"மோடி நல்ல நண்பர் தான்.. ஆனால் இந்தியாவுடன் ஒரு பெரிய பிரச்சனை இருக்கே!" புதிர் போட்ட அதிபர் டிரம்ப்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபரான டிரம்ப் தினசரி ஒவ்வொரு அறிவிப்புகளை வெளியிட்டு சர்ச்சைகளைக் கிளப்பி வருகிறார். அவர் வரும் ஏப்ரல் 2ம் தேதி முதல் ரெசிப்ரோகல் வரியை அமல்படுத்தப்போவதாக அறிவித்துள்ளார். இதற்கிடையே இந்தியா குறித்து அவர் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். இந்தியாவுடன் நல்லுறவு இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள டிரம்ப், ஆனால் ஒரே ஒரு சிக்கல் இருப்பதாகச் சொல்லி புதிர் போட்டுள்ளார்.
எப்போது அமெரிக்காவின் அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றாரோ அப்போது முதலே அவர் தொடர்ந்து சர்ச்சைகளைக் கிளப்பி வருகிறார். அவர் போடும் ஒவ்வொரு உத்தரவுகளும் சர்வதேச அளவில் பரபரப்புகளைக் கிளப்புவதாகவே இருக்கிறது. தனது இஷ்டத்திற்கு உலக நாடுகள் மீது வரியை விதிக்கும் டிரம்பால் சர்வதேச வணிகம் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது.

டிரம்ப்
ஏற்கனவே பல நாடுகள் மீது வரிகளை அறிவித்த டிரம்ப், வரும் ஏப்ரல் 2ம் தேதி முதல் ரெசிப்ரோகல் வரியை விதிக்கப் போவதாக அறிவித்துள்ளார். அதாவது அமெரிக்கா மீது ஒரு நாடு எவ்வளவு வரி விதிக்கிறதோ.. அதே அளவுக்கு அந்த நாடு மீதும் வரி விதிப்போம் என்பதே ரெசிப்ரோகல் வரியாகும். இந்த வரி அமலுக்கு வந்தால் அது சர்வதேச வர்த்தகத்தைக் கடுமையாகப் பாதிக்கும். இதற்கிடையே சமீபத்தில் அமெரிக்க டிவி சேனலுக்கு அளித்த நேர்காணலில் இந்தியா குறித்து டிரம்ப் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
ரெசிப்ரோகல் வரி
இந்தியாவுடன் மிக நல்ல உறவு இருப்பதாகத் தெரிவித்த டிரம்ப், ஆனால் ஒரே ஒரு பிரச்சினை இருப்பதாகக் குறிப்பிட்டார். அதாவது உலகிலேயே அமெரிக்கா மீது அதிக வரி விதிக்கும் நாடாக இந்தியா இருப்பது தான் பெரிய சிக்கலாக இருப்பதாக டிரம்ப் குறிப்பிட்டார். மேலும், ஏப்ரல் 2ம் தேதி இந்தியா மீதும் ரெசிப்ரோகல் வரியை விதிக்கப் போவதாக அவர் கூறினார்.
ஒரே ஒரு பிரச்சினை
அந்த நேர்காணலில் டிரம்ப் மேலும் கூறுகையில், "இந்தியாவுடன் எனக்கு மிகச் சிறந்த உறவு உள்ளது.. ஆனால் இந்தியாவுடன் எனக்கு ஒரே ஒரு பிரச்சினை இருக்கிறது. உலகிலேயே அமெரிக்கா மீது அதிகபட்ச வரியை விதிக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது. அமெரிக்கா மீதான வரியை இந்தியா குறைக்கும் என நம்புகிறேன். அதேநேரம் ஏப்ரல் 2ஆம் தேதி முதல் நிச்சயம் ரெசிப்ரோகல் வரியை விதிக்கத் தான் போகிறேன்" என்றார்.
இந்தியா- மத்திய கிழக்கு நாடுகள்-ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார வழித்தடம் குறித்த கேள்விக்கு டிரம்ப், "சில அற்புதமான நாடுகள் இணைந்து எளிதாக வர்த்தகம் செய்ய இந்த அற்புதமான வர்த்தக குழுவை உருவாக்கியுள்ளன. இருப்பினும், இந்த குழு அமெரிக்காவை மோசமாக நடத்த அனுமதிக்க முடியாது. அதேநேரம் நாம் பல விஷயங்களில் மற்ற நாடுகளை விடச் சிறப்பானநிலையிலேயே இருக்கிறோம்" என்றார்.
முதல்முறை இல்லை
அமெரிக்க அதிபர் டிரம்பிற்கும் இந்திய பிரதமர் மோடிக்கும் இடையே நீண்ட காலமாகவே நல்லுறவு இருந்துள்ளது. இருந்த போதிலும், அமெரிக்கா மீது இந்தியா அதிகபட்ச வரியை விதிப்பதாக டிரம்ப் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார். இந்தியா வரியைக் குறைக்கவில்லை என்றால் இந்தியப் பொருட்கள் மீதான வரியை அதிகரிப்போம் என டிரம்ப் கடந்த காலங்களிலும் பல முறை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications