இரண்டாக உடையும் ஆப்பிரிக்கா! உருவாகும் புது கடல்! மோசமான ஆபத்து ஏற்படுமாம்! அலர்ட் தரும் ஆய்வாளர்கள்
வாஷிங்டன்: உலகின் இரண்டாவது மிகப் பெரிய கண்டமாகக் கருதப்படும் ஆப்பிரிக்கா இரண்டாகப் பிளக்க உள்ளது. இதன் மூலம் நமது பூமியில் மற்றொரு பெருங்கடலும் உருவாக வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த உலகம் பல ஆச்சரியங்களையும் மர்மங்களையும் உள்ளடக்கியது.. பூமி குறித்து நாம் தொடர்ச்சியாகப் பல ஆய்வுகளைச் செய்து வருகிறோம். ஒவ்வொரு ஆய்விலும் நாம் புது புது விஷயங்களைக் கண்டறிந்து வருகிறோம்.

இப்போது உலகில் பசிபிக், ஆர்டிக், இந்தியப் பெருங்கடல் மொத்தம் ஏழு பெருங்கடல் இருக்கிறது. இதனிடையே புதிதாக ஒரு பெருங்கடல் உருவாக வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
ஆப்பிரிக்கா: வரும் காலத்தில் ஆப்பிரிக்கா படிப்படியாக இரண்டு தனித்தனி பகுதிகளாகப் பிரியும் என்றும் இதனால் புதிய கடல் உருவாக வாய்ப்பு உள்ளதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கிழக்கு ஆபிரிக்காவில் ஏற்படும் பிளவு காரணமாக இது ஏற்படுவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கிழக்கு ஆப்பிரிக்கப் பிளவு என்பது 2005இல் எத்தியோப்பியா பாலைவனத்தில் தோன்றிய 56 கிலோமீட்டர் நீளமுள்ள ஒரு விரிசலாகும். இதுவே மெல்லப் பெரிதாகி ஆப்பிரிக்கக் கண்டத்தையே பிரிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இது நிச்சயம் ஆப்பிரிக்கக் கண்டத்தைப் பிளக்கும் என்றும் இதை நம்மால் தடுக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளனர். இதனால் தற்போது நிலத்தால் சூழப்பட்ட நாடுகளாக இருக்கும் உகாண்டா மற்றும் ஜாம்பியா உள்ளிட்ட நாடுகள் அருகே கடல் வந்துவிடும்.
தவிர்க்கவே முடியாது: இதன் காரணமாக பல்வேறு பாதிப்புகளும் ஏற்படக் கூடும். உயிரிழப்புகளை நம்மால் தவிர்க்கவே முடியாது. அதேபோல பல லட்சம் மக்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேற வேண்டிய ஒரு சூழலும் ஏற்படும். அதேநேரம் இதனால் பாசிட்டிவான விளைவுகளும் ஏற்படவே செய்யும்.
அதாவது கடல் அருகே வருவதால் புதிய பொருளாதார வளர்ச்சி ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன. துறைமுகங்கள், மீன்பிடித் தளங்கள், கடலுக்கு அடியே இணைய உள்கட்டமைப்பு எனப் பல வளர்ச்சி திட்டங்கள் சாத்தியம் உள்ளதால் பொருளாதார வளர்ச்சியும் வேகமெடுக்கும்.
என்ன நடக்கும்: சோமாலி மற்றும் நுபியன் டெக்டோனிக் தகடுகள் விலகிச் செல்வதே கடல் மட்டுமன்றி கிழக்கு ஆபிரிக்காவை ஒரு புதிய கண்டமாகவும் மாற்றும். இது தற்போதைய சோமாலியா, கென்யா, எத்தியோப்பியா, தான்சானியா நாடுகளை உள்ளடக்கியதாக இருக்கும்.
ஏடன் வளைகுடா, செங்கடல் ஆகியவை காரணமாக எத்தியோப்பியா, கிழக்கு ஆப்பிரிக்கப் பள்ளத்தாக்கில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். இவைதான் புதிய கடலை உருவாக்கும் என்று கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர் கென் மெக்டொனால்ட் தெரிவித்துள்ளார்.
எதனால் இப்படி நடக்கிறது: பிளவு ஏற்படப் போவதாகக் கணிக்கப்பட்டுள்ள இந்த பகுதி மொத்தம் நுபியன் ஆப்பிரிக்கத் தட்டு, சோமாலியா ஆப்பிரிக்கத் தட்டு மற்றும் அரேபியத் தட்டு என மூன்று டெக்டோனிக் தட்டுகளால் ஆனது. இவை இப்போது வெவ்வேறு வேகத்தில் விலகி வருகிறது. அரேபிய தட்டு ஆண்டுக்கு ஒரு அங்குலம் என்ற வேகத்தில் ஆப்பிரிக்காவில் இருந்து நகர்ந்து வருகிறது. அதேபோல இரண்டு ஆப்பிரிக்கத் தட்டுகளும் ஆண்டுக்கு அரை அங்குலம் முதல் 0.2 அங்குலம் வரை என்று மெதுவாகப் பிரிகிறது.
இதை ஆய்வாளர்கள் rifting என்கிறார்கள். அதேநேரம் இது ஏதோ புதிதாக நடக்கும் செயல்முறை இல்லை. பூமிக்கு அடியே இருக்கும் இந்த டெக்டோனிக் பிளேட்கள் நகர்ந்து கொண்டே தான் இருக்கும். அப்படித்தான் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு, ஆப்பிரிக்காவில் இருந்து தென் அமெரிக்கா பிரிந்தது. அதேபோல அரேபியத் தட்டு கடந்த 30 மில்லியன் ஆண்டுகளாகவே ஆப்பிரிக்காவிலிருந்து விலகிச் செல்கிறது. செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடா இதன் காரணமாகவே தோன்றியது குறிப்பிடத்தக்கது.
இப்படி மூன்று தட்டுகளும் பிரிவதால் புதிய கண்டம் நிச்சயம் உருவாகும் என்றே ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதேநேரம் இது ஏதோ உடனடியாக நடந்துவிடாது இது நடக்க 50 லட்சம் முதல் ஒரு கோடி ஆண்டுகள் வரை ஆகுமாம். எனவே, நாம் அச்சப்படத் தேவையில்லை.












Click it and Unblock the Notifications