சரமாரி துப்பாக்கிச்சூடு.. அமெரிக்காவில் இஸ்கான் கோவில் மீது தாக்குதல்.. கண்டித்த இந்தியத் தூதரகம்
சான் பிரான்சிஸ்கோ: அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் அமைந்துள்ள இஸ்கான் ராதாகிருஷ்ணன் கோவில் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலின் போது பக்தர்கள் கோவிலுக்குள் இருந்த நிலையில், சுமார் 20 முதல் 30 புல்லட்கள் சுடப்பட்டுள்ளன. இதில் பக்தர்கள் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இந்திய தூதரகம் சார்பாக கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில் உள்ள ஸ்பானிஷ் ஃபோர்க் என்ற பகுதியில் இந்து மத கோயிலான இஸ்கான் ராதாகிருஷ்ணன் கோவில் அமைந்துள்ளது. ஹோலி பண்டிகை கொண்டாட்டங்களுக்காக இந்த கோவில் உலகளவில் பிரபலமானது. இதன் காரணமாக தினமும் ஏராளமான பொதுமக்கள் இந்த கோவிலிக்கு வந்து செல்வது வழக்கம்.

இஸ்கான் கோவில்
இந்த நிலையில் இஸ்கான் கோவில் மீது வெறுப்புணர்வை தூண்டும் வகையில் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 20 முதல் 30 குண்டுகள் வரை இஸ்கான் கோவில் கட்டிடம் மீது பாய்ந்துள்ளன. இரவு நேரத்தில் பக்தர்களும், சிறப்பு விருந்தினர்களும் இருந்த நேரத்தில் இந்த தாக்குதல் சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
இந்திய தூதரகம் கண்டனம்
இதனால் பொருளாதார சேதம் ஏற்பட்டுள்ளதோடு, கட்டிடங்களும் சேதத்தை சந்தித்திருக்கின்றன. இதுதொடர்பான புகைப்படங்களையும் இஸ்கான் கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதனால் அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதேபோல் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள இந்திய தூதரகம் சார்பாக கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கை
இந்திய தூதரகம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள எக்ஸ் பதிவில், இஸ்கான் ராதாகிருஷ்ணா கோவிலில் நடந்துள்ள தாக்குதல் சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த தாக்குதல் விவகாரத்தில் அனைத்து தரப்பினருக்கும் எங்களின் ஆதரவை தெரிவித்து கொள்கிறோம். இஸ்கான் கோவில் மீது தாக்குதல் நடத்திய குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி நடவடிக்கை வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறது.ஜூன் மாதம் 18ஆம் தேதி இஸ்கான் கோயிலின் ரேடியோ ஸ்டேஷன் பகுதியில் இருந்து பெரிய சத்தத்துடன் புகை வெளியாகி இருக்கிறது.
தொடர் சம்பவம்
அதன்பின் சில நாட்களுக்கு பின் கோவிலின் ஜன்னல்கள் அருகில் புல்லட் மார்க் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக இஸ்கான் கோவிலில் தொடர் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு முதலே இந்திய கோவில்கள் மீது தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கலிஃபோர்னியாவில் உள்ள சுவாமி நாராயண் கோவில் சேதப்படுத்தப்பட்டது. அதேபோல் நடப்பாண்டில் மார்ச் மாதம் கலிஃபோர்னியாவில் உள்ள ஒரு இந்து கோயிலிலும் தாக்குதல் நடத்தப்பட்டது.












Click it and Unblock the Notifications