டிரம்பால் சீனா - பாகிஸ்தானுக்கு ஜாக்பாட்! இந்தியா மீதான வரியால் எந்தெந்த நாடுகளுக்கு லாபம்? லிஸ்ட்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு 50 சதவீத வரி விதித்துள்ளார். இதனால் அமெரிக்காவுக்கான நம் நாட்டின் ஏற்றுமதி 3.15 லட்சம் கோடி அளவுக்கு சரிவை சந்திக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தான் அமெரிக்காவில் இந்தியா இழக்கும் மார்க்கெட்டை மையப்படுத்தி எந்தெந்த நாடுகள் லாபம் ஈட்டும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இந்த லிஸ்ட்டில் நம் நாட்டின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், சீனா உள்பட பல நாடுகள் உள்ளன. அதன் விவரம் வருமாறு:
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அடாவடியாக வரிகளை விதித்து வருகிறார். நம் நாட்டுக்கு 50 சதவீத வரிகளை போட்டுள்ளார். முதற்கட்டமாக கடந்த 7 ம்தேதி 25 சதவீத வரி அமலுக்கு வந்தது. அடுத்தக்கட்டமாக இன்று முதல் 25 சதவீத வரி அமலுக்கு வந்துள்ளது. இதன்மூலம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டின் மீது விதித்த 50 சதவீத வரி முழுவதுமாக அமலாகி உள்ளது.

நம் நாட்டை எடுத்து கொண்டால் அமெரிக்கா தான் மிகப்பெரிய ஏற்றுமதி சந்தையாகும். வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு செல்லும் ஏற்றுமதியில் சுமார் 18 சதவீதம் இந்தியாவில் இருந்து போகிறது. இதனால் டிரம்பின் வரி விதிப்பு நேரடியாக நம் நாட்டில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த உள்ளது.
இந்நிலையில் தான் நம் நாட்டின் மீதான அமெரிக்காவின் வரி விதிப்பால் ஏற்படும் இழப்பு, இந்த வரியால் லாபம் பெறும் நாடுகள் குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது. அமெரிக்காவின் 50 சதவீத வரி என்பது நம் நாட்டில் இருந்து அங்கு ஏற்றுமதி செய்யப்படும் 66 சதவீத பொருட்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்த உள்ளது. அதாவது 60.2 பில்லியன் டாலர் வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
அதன்படி பார்த்தால் நம் நாட்டில் ஜவுளித்துறை, ஆயத்த ஆடை, ரத்தினங்கள், நகை, இறால், கம்பளங்கள் உள்பட பல துறைகளில் பாதிப்பை ஏற்படுத்த உள்ளது. இந்த துறைகளில் இருந்து அமெரிக்காவுக்கான ஏற்றுமதி பாதிக்கப்படுவதோடு, அந்த துறையை சார்ந்து நம் நாட்டில் இருக்கும் பணியாளர்கள் வேலையிழப்பையும் எதிர்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஜவுளி, நகை, இறால் வளர்ப்பு உள்ளிட்ட துறைகளில் பணியாற்றுவோர் அதிகளவில் வேலைகளை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக டிரம்பின் வரியால் இந்த துறைகளில் இருந்து அமெரிக்காவுக்கான ஏற்றுமதியில் 70 சதவீதம் வரை சரிவை சந்திக்கலாம் என்று சொல்லப்படுகிறது. கடந்த 20205 நிதியாண்டில் நம் நாட்டில் இருந்து அமெரிக்காவுக்கு மொத்தம் 86.5 பில்லியன் டாலருக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. இது வரும் நடப்பு நிதியாண்டில் 49.6 பில்லியன் அமெரிக்க டாலராக குறையலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்த வரி என்பது நம் நாட்டின் மொத்த உள்நாட்டு வளர்ச்சியை கிட்டத்தட்ட 0.9 சதவீதம் வரை குறைக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி GTRI கணிப்பின்படி இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை 6.5 சதவீதத்தில் இருந்து 5.6 சதவீதத்துக்கு சரிய வைக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்து.
மேலும் நம் நாட்டின் மீதான வரி விதிப்பின் காரணமாக அமெரிக்காவை வைத்து அண்டை நாடுகள் பெரிய அளவில் லாபம் அடையலாம். நம் நாட்டை ஒப்பிடும்போது இந்த நாடுகளுக்கு அமெரிக்க குறைந்த அளவில் வரி விதித்துள்ளது. இதனால் அமெரிக்காவுக்கான நம் நாட்டின் ஏற்றுமதி சரியும் நிலையில் சீனா, வியட்நாம், மெக்சிகோ, துருக்கி, பாகிஸ்தான், நேபாளம், குவாத்தமாலா மற்றும் கென்யா உள்ளிட்ட நாடுகள் பெரிய அளவில் பலனடையலாம் என்று கூறப்படுகிறது.
இதில் வியட்நாம், மெக்சிகோ உள்ளிட்ட நாடுகள் ஜவுளி மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறையில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. தற்போது நம் நாட்டின் ஜவுளி, எலகட்ரானிக்ஸ் பொருட்கள் அமெரிக்காவுக்கு செல்லாத நிலையில் அதனை வியட்நாம், மெக்சிகோ நாடுகள் பயன்படுத்தி லாபமடையலாம். அதேபோல் பிற நாடுகளும் அமெரிக்காவை பயன்படுத்தி கொண்டு வர்த்தகத்தை அதிகரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications