"எலான் மஸ்க் தான் ஒரே நம்பிக்கை" பளீச் என கூறிய ட்விட்டர் நிறுவனர் ஜாக் டோர்சி! காரணம் என்ன தெரியுமா
வாஷிங்டன்: பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டர் தளத்தை எலான் மஸ்க் வாங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், இது குறித்து ட்விட்டர் நிறுவனர் ஜாக் டோர்சி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாகவே அமெரிக்கா தொடங்கி உலகின் பல நாடுகளும் ட்விட்டர் நிறுவனத்துடன் தொடர்ந்து மோதல் போக்கே நிலவி வருகிறது.
இந்தியாவில் கூட புதிய ஐடி கொள்கைகளைப் பின்பற்றுவது தொடர்பாக மத்திய அரசுக்கும் ட்விட்டர் தளத்திற்கும் மோதல் போக்கு இருந்தது அனைவருக்கும் நினைவில் இருக்கலாம்.

ஜாக் டோர்சி
இதன் காரணமாக ட்விட்டர் நிறுவனத்தின் மீதான அழுத்தம் அதிகரித்தது. ட்விட்டர் நிறுவனத்தைத் தோற்றுவித்த ஜாக் டோர்சியின் செயல்பாடுகளில் முதலீட்டாளர்களுக்குத் திருப்தி ஏற்படவில்லை. இதையடுத்து போர்ட் உறுப்பினர்கள் கொடுத்த அழுத்தம் காரணமாகக் கடந்த நவம்பர் மாதம் அவர் இசிஓ பொறுப்பில் இருந்து விலகினார். அதைத்தொடர்ந்து புதிய சிஇஓ ஆக இந்தியரான பராக் அக்ரவால் நியமிக்கப்பட்டார்.

எலான் மஸ்க்
இந்தச் சூழலில் உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தில் தனது பங்குகளை 5%இல் இருந்து 9.2% சதவிகிதமாக உயர்த்தினார். இதையடுத்து அவர் ட்விட்டர் நிறுவனத்தின் போர்ட் உறுப்பினராவார் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், போர்ட் உறுப்பினர் ஆக மறுத்த எலான் மஸ்க் சில நாட்களிலேயே ஒட்டுமொத்த ட்விட்டர் நிறுவனத்தை 44 மில்லியன் டாலருக்கு வாங்கத் தயாராக இருப்பதாக அறிவித்தார்.

இறுதியான டீல்
முதலில் இதை மறுத்த ட்விட்டர் போர்ட், எலான் மஸ்கை தடுக்கும் முயற்சியில் இறங்கியது. இருப்பினும், ஒரு கட்டத்திற்குப் பின்னர், ட்விட்டர் போர்ட் இறங்கி வந்தது. அதன்படி ஒட்டுமொத்தமாக ட்விட்டர் நிறுவனத்தை சுமார் 44 பில்லியன் டாலருக்கு எலான் மஸ்க் வாங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதாவது ஒரு ஷேரை சுமார் 54 டாலருக்கு எலான் மஸ்க் வாங்குகிறார். இந்நிலையில், இது தொடர்பாக ட்விட்டர் நிறுவனரும் சமீபத்தில் நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டவருமான ஜாக் டோர்சி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

ஜாக் டோர்சி கருத்து
ஜாக் டோர்சி தனது ட்விட்டர் பக்கத்தில், "நான் ட்விட்டரை மிகவும் விரும்புகிறேன். ட்விட்டர் என்பது சர்வதேச உணர்வுக்கு மிக நெருக்கமாக இருக்கும் விஷயம் ஆகும். அதன் ஐடியாவும் சேவைகளும் தான் எனக்கு முக்கியம், இரண்டையும் பாதுகாக்க நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன். ஒரு நிறுவனமாக ட்விட்டர் எப்போதும் எனது ஒரே பிரச்சினை இருந்து வருகிறது. அது தான் எனது மிகப்பெரிய வருத்தம். இப்போது அது வால் ஸ்ட்ரீட்டிற்கு சொந்தமாக உள்ளது. விளம்பர மாடலை பின்பற்றுகிறது.

எலான் மஸ்கை நம்புகிறேன்
இப்போதைய சூழலில் வால் ஸ்ட்ரீட்டில் இருந்து திரும்பப் பெறுவது தான் சரியான முதல் நடவடிக்கை. கொள்கையளவில், ட்விட்டரை யாரும் சொந்தமாக வைத்திருக்க வேண்டும் அல்லது இயக்க வேண்டும் என்று நான் நம்பவில்லை. அது பொது நன்மையாக இயங்கும் அமைப்பு. ஒரு நிறுவனமாக இருப்பதன் சிக்கலைத் தீர்க்க எலான் மஸ்க் தான் சரியான நபராக இருப்பார் என நான் நம்புகிறேன்.அவரது பணியை நான் நம்புகிறேன்.
Recommended Video

நன்றிகள்
அதிகபட்ச நம்பகமானதன்மை மற்றும் பலரை உள்ளடக்கிய தளத்தை உருவாக்கும் எலானின் குறிக்கோள் சரியானது. பராக் அக்ரவாலின் இலக்கும் அது தான். அதற்காகத் தான் அவரை நான் தேர்ந்தெடுத்தேன். நிறுவனத்தை அசாத்தியமான சூழ்நிலையில் இருந்து மீட்ட இருவருக்குமே நன்றி. இதுதான் சரியான பாதை. இதை முழு மனதுடன் நம்புகிறேன். ட்விட்டர் தளத்தில் உரையாடல்கள் தொடர்ந்து நடக்கும் என்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்" என்று ட்வீட் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications