகளுக்கு நான் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளாத அனைத்து நாடுகளுக்கும் 15 முதல் 20 சதவீதம் வரை வரி விதிக்கப் போகிறேன். நான் கொஞ்சம் நல்லவராக இருக்க விரும்புகிறேன். இதன் காரணமாகவே குறைந்த வரி விதிக்க முடிவு செய்துள்ளேன்" என்று கூறினார்.
டிரம்ப் சொல்வது ஏன் முக்கியம்
கடந்த ஏப்ரல் மாதம் உலக நாடுகள் அனைத்திற்கும் டிரம்ப் ஒவ்வொரு வரியை அறிவித்தார். அதுபோக தனியாக அடிப்படை வரி என அனைத்து நாட்டிற்கும் 10%ஐ அறிவித்திருந்தார். இந்தச் சூழலில் அடிப்படை வரியே 15-20% வரை இருக்கும் என்பது போல டிரம்ப் கூறியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. இது சிறிய நாடுகளுக்கு இது பொருளாதார அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும்.
டிரம்ப் மேலும் பேசுகையில், "அமெரிக்காவில் வர்த்தகம் செய்ய விரும்பும் நாடுகளுக்கு வரி விதிக்கப்படும், ஏனெனில் நீங்கள் எங்களுக்கு எதுவமே செய்யாமல் சும்மா 200 ஒப்பந்தங்களை கையெழுத்திட முடியாது. அமெரிக்க நலன்களுக்கு முக்கியத்துவம் தரப்படும்" என்றார்.
இந்தியா அமெரிக்கா ஒப்பந்தம்
அதிபர் டிரம்ப் ஆகஸ்ட் 1ஆம் தேதியைக் காலக்கெடுவாக விதித்துள்ளார். இதுவரை பிரிட்டன், இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகள் மட்டுமே அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளது. இந்தியா உட்படப் பல நாடுகள் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்தியா அமெரிக்கா ஒப்பந்தம் முழு வர்த்தக ஒப்பந்தமாக இருக்காது. இது ஒரு இடைக்கால ஒப்பந்தமாகவே இருக்கும் எனச் சொல்லப்படுகிறது.
இந்த ஒப்பந்தம் இறுதியாகிவிட்டதாகவும் விரைவில் கையெழுத்தாகும் என டிரம்ப் கடந்த சில வாரங்களாகவே கூறி வருகிறார். இருப்பினும், விவசாயம் மற்றும் பால் உள்ளிட்ட துறைகளில் உடன்பாடு எட்டப்படவில்லை எனச் சொல்லப்படுகிறது. இந்தியா தரப்பில் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக மட்டுமே சொல்லப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
டிரம்ப்பின் வரிகள்
கடந்த வாரம் தான் டிரம்ப் ஜப்பான் மீது 15 சதவீதமும், இந்தோனேசியா மீது 16 சதவீதமும், ஐரோப்பிய ஒன்றியம் மீது 15 சதவீதமும் டிரம்ப் வரி விதித்தார். இருப்பினும், பிரேசில் மற்றும் லாவோஸ் போன்ற சில நாடுகள் 40 சதவீதம் மற்றும் 50 சதவீதம் வரை வரிகளை விதித்துள்ளது நினைவுகூரத்தக்கது.












Click it and Unblock the Notifications