டிரம்ப் ஆதரவாளர்கள் பேரணியில் வன்முறை... கத்திக்குத்து... துப்பாக்கி சூட்டால் பதற்றம்!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆதரவாளர்கள் வாஷிங்டனில் நடத்திய பேரணியில் வன்முறை மூண்டது. கத்திக்குத்து, துப்பாக்கிசூடு சம்பவமும் நடந்ததால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.
இது தொடர்பாக 23 பேர் கைது செய்யப்பட்டதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டு உள்ளது. ஜோ பிடன் வெற்றியை ஜீரணிக்க முடியாத டிரம்ப் தனது தோல்வியை ஒப்புக்கொள்ள தொடர்ந்து மறுத்து வருகிறார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடன் அமோக வெற்றி பெற்றார். தற்போதைய அதிபர் டிரம்ப் தோல்வியை தழுவினார். அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பிடனும், துணை அதிபராக இந்திய வம்சாவளி தமிழகத்தை பூர்விகமாக கொண்ட கமலா ஹாரிஸும் ஜனவரி 20-ம் தேதி பதவி ஏற்க உள்ளனர்.
தற்போதைய அதிபர் டிரம்ப் தோல்வியை ஏற்றுகொள்ள மறுத்து வருகிறார். ஜோ பிடன் மோசடி செய்து ஜெயித்து விட்டதாக கூறும் அவர் இது தொடர்பாக பல்வேறு மாகாண தேர்தலில் ஜோ பிடன் வெற்றிக்கு எதிராக பல்வேறு நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்தார்.
அனால் அவை அனைத்திலும் தோல்வியை சந்தித்தாலும், தோல்வியை ஒப்பு கொள்ளாமல் டிரம்ப் தொடர்ந்து பிடிவாதம் சாதித்து வருகிறார். டிரம்ப் ஆதரவாளர்கள் அவருக்கு ஆதரவாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று வாஷிங்டனில் டிரம்ப் ஆதரவாளர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை மூண்டது. ஒலிம்பியா, அட்லாண்டா மற்றும் செயின்ட் பால், மினசோட்டா, நெப்ராஸ்கா, அலபாமா மற்றும் பிற இடங்களில் உள்ள சிறிய நகரங்களிலும் ஏராளமான டிரம்ப் ஆதரவாளர்கள் பேரணி மற்றும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
டிரம்ப் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது வன்முறை ஏற்பட்டதில் அதில் 4 பேர் கத்தியால் குத்தப்பட்டனர். ஒருவர் துப்பாக்கியால் சுட்டதாகவும் அங்கு இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வன்முறை குறித்து டுவிட்டரில் பதிவு வெளியிட்டுள்ள போலீசார், போராட்ட வன்முறைக்கு பிறகு ஒலிம்பியாவில் உள்ள கேபிடல் கட்டிடத்திற்கு அருகே துப்பாக்கி சூடு நடந்ததாகவும், இது தொடர்பாக ஒருவரை பிடித்து விசாரித்து வருவதாகவும் தெரிவித்து உள்ளனர். வன்முறை தொடர்பாக 23 பேர் கைது செய்யப்பட்டதாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டு உள்ளது.