சவுதி அரேபியாவிற்கு உளவு பார்த்த டிவிட்டர் முன்னாள் ஊழியர்கள்.. அமெரிக்காவில் சிறையில் அடைப்பு
வாஷிங்டன்: கடந்த 2015ல் 6 ஆயிரம் டிவிட்டர் பயனாளிகள் குறித்து சவுதி அரேபியாவிற்கு உளவு தெரிவித்ததாக டிவிட்டரின் முன்னாள் ஊழியர்கள் இருவர்மீது அமெரிக்கா குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளது.
இந்த ஊழியர்கள் மற்றும் சவுதி அரேபியாவிற்கு பாலமாக செயல்பட்ட சவுதியை சேர்ந்த நபர் ஒருவர்மீதும் இதுகுறித்து குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த கைது நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள டிவிட்டர் நிர்வாகம், வரும்காலங்களில் இதுபோன்ற பிரச்சினைகள் வராதவகையில் தொழில்நுட்ப அளவிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்துள்ளது.

டிவிட்டர் முன்னாள் ஊழியர்கள் கைது
டிவிட்டரின் 6 ஆயிரம் பயனாளிகளின் தகவல்கள் குறித்து சவுதி அரேபியாவிற்கு உளவு கூறியதாக டிவிட்டரின் முன்னாள் ஊழியர்கள் இருவர் மீது அமெரிக்காவில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. சவுதி அரேபிய அரசு குறித்து தொடர் விமர்சனங்களை செய்துவந்தவர்கள் உள்ளிட்ட 6 ஆயிரம் பேரின் தகவல்களை திருடி சவுதி அரசுக்கு அளிக்கப்பட்டுள்ளதாக சான்பிரான்சிஸ்கோவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஊழியர் சிறையில் அடைப்பு
அமெரிக்க குடியுரிமையை பெற்ற அகம்மது அபோவாமோ மற்றும் சவுதியை சேர்ந்த அலி அல்சாபாரா ஆகியோர் இந்த குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளனர். இதில் அகமது சியாட்டில் நீதிமன்றத்தில் நேற்று ஆஜரானார். அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

குற்றச்சாட்டு பதிவு
மேலும் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் ஊழியர்கள் மற்றும் சவுதி அரசிற்கிடையில் பாலமாக செயல்பட்ட சவுதியை சேர்ந்த அகமது அல்முத்தாய்ரி மீதும் அமெரிக்க போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த உளவுப்பணியில் ஈடுபட்ட அலி அல்சாபாரா மற்றும் அகமது அல்முத்தாய்ரி ஆகிய இருவரும் சவுதி அரேபியாவில் பதுங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் குறித்து அமெரிக்க போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

உறவை தொடரும் அமெரிக்கா
சவுதியின் இஸ்தான்புல் தூதரகத்தில் அமெரிக்க பத்திரிகையாளர் காசோக்கி படுகொலை செய்யப்பட்ட நிலையிலும் அந்நாட்டுடனான தன்னுடைய உறவை அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து வருகிறார். இதற்கு சர்வதேச அளவில் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

தகவல்கள் பாதுகாக்கப்படும்
இதனிடையே, டிவிட்டரில் தனிப்பட்ட நபர்களின் தகவல்கள் பாதுகாக்கப்படும் என்றும் அவர்களின் தகவல்களை பாதுகாக்க சிறந்த தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படும் என்றும் டிவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. தகவல் திருட்டு குறித்து அந்நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications