"என்னால ஒன்னுமே பண்ண முடியல..!" சொந்த பிள்ளைகளை கண் முன்னே இழந்த தீயணைப்பு வீரர்! பரிதாபம்
வாஷிங்டன்: அமெரிக்காவில் ஏற்பட்ட கோரமான தீ விபத்து ஒன்றில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
போலீசார், தீயணைப்புத் துறையினர், ராணுவம் போல நம்மைப் பாதுகாப்பும் பணிகளில் ஈடுபடுவோர், அவர்களின் சொந்த குடும்பத்தினர் உடன் செலவழிக்கும் நேரம் ரொம்பவே குறைவு தான்.
அவர்களுக்கு 24*7 எப்போதும் வேலை இருக்கும் என்பதால், பெற்ற குழந்தைகள் உடன் கூட குறைவான நேரத்தையே செலவிடுவார்கள். குடும்பத்தினருக்கு என்ன நடக்கிறது என்பது கூட தெரியாமல் போகும்!
அமெரிக்கா
அப்படியொரு சோக சம்பவம் தான் அமெரிக்காவில் நடந்துள்ளது. அமெரிக்காவின் கிழக்கு மாகாணமான பென்சில்வேனியாவில் வீடு ஒன்றில் தீப்பிடித்து எரிவதாகத் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்தத் தகவல் கேட்ட உடன் அப்பகுதியில் உள்ள தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளார். இருப்பினும், தீ அதற்குள் மளமளவெனப் பரவிவிட்டது.
தீயணைப்பு வீரர்
தீ குறித்த தகவல் கிடைத்த உடன் சம்பவ இடத்திற்கு முதலில் சென்ற தீயணைப்பு வீரர்களில் ஒருவர் ஹரோல்ட் பேக்கர். சம்பவ இடத்திற்கு வந்த போது, அவர் ஒரு நொடி நடுங்கிவிட்டார். ஏனென்றால் பற்றி எறிந்து கொண்டு இருந்த அந்த வீட்டில் தான், அந்த தீயணைப்பு வீரர் ஹரோல்ட் பேக்கரின் மகன்கள் இருந்து உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஹரோல்ட் பேக்கர், எப்படியாவது தனது பிள்ளைகளைக் காப்பாற்ற வேண்டும் என முயன்றுள்ளார்.
புலம்பல்
இதற்காக அவர் பற்றி எரியும் வீட்டிற்குள்ளும் கூட பல முறை செல்ல முயன்றுள்ளார். இருப்பினும், வீடு மிக மோசமான நிலையில் எரிந்து கொண்டிருந்ததால், உள்ளே சென்றால் அவரது உயிருக்கும் ஆபத்து என்பதால் ஹரோல்ட் பேக்கரை அவரது சக ஊழியர்கள் உள்ளே விடவில்லை. தீ குறித்த செய்தி கிடைத்த உடன் மிக வேகமாகச் சம்பவ இடத்திற்குச் சென்றதாகவும் இருப்பினும் தனது பிள்ளைகள் உட்பட யாரையும் காப்பாற்ற முடியவில்லை ஹரோல்ட் பேக்கர் வேதனையுடன் புலம்பி உள்ளார்.
10 பேர் பலி
தீயணைப்புத் துறையினர் அங்குச் செல்லும் முன்பு, அந்த இரண்டு மாடிக் கட்டிடம் முற்றிலுமாக நாசமடைந்துவிட்டது. தீ விபத்தால் மிக மோசமாக அந்த வீடு சேதம் அடைந்து உள்ளது. இந்த கோரமான தீ விபத்தில் மூன்று குழந்தைகள் உட்பட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதிர்ஷ்டவசமாக மூன்று பேர் தீ பரவுவதற்கு முன்னர், வீட்டில் இருந்து வெளியே வந்துவிட்டனர். இந்தத் தீ விபத்து குறித்து அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.