நள்ளிரவில் திடீரென டெல்லியில் இறங்கிய விமானம்! டிரம்ப் உத்தரவால் சிக்கும் அமெரிக்க வாழ் இந்தியர்கள்!
வாஷிங்டன்: அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழைந்த இந்தியர்களை நாடு கடத்தும் பணி தொடர்ந்து நடந்து வரும் நிலையில், இப்போது மற்றொரு பேட்ச் இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இந்த முறை அவர்கள் பனாமாவில் இருந்து டெல்லிக்குத் திரும்பியுள்ளனர். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவின் பெயரில் அங்குச் சட்டவிரோதமாக நுழைந்தவர்கள் தொடர்ச்சியாக நாடு கடத்தப்பட்டு வருகிறார்கள். சர்வதேச நாடுகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் கூட நாடு கடத்தல் தொடர்ச்சியாக நடந்து வருகிறது.

நாடு கடத்தல்
இந்தியாவைப் பொறுத்தவரை முதலில் கடந்த பிப்ரவரி 5ம் தேதி அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழைந்த இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டனர். அதைத் தொடர்ந்து அடுத்தடுத்து இரு விமானங்கள் மூலம் இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டனர். கை, கால்களுக்கு விலங்கிட்டு ராணுவ விமானத்தில் அவர்கள் நாடு கடத்தப்பட்ட விதம் கடும் எதிர்ப்புகளைக் கிளப்பியிருந்தது.
இதற்கிடையே இப்போது நான்காவது பேட்ச்சாக இந்தியர்கள் அங்கிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர்.. அமெரிக்காவில் இருந்து பனாமாவுக்கு நாடு கடத்தப்பட்ட 12 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு வந்த விமானம் இன்று (ஞாயிறு) இரவு டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. பனாமாவில் இருந்து இந்தியர்கள் நாடு கடத்தப்படுவது இதுவே முதல்முறையாகும்.
ஒப்பந்தம்
நாடு கடத்தல் விவகாரத்தில் அமெரிக்காவுக்கும் பனாமா மற்றும் கோஸ்டாரிகா நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் இருக்கிறது. அதாவது அமெரிக்கா தனது நாட்டில் சட்டவிரோதமாக நுழைந்தவர்கள் முதலில் இந்த இரு நாடுகளுக்கும் அனுப்பும். இந்த இரு நாட்டு அரசுகள் அவர்களை ஹோட்டலில் தங்க வைத்து, அவர்களுக்கான உணவு மற்றும் மருத்துவம் வழங்கும். பிறகு அங்கிருந்து அவர்கள் நாடு கடத்தப்படுவார்கள். இதற்கு ஆகும் செலவை அமெரிக்காவே பார்த்துக் கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.
பெரும்பாலும் அமெரிக்காவில் இருந்து தாயகம் திரும்ப மறுப்போர் அல்லது சொந்த நாடு ஏற்க மறுக்கும் சட்டவிரோத குடியேறிகளைத் தான் அமெரிக்கா இதுபோல வேறு நாட்டிற்கு அனுப்பி நாடு கடத்தும் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா சமீபத்தில் தான் பனாமாவுக்கு 299 பேரை நாடு கடத்தியிருந்தது. அவர்களில் எத்தனை பேர் இந்தியர்கள் என்பது இதுவரை துல்லியமாகத் தெரியவில்லை.
நான்காவது பேட்ச்
பனாமாவில் இருந்த இவர்கள் துருக்கி ஏர்லைன்ஸ் விமானத்தில் இஸ்தான்புல் வழியாக டெல்லி வந்திறங்கினர். இப்போது நாடு கடத்தப்பட்டவர்களில் 4 பேர் பஞ்சாபைச் சேர்ந்தவர்கள். மேலும், இவர்களில் ஹரியானா மற்றும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் மூன்று பேர் ஆவர்.. மற்றொரு நபர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை.
பனாமாவில் இருந்து நாடு கடத்தப்பட்டோரின் தகவல்களைச் சரி பார்த்து வருவதாகவும் அவர்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறியுள்ளது. இதுவரை அமெரிக்காவில் இருந்து 332 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருமே சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழைந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
யாருக்குச் சிக்கல்
டிரம்பின் இந்த உத்தரவு மூலம் சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழைந்தவர்கள் மட்டுமே நாடு கடத்தப்படுவார்கள். மாணவர் விசா அல்லது ஹெச் 1 பி விசா என முறையாக விசா பெற்று அமெரிக்காவுக்குச் சென்ற இந்தியர்கள் உள்ளிட்ட எந்தவொரு வெளிநாட்டினருக்கும் எந்தவொரு பிரச்சினையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications