30 ஆண்டுகளாக.. அமெரிக்காவில் வசித்து வரும் 73 வயது இந்திய பெண் திடீர் கைது! டிரம்ப் அரசு அடாவடி
வாஷிங்டன்: அமெரிக்காவில் இருக்கும் வெளிநாட்டினருக்கு எதிராக டிரம்ப் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில் அப்பாவி மக்கள் பலரும் மோசமாகப் பாதிக்கப்படுகிறார்கள். அப்படி தான் கடந்த 30+ ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வந்த 73 வயதான சீக்கிய பெண் ஒருவரை அமெரிக்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இது அமெரிக்க வாழ் இந்தியர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க அதிபரான டிரம்ப் பிரச்சாரத்தின் போதே வெளிநாட்டினர் மீது, குறிப்பாகச் சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழைந்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பேன் எனக் கூறியிருந்தார். சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர், அமெரிக்கர்களுக்கு ஆபத்தாக இருப்போருக்கு எதிராக மட்டுமே நடவடிக்கை எடுப்பேன் அதிபர் டிரம்ப் கூறியிருந்தார்.

30 ஆண்டுகளாக அமெரிக்காவில் இருந்தவர்
ஆனால், அதிபரான பிறகு அவர் எடுக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து சர்ச்சையைக் கிளப்புவதாகவே இருக்கிறது. சட்டப்பூர்வமாக நுழைந்தவர்கள், முதியவர்களுக்கு எதிராகவும் கூட டிரம்ப் நிர்வாகம் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அப்படியொரு சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது. அமெரிக்காவில் 30 வருடங்களாக வசித்து வந்த இந்திய பெண்ணை அந்நாட்டு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவின் கிழக்கு விரிகுடா பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் அந்த சீக்கிய பெண்ணை அமெரிக்கக் குடியேற்ற அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 73 வயதான அந்த பெண், வழக்கமான விசாரணைக்காக குடியேற்ற அலுவலகத்திற்கு அவராகவே சென்றுள்ளார். அப்போதுதான் குடியேற்ற அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர்.
யார் அந்த பெண்
கைது செய்யப்பட்டுள்ள அந்த பெண் ஹர்ஜித் கவுர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு குடியேற்ற அலுவலகத்தில் வழக்கமான விசாரணைக்காகச் சென்றுள்ளார். அதாவது கூடுதல் ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு குடியேற்ற அதிகாரிகள் கூறியதால் அந்த ஆவணங்களை சமர்ப்பிக்க ஹர்ஜித் கவுர் குடியேற்ற அலுவலகத்திற்குச் சென்றுள்ளார். அப்போதுதான் அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர்.
இந்தியாவை சேர்ந்தவர்
ஹர்ஜித் கவுர் என்ற இந்த பெண் 1992ஆம் ஆண்டு தனது இரண்டு மகன்களுடன் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குச் சென்றுள்ளார். அதன் பிறகு அமெரிக்காவிலேயே ஹர்ஜித் கவுர் வசித்து வருகிறார். அவருக்கு முறையான விசா எதுவும் இல்லாத நிலையில், புகலிட கோரிக்கை விடுத்துள்ளார். இருப்பினும், அவரது புகலிட கோரிக்கை 2012ல் நிராகரிக்கப்பட்டது. இருப்பினும், பயண ஆவணங்களில் சில சிக்கல் இருந்ததால் அவர் மீது நாடுகடத்தும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.
அப்போது முதல் 13 ஆண்டுகளுக்கும் மேலாக, அவர் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள குடியேற்ற அலுவலகத்திற்கு ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் ஆஜராகி வந்தார். பயண ஆவண சிக்கல் தீரும் வரை, ஒர்க் பெர்மிட் உடன் ஹர்ஜித் கவுர் அமெரிக்காவில் தொடர்ந்து இருக்கலாம் என்று அமெரிக்கக் குடியேற்ற துறை உறுதியளித்திருந்தது. இந்தச் சூழலில் தான் எந்தவொரு விளக்கமும் இல்லாமல் அவரை கைது செய்துள்ளனர்.
போராட்டம்
இந்த கைதை அவரது குடும்பத்தினரும் உறவினர்களும் கடுமையாக கண்டித்துள்ளனர். மேலும், ஹர்ஜித் கவுர் மீதான நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என்றும் அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனச் சொல்லி மிகப் பெரிய போராட்டங்களும் நடத்தப்பட்டது. எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியினர் ஹர்ஜித் கவுரை விடுவிக்க வேண்டும் என்றே வலியுறுத்தியுள்ளனர். குடியேற்ற அதிகாரிகள் இது தொடர்பாக உரிய விளக்கம் எதுவும் அளிக்கவில்லை.












Click it and Unblock the Notifications