அடேங்கப்பா.! கைதுக்கு பின் ஜெட் வேகத்தில் உயர்ந்த டிரம்ப் ஆதரவு.! இதுவரை இந்தளவு இருந்ததே இல்லை
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆபாச அழகிக்குப் பணம் கொடுத்த விவகாரத்தில் கடந்த வாரம் நீதிமன்றத்தில் கைதானார். ஆனால், இது அவருக்கு பாசிட்டிவாகவே திரும்பியுள்ளது.
முன்னாள் அமெரிக்க அதிபராக இருந்தவர் டிரம்ப். இவர் 2016ஆம் ஆண்டு முதல் 2020 வரை அமெரிக்க அதிபராக இருந்து வந்தார். இவர் அதிபராக இருந்த போது பல சர்ச்சைகளில் சிக்கினார். குறிப்பாக 2020 அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த டிரம்ப், தனது தோல்வியைக் கடைசி வரை ஒப்புக் கொள்ளவில்லை. தேர்தலில் நடந்த மிகப் பெரிய முறைகேடு காரணமாகவே தான் தேர்தலில் தோல்வியடைந்ததாகக் கூறி வன்முறையைத் தூண்டிவிட்டார்.

இந்த டொனால்ட் டிரம்ப் தான் இப்போது மற்றொரு பிரச்சினையில் மாட்டிக் கொண்டார். 2016 அதிபர் தேர்தலில் ஆபாச நடிகை ஸ்டார்மி டேனியல்சுக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் மாட்டிக் கொண்டிருக்கிறார். இதன் காரணமாக அவர் கடந்த செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்திலும் ஆஜராக வேண்டி இருந்தது. அப்போது போலீசார் வழக்கமான நடைமுறைகள்படி அவரை கைது செய்தனர். ஆனால், இது டிரம்பிற்கு பாசிட்டிவ் நியூஸாகவே மாறியுள்ளது. அரசியல் பழிவாங்கல் மற்றும் இடதுசாரி சதிக்குப் பலியாக ஒருவராகவும் டிரம்பை அவரது ஆதரவாளர்கள் பார்க்கிறார்கள். இதனால் அவரது ஆதரவு அதிகரித்துள்ளது.
கருத்துக்கணிப்பில் முன்னிலை

முன்னாள் அமெரிக்க அதிபர் ஒருவர் இதுபோன்ற கிரிமினல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வது இதுவே முதல்முறை. 2016 தேர்தல் சமயத்தில் ஆபாச நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ், முன்னாள் பிளேபாய் மாடல் கரேன் மெக்டௌகல் ஆகியோருக்கு பணம் கொடுத்ததாக வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்றத்தில் ஆஜராகும் போது தான் எந்தவொரு தவறும் செய்யவில்லை என்றே டொனால்ட் டிரம்ப் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். நியூயார்க்கில் நீதிமன்றத்தில் ஆஜரான பிறகு அவர் தனது சமூக வலைத்தளமான ட்ரூத் சோஷியல் பக்கத்தில், "இதுவரை வந்த சர்வே நம்பர்களில் இதுதான் பெஸ்ட். நமக்கான ஆதரவு அதிகரித்துள்ளது. மேலும், பிரச்சாரத்திற்காக சுமார் $10 மில்லியன் திரட்டப்பட்டது" என்று பதிவிட்டுள்ளார்.
தன் மீது திட்டமிட்டு பொய்யான தகவல்களைப் பரப்பி வருவதாகவே டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். அது வாக்காளர்கள் மத்தியில் நன்கு ரீச் ஆவதையே இது காட்டுகிறது. டிரம்பும் அவரது ஆதரவாளர்களும் நியூயார்க் மாவட்ட நீதிபதி ஆல்வின் பிராக்கை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். தன் மீதான குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுக்கும் டொனால்ட் டிரம்ப், அரசியல் காரணத்திற்காகவே தன் மீது விசாரணை நடத்தப்படுவதாகவும் விமர்சித்தார். கடந்த வாரம் டிரம்ப் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதன் பிறகு வெளியான யாகூ நியூஸ் சர்வேவில் இன்னுமே பெரும்பாலான குடியரசு கட்சியினர் டொனால்ட் டிரம்பிற்கே தங்கள் முழு ஆதரவைத் தருகிறார்கள்.
டிரம்ப் தாக்கு

இப்போது குடியரசு கட்சியில் மிகவும் பிரபலமாக இருக்கும் அவரே, அதிபர் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட வாய்ப்பு அதிகம். தன் மீதான விசாரணையைத் தொடர்ந்து டிரம்ப், அமெரிக்க பெடரல் நீதித்துறை மற்றும் எஃப்.பி.ஐக்கான நிதியைக் குறைக்கத் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று குடியரசுக் கட்சி எம்பிகளை வலியுறுத்தியுள்ளார். டிரம்ப் அதிபராக இருந்த போது தான் இத்துறைகளுக்கான நிதி அதிகரிக்கப்பட்டது. இப்போது அதே டிரம்ப் தான் நீதித்துறைக்கான நிதியைக் குறைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். ஆனால், டொனால்ட் டிரம்ப் மீதான விசாரணையை நடத்தியது பெடரல் அமைப்புகள் இல்லை.. மாறாக நியூயார்க் உள்ளூர் நீதிமன்றம் என்பது குறிப்பிடத்தக்கது.
ராய்ட்டர்ஸ் நடத்திய கருத்துக்கணிப்பில் டொனால்ட் டிரம்ப் மீதான நடவடிக்கை ஜனநாயக கட்சியினரின் பழிவாங்கல் நடவடிக்கை என்றே சுமார் 50% பேர் கருதுகின்றனர். அதேநேரம் சுமார் 70% பேர், அமெரிக்க அதிபருக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க முடியாது என்ற விதியை மாற்ற வேண்டும் என்றே கருதுகிறார்கள். அமெரிக்காவில் யாரும் சட்டத்திற்கு மேல் யாரும் இல்லை என்பதே இவர்கள் கருத்து.












Click it and Unblock the Notifications