ஏற்காத ஹமாஸ்.. “சனிக்கிழமை பகல் 12 மணி தான் லாஸ்ட்”.. ஜோர்டான் மன்னரிடம் கட் & ரைட்டாக சொன்ன ட்ரம்ப்
வாஷிங்டன்: டிரம்ப் மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம் என்று ஹமாஸ் பதிலடி கொடுத்துள்ளதால் உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மீண்டும் கெடுவை உறுதிப்படுத்தி உள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப். பிப்ரவரி 15 ஆம் தேதி பகல் 12 மணிக்குள் பிணைக் கைதிகள் அனைவரையும் ஹமாஸ் விடுவிக்காவிட்டால், தாக்குதல் நடத்தப்படும் என ஜோர்டான் மன்னரிடம் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே 6 வார போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. இதில், ஹமாஸ் படையினர் வசமுள்ள 33 இஸ்ரேல் பணயக் கைதிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர். அதற்கு ஈடாக இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்ட நூற்றுக்கணக்கான பாலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்படுகின்றனர். அடுத்த பணய கைதிகள் விடுவிப்பு வரும் 15 ஆம் தேதி நடக்க உள்ளது.

இதற்கிடையே, காசாவில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் ராணுவம் மீறி பாலஸ்தீனர்களை கொன்றதாகவும் மனிதாபிமான உதவிகளையும் தடுத்து நிறுத்துவதாகவும் ஹமாஸ் குற்றம்சாட்டியது. மூன்று வாரங்களுக்கு முன் கொண்டுவரப்பட்ட, போர் நிறுத்த ஒப்பந்தத்தின் விதிமுறைகளை இஸ்ரேல் மீறியதாக ஹமாஸ் குற்றம்சாட்டியது.
'மறு அறிவிப்பு வரும் வரை' இஸ்ரேல் பணயக்கைதிகளை விடுவிப்பதை நிறுத்திவைக்கப்போவதாகவும் ஹமாஸ் அறிவித்தது. இதனால் அடுத்தகட்ட பணயக் கைதிகள் விடுவிப்பு தாமதமாகிறது.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று டிவி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், 'வரும் பிப்ரவரி 15 ஆம் தேதி சனிக்கிழமைக்குள் அனைத்து பணயக் கைதிகளையும் ஹமாஸ் விடுவிக்க வேண்டும். இல்லாவிட்டால் பயங்கர விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். போர் நிறுத்தம் ரத்து செய்யப்படும்.
இது எனது முடிவு. இதில் இறுதி முடிவெடுக்க வேண்டியது இஸ்ரேல்தான். நான் சொல்வதற்கு உடன்பட வேண்டியது இஸ்ரேல் கையில் உள்ளது. காசா மக்களை எடுத்து கொள்ள ஜோர்டான், எகிப்துக்கு அழுத்தம் தரப்படும். இல்லாவிட்டால் அவர்களுக்கு தரும் அமெரிக்க நிதி உதவியை நிறுத்துவேன். காசாவை அமெரிக்கா கைப்பற்றி அதை ரியல் எஸ்டேட் மையமாக்குவேன்" எனத் தெரிவித்தார்.
அதற்கு ஹமாஸ் படையினர் பதிலடி கொடுத்துள்ளனர். அமெரிக்காவின் மேற்பார்வையில் இஸ்ரேலுடன் நடந்த பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவுகளை ஏற்க முடியாது என்று ஹமாஸ் அறிவித்துள்ளது. அதாவது, போர் நிறுத்த ஒப்பந்தங்களை ஏற்க மாட்டோம். பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கோரிக்கையின் பேரில் எடுக்கப்பட்ட முடிவுகளை ஏற்றுக்கொள்ள மாட்டோம்.
போர் நிறுத்தத்துக்கு வாய்ப்பே இல்லை. ஹமாஸ் சிறைபிடித்துள்ள இஸ்ரேல் படைகளை விடுதலை செய்தால் போர் நிறுத்தம் செய்வோம் என அமெரிக்காவின் வாக்குறுதியின் அடிப்படையில் இஸ்ரேல் பேச்சுவார்த்தை செய்தது. ஆனால் இந்த பேச்சுவார்த்தை முடிவுகளை ஏற்க முடியாது. இஸ்ரேல் மீது கண்டிப்பாக போர் தொடுப்போம் என்று ஹமாஸ் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மீண்டும் கெடுவை உறுதிப்படுத்தி உள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப். பிப்ரவரி 15 ஆம் தேதி பகல் 12 மணிக்குள் பிணைக் கைதிகள் அனைவரையும் ஹமாஸ் விடுவிக்காவிட்டால், இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்தாகும். பெரியளவில் தாக்குதல் நடத்தப்படும். காசாவை வாங்கப்போவது இல்லை, எடுத்துக் கொள்ளப் போகிறோம். இதன் மூலம் ஹமாஸ் மீண்டும் தலைதூக்காமல் இருப்பதை உறுதி செய்ய முடியும் என ஜோர்டான் மன்னரிடம் ட்ரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications