ஒசாமா பின் லேடன் மகன் ஹம்சா அமெரிக்காவால் கொல்லப்பட்டாரா.. வெளியான பரபரப்பு தகவல்
வாஷிங்டன்: அல் கொய்தா தீவிரவாத இயக்கத்தின் நிறுவனர் ஒசாமா பின்லேடனின் மகனும், அல் கொய்தாவின் முக்கிய தலைவராக வளர்ந்து வந்தவருமான ஹம்ஸா பின்லேடன் இறந்துவிட்டார் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒசாமா பின்லேடன் கடந்த 2011ம் ஆண்டு மே மாதம் பாகிஸ்தானில் உள்ள அபோடாபாத் நகரில் அமெரிக்க பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதையடுத்து தனது தந்தையை கொன்ற அமெரிக்காவையும், அமெரிக்கர்களையும் பழிக்குப்பழி வாங்குவேன் என்று, ஹம்ஸா பின்லேடன் எச்சரித்திருந்தார்.

பின்லேடனுக்கு பின்னர் அல்கொய்தா இயக்கத்தின் முடி இளவரசர் அந்தஸ்தில் இருந்தவர் ஹம்சா. கடந்த 2017ம் ஆண்டு அமெரிக்கா ஹம்சாவை, சர்வதேச தீவிரவாதியாக அறிவித்தது.
ஹம்ஸா பின்லேடனின் இருப்பிடம் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசாக வழங்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்திருந்தது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே ஹம்சா கொல்லப்பட்டார், ஆனால் அவரது மரணத்தை உறுதிப்படுத்த காலம் பிடித்தது என்று அமெரிக்க அதிகாரிகள் தி நியூயார்க் டைம்ஸுக்கு உறுதிப்படுத்தியுள்ளனர். ஹம்சா மரணம் எங்கே நடந்தது, எப்போது நடந்தது என்ற விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. ஹம்சா கொலையில் அமெரிக்காவிற்குதான் பங்கு இருப்பதாக கூறப்படுகிறது.
ஹம்சா பிறந்த தேதி எது என்பது சரியாக தெரியவில்லை. ஆனால் ஒசாமா பின்லேடன் 1996 இல் ஆப்கானிஸ்தானுக்குச் சென்று அமெரிக்காவுக்கு எதிராக போரை அறிவித்தார். அப்போது வெளியிடப்பட்ட வீடியோக்கள் சிலவற்றில் ஹம்ஸா தோன்றினார்.
செப்டம்பர் 11, 2001க்குப் பிறகு, ஹம்சா ஈரானுக்கு தப்பிச் சென்றார், அங்கு மற்ற அல்கொய்தா தலைவர்கள் அவரை பாதுகாப்பான வீடுகளில் மறைத்து வைத்தனர்.












Click it and Unblock the Notifications