இந்திய ஊழியர்களை மொத்தமாக கழற்றிவிடுகிறதா ட்விட்டர்? மார்க்கெட்டிங்கில் அனைவரும் நீக்கம் என தகவல்
வாஷிங்டன்: ட்விட்டரை விலைக்கு வாங்கியதில் இருந்து எலான் மஸ்க் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதில், தற்போது இந்தியர்களில் மார்க்கெட்டிங் பிரிவில் அனைவரும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறப்படுகிறது.
பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டரை உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
கருத்து பரிமாற்றங்களுக்கு முக்கிய சமூக வலைத் தளமாக விளங்கும் ட்விட்டரை கடந்த சில தினங்களுக்கு முன் உலகின் நம்பர் 1 பணக்காரரும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனருமான எலான் மஸ்க் வாங்கியிருந்தார்.

அதிரடி நடவடிக்கைள்
ட்விட்டரை வாங்கியதில் இருந்தே அடுத்தடுத்து அதிரடிகளை எலான் மஸ்க் காட்டி வருகிறார். குறிப்பாக ட்விட்டர் நிறுவனத்தின் சி இ ஓவாக இருந்த இந்தியரான பராக் அகர்வாலை அதிரடியாக நீக்கினார். அவரோடு வேறு சில உயர் அதிகாரிகளையும் கழற்றிவிட்டார். அதன்பிறகும் தனது அதிரடி நடவடிக்கைகளை சற்றும் சளைக்காமல் எலான் மஸ்க் செய்து வருகிறார்.

புளு டிக் வசதி
அப்படித்தான், அரசியல்வாதிகள், பிரபலங்களின் ஒரிஜினல் அக்கவுண்டுகள் என்பதை உறுதி செய்யும் வகையில் வழங்கப்படும் புளு டிக் வசதியை அனைவரும் பெறலாம் என்றும் அதற்கு கட்டணமாக 8 டாலர் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்து இருந்தார். அதுபோக தற்போது ஆள்குறைப்பு நடவடிக்கைகளையும் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

முழு வீச்சில் ஆள்குறைப்பு
லே ஆப் என்று அழைக்கப்படும் இந்த ஆள்குறைப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. ட்விட்டர் நிறுவனத்தில் உலகம் முழுவதும் பணியாற்றும் 7,500 பேரில் 3,378 பேரை வீட்டுக்கு அனுப்ப ட்விட்டர் நிர்வாகம் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான பணிகளை தொடங்கி விட்ட ட்விட்டர் நேற்று ஊழியர்கள் அனைவருக்கும் மெயில் அனுப்பியது.

வீட்டுக்கு திரும்பி விடுங்கள்
அதில் நீங்கள் அலுவலகத்திற்கு வந்து கொண்டிருந்தாலோ.. அல்லது வந்துவிட்டாலோ... வீட்டுக்கு திரும்பி விடுங்கள். நீங்கள் வேலையில் தொடர்ந்து இருக்கிறீர்களா? என்ற விவரம் மெயில் மூலமாக ஒவ்வொருவருக்கும் தெரியப்படுத்தப்படும் என்று கூறப்பட்டு இருந்தது. அதன்படி லே ஆஃப் செய்யும் பணி தொடங்கி விட்டதாக ட்விட்டர் ஊழியர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பலருக்கும் மெயில் வரத்தொடங்கி விட்டதாகவும் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக இந்தியாவில்..
என்ஜினியரிங், சேல்ஸ் மற்றும் மார்க்கெட்ட்டிங், கம்யூனிகேஷன்ஸ் உள்ளிட்ட டீம்களில் பணியாற்றுவர்கள் லே ஆப் செய்யப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன. குறிப்பாக ட்விட்டர் இந்தியாவில் ஒட்டுமொத்தமாக மார்க்கெட்டிங் மற்றும் கம்யூனிகேஷன் துறையில் பணியாற்றிய அனைவரும் நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. ட்விட்டர் இந்தியாவிடம் இமெயில் மூலமாக விளக்கம் கேட்கபட்ட போதிலும் பதில் அளிக்கவில்லை.












Click it and Unblock the Notifications